Our Friend, Robot Raman
The Robot Who Made Sugar Rasam!

ரோபோ ராமனின் ரகளைகள்!

Published on

ஊரில் சமீபத்தில் ஒரு பெரிய அதிசயம் நடந்தது. “ரோபோ வந்துருச்சு!” என்று பஸ் நிலையத்திலிருந்து டீக்கடை வரை ஒரே பேச்சாக இருந்தது. அந்த ரோபோவின் பெயர் — ரோபோ ராமன். நகரிலிருந்து வந்த படித்த இளைஞன் கார்த்திக், “ஊருக்குப் பயன்படும்” என்று சொல்லி ராமனை அழைத்து வந்தான்.

ரோபோ ராமன் பார்ப்பதற்குச் சாதாரண மனிதனைப் போலவே இருந்தான். ஆனால், பேசும்போது மட்டும் இயந்திர சப்தம்: “வணக்கம்… வணக்கம்… நான்… ரோபோ… ராமன்.”

முதல் நாளே ஊர் தலைவர் ராமசாமி, “சரி ராமா, ஊருக்குள்ள என்ன வேலை செய்ய முடியும்னு காட்டுப் பார்ப்போம்” என்றார். ரோபோவிற்குச் சமையல் முதற்கொண்டு எல்லாம் தெரியும் என்று கார்த்திக் சொன்னதால், ஒரு சமையல் போட்டி வைத்தார்கள்.

இதையும் படியுங்கள்:
🌟The Pencil That Learned to Pause
Our Friend, Robot Raman

சமையலுக்குப் பெயர் போன லட்சுமி பாட்டி, “ரோபோவா இருந்தா என்ன? ரசம் வைக்கத் தெரியுமா?” என்று கிண்டல் அடித்தார். ரோபோ ராமன் சமையலறையில் நுழைந்து, “ரெசிபி… டவுன்லோட்… ஆகிறது…” என்றான். அவன் செய்த ரசத்தைச் சுவைத்த ஊர் மக்களுக்குச் சிரிப்புதான் வந்தது.

காரணம்: உப்புக்குப் பதிலாகச் சர்க்கரை! “இது ரசமா, பாயசமா?” என்று ஒருவன் கேட்டான். ரோபோ உடனே, “எரர்… எரர்… இனிப்பு… அதிகம்.” என்றான்.

அடுத்ததாக அவனைப் பள்ளிக்கு ஆசிரியராக அனுப்பினார்கள். கணக்கு ஆசிரியர் வராததால், ரோபோ ராமன் கரும்பலகைக்கு முன் நின்று, “இரண்டு… கூட்டல்… இரண்டு… சமம்… நான்கு” என்றான். ஒரு மாணவன் கையை உயர்த்தி, “சார், ஹோம்வொர்க் கொடுக்க மாட்டீங்களா?” என்று கேட்டான்.

ரோபோ சற்று யோசித்து, “ஹோம்வொர்க்… இல்லை… இன்று… ஹாலிடே… என் பேட்டரி… லோ” என்றான். மாணவர்கள் கைதட்டிச் சிரித்தார்கள்.

மிகப் பெரிய ரகளை கோவிலில்தான் நடந்தது. கோவில் திருவிழாவுக்கு மைக் செட் பார்க்கும் பொறுப்பை ரோபோவிடம் கொடுத்தார்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: வதன் & சுதன்
Our Friend, Robot Raman

பூஜை நடக்கும்போது, “ஓம் நமசிவாய…” என்று வரவேண்டிய இடத்தில், “பேட்டரி… சார்ஜ்… தேவை…” என்று மைக்கில் ஒலித்தது. பூசாரி, “அடப்பாவி! கடவுளுக்கே இப்படி அறிவிப்பு போடுறியே!” என்று சொல்ல, மக்கள் சிரிப்பில் மூழ்கினார்கள்.

ஒருநாள் சந்தைக்குக் காவலாளியாகவும் அவனை நிறுத்தினார்கள். திருடனைப் பார்த்தால் பிடிக்க வேண்டும். ஆனால் ரோபோ என்ன செய்தான்? “திருடனே… தயவு செய்து… நில்” என்று மெதுவாகச் சொன்னான். திருடன் சிரித்தபடி, “சரி ராமா, நீ பேசிட்டே இரு. நான் போயிட்டே இருக்கேன்” என்று ஓடி மறைந்தான்.

இத்தனை கலாட்டாவுக்குப் பிறகு கார்த்திக் சொன்னான், “ரோபோ புத்திசாலிதான்… ஆனா மனித நகைச்சுவை அதற்குப் புரியாது.”

அப்போது லட்சுமி பாட்டி சொன்னார், “மனிதன் சிரிச்சாதான் வாழ்க்கை இனிப்பா இருக்கும். ரோபோ மட்டும் சிரிக்கக் கத்துக்கிட்டா, நம்ம ஊருக்கே தலைவன் ஆகிடுவான்!”

அந்த நாளிலிருந்து ரோபோ ராமன் ஊரின் வேலைக்காரனாக இல்லாமல், ஊரின் நகைச்சுவை நாயகனாக மாறினான். அவன் எங்கு போனாலும், அங்கெல்லாம் சிரிப்பும் சேர்ந்து போனது.

logo
Kalki Online
kalkionline.com