

கேசரி நாட்டு மன்னனுக்கு ஒரு மகன் இருந்தான். அவனுக்கு வயது ஏழு. அதே போல் அமைச்சர் மகனுக்கும் அதே ஏழு வயதில் ஒரு மகன் இருந்தான்.
இருவரும் மிகவும் புகழ் பெற்ற குருவிடம் தங்கள் பிள்ளைகளை குருகுலம் சேர்க்க சென்றனர். குரு மிகவும் அமைதியானவர். அதே சமயம் சகல கலைகளையும் கற்றுணர்ந்தவர். அஸ்திர சாஸ்திரங்களில் பெரும் புலமை பெற்றவர். அவர் அறியாத கலைகள் எதுவுமே இல்லை. அவரிடம் தங்கள் இளவரசர்களை குருகுலம் பயில வைக்க தினம் தினம் பல நாட்டு மன்னர்கள் வந்து காத்திருப்பார்கள். ஆயினும் முனிவர் அதிகம் கேள்விகள் கேட்டு பரிசோதிக்க மாட்டார். ஒரே கேள்வி கேட்பார். அதில் வெற்றி பெற்றால் அவனை சீடனாக சேர்த்துக்கொள்வார். அவன் இளவரசனாக இருந்தாலும் சரி சாதாரண ஏழை தொழிலாளியின் மகனாக இருந்தாலும் இது தான் அந்த குருகுலத்தின் நியதி.
இப்போது மன்னர், அமைச்சர் தளபதி மற்றும் இராஐகுரு இவர்களுடன் தன் இளவரசன் மற்றும் அமைச்சர் மகன் ஆகியோருடன் குருவிடம் சென்றனர்.
குருவிடம் ஒரு சீடன் ஓடி சென்று விவரத்தை கூறினான். குரு அவனுக்கு ஒரு கட்டளை கொடுத்தார். ஓடி வந்த சீடன் மன்னர் அமைச்சர் இருவரின் மகன்களை மட்டும் குருகுலத்திற்கு வரும் படி குரு கூறியதாக அந்த சீடன் கூறினான்.
உடன் இளவரசனும், அமைச்சரின் மகனும் அந்த சீடனுடனேயே சென்றனர். குருவை இருவரும் வணங்கி பாதங்களை தொட்டு நமஸ்கரித்தனர். குரு ஒரே கேள்வி கேட்டார்.
"இந்த உலகின் அபார சக்தி யார்?" - குரு இருவரையும் பார்த்து கேட்டார்.
“நம்மை படைத்து காத்து கடைசியில் நம் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப நாழி கணக்கிட்டு அவனிடம் அழைத்துக்கொள்ளும் இறைவனே அபாரசக்தி என்றான் அமைச்சர் மகன்.”
நல்லது என்ற குருநாதர் மன்னர் மகனை பார்த்தார்.
அவன் பேசவில்லை. உடனே குருவை மூன்று முறை வலம் வந்து பாதம் தொட்டு நமஸ்கரித்து, "இந்த உலகின் அபார சக்தி தாங்களே" என்றான்.
"சரி, நான் என்று, எப்படி கூறுகிறாய்?" என்றார் குருநாதர்.
"சகல சாஸ்திரங்களும் அறிந்தவர்; சகல போர்க்கலைகளையும் கற்றவர்; நான் யார் என்று உணர்ந்தவர்; ஐம்புலன்களை கட்டுப்படுத்தி ஆன்ம தரிசனம் செய்பவர்; இறைவன் என்று அனைவரும் கூறினாலும் நாம் பார்த்தறியோம். ஆனால், பல இறைசக்கிகளின் முழு சக்தியும் ஒருங்கே கொண்ட ஒருவரே அபார சக்தி கொண்டவர். அவர் தாங்கள் தான்..!" என்றான் மன்னர் மகன்.
"சரி, இந்த சிறு வயதில் உனக்கு இவ்வளவு ஞானம் ஏற்பட நியாயம் இல்லைதான். உன் பதிலுக்கு ஏதோ ஒரு உந்துதல் இருக்க வேண்டும். அது என்ன?"
"குருநாதா.. நான் விநாயகர் மீது அபார பக்தி கொண்டவன். ஒரு முறை நாரதர் மாம்பழம் கொண்டு வந்து விநாயகர், முருகன் இருவரில் ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும். காரணம் பழத்தை பாதியாக வெட்டலாகாது. எனவே, மூன்று முறை உலகை வலம் வந்து யார் முதலில் வருகிறார்களோ அவர் மாம்பழத்துக்கு உரியவர் என்று கூறவும் முருகன் மயிலில் சுற்றினார். ஆனால், என் விநாயகரோ தாய் தந்தையே உலகம் என்று கூறி அம்மையையும் அப்பனையும் மூன்று முறை வலம் வந்து பழத்தையும் பரிசாக பெற்றார். விநாயகரே என் வெற்றிக்கு உந்துதல்" என்றதும் குருநாதர் புன்னகைத்து அவனை தட்டிக்கொடுத்து பின், "நல்லது..! நீ குருகுலம் உள்ளே போ” என்று பணித்தார்.
அமைச்சர் மகனை பார்த்து, "தம்பி, நீ குருகுலத்தின் வெளியே சென்று உன் பெற்றோரிடமும் மன்னரிடமும் மற்றவர்களிடமும் நடந்ததை கூறிவிடு" என்று அனுப்பிவைத்தார். அமைச்சர் மகன் தனக்கு குருகுலத்தில் இடம் கிடைக்காததால் சற்று மன வருத்தத்துடன் குருகுலத்தை விட்டு வெளியேறினான்.
நீதி: கல்வி என்பது அறிவுக்கு விதை. அது விற்கப்படுவது இல்லை. குழந்தைகளே புத்தியை தீட்டுங்கள். சிறந்த மாணவர்களாக விளங்கி நாட்டு மக்களின் வாழ்வை வளமாக்குங்கள்.