

அரசருக்கு புதுமையான பொருட்கள் மீது ஆசை உண்டாவது இயல்பு. அதை அறிந்த அமைச்சர் ஒருவர் ஈரான் தேசத்திலிருந்து மிகவும் சுவையான சர்க்கரையை வரவழைத்து அரசரிடம் அளித்தார். அரசர் சர்க்கரையை சுவைத்து சாப்பிட்டு விட்டு அந்தப்புரத்திற்கு அனுப்பி வைத்தார்.
சர்க்கரையை எறும்புகள் மொய்த்ததால் அது முற்றத்தில் வெளியில் காய வைக்கப்பட்டது. அங்கே வந்த தெனாலிராமன் அதை பார்த்துவிட்டு, "அது என்ன?" என்று கேட்டான். "ஈரானிலிருந்து வந்த புதுமையான மணல்" என்று வேடிக்கையாகச் சொன்னார் அரசர்.
உள்ளே சென்று அரசர் ராணிகளிடம், "சர்க்கரையை மணல் என்று கூறி தெனாலிராமனை ஏமாற்றிவிட்டேன். அவனும் நம்பிவிட்டான்" என்று பெருமையாக சொன்னார் .
"ஏன் அவ்வாறு சொன்னீர்கள்?" என்று கேட்டனர் ராணிகள். "அந்த புதுமையான சர்க்கரையை அவன் கேட்டால் என்ன செய்வது?அதற்காகவே அப்படி சொன்னேன்" என்றார் அரசர். வெளியே ராணிகள் எட்டிப் பார்த்த போது, தெனாலிராமன் காய வைத்திருந்த சர்க்கரையை அள்ளி வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அரசரிடம் அதை தெரிவித்தார்கள் ராணிகள்.
அரசர் தெனாலிராமனை பார்த்து, "என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கேட்டார்.
"அரசே என் வீட்டு எருமை கன்று குட்டி இறந்து விட்டது. அந்த துக்கம் தாளாமல் இந்த புதுமையான மணலைத் தின்று கொண்டிருக்கிறேன்" என்றான்.
"ராமா..! உன்னை ஏமாற்றவே முடியாது போலும்" என்று கூறி சர்க்கரையை எடுத்து உள்ளே வைக்கும்படி சொன்னார். "மிகவும் சுவையாக இருக்கிறது" என்று கூறிச் சிரித்தான் தெனாலிராமன்.