தெனாலிராமன் விகடகதை: பால் குடிக்காத பூனை!

Why Did the Cat Run Away from Milk?
Why Did the Cat Run Away from Milk? tenali raman story
Published on

விஜய நகரத்தில் எலி மற்றும் பெருச்சாளிகளின் தொல்லை தாங்காமல் பொதுமக்கள் மிகவும் துன்புற்றார்கள். அவர்கள் அரசரிடம் சென்று முறையிட்டார்கள். குடிமக்களின் துயரை நீக்குவதற்காக, அரசர் பாரசீக நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பூனைக்குட்டிகளை வரவழைத்தார். வீட்டுக்கு ஒரு பூனையைக் கொடுத்து, அதற்குப் பால் ஊற்றி வளர்ப்பதற்காக ஒரு பசுவையும் இலவசமாக அளித்தார்.

எல்லோருடைய வீட்டிலும் பசுவின் பாலைக் குடித்து பூனைகள் செழிப்பாக வளர்ந்தன; எலிகளைத் துரத்திப் பிடித்து அழித்தன. ஆனால், பசுவின் பால் முழுவதையும் பூனைக்கே ஊற்றியதால் மக்கள் உணவின்றி எலும்பும் தோலுமாக மெலிந்து போயினர்.

தெனாலிராமனோ தந்திரமாகச் செயல்பட்டான். பசுவின் பாலைக் கறந்து தானும் தன் மனைவி, மக்களும் குடித்து மகிழ்ந்தான். பூனைக்கோ சூடான பாலை வைத்து அதன் நாவைச் சுட வைத்தான். இதனால் அந்தப் பூனை பட்டினியாகக் கிடந்து மெலிந்து போனது.

இதையும் படியுங்கள்:
"அப்பத்தா சொல்லுதேன் கேட்டுக்கோ!"
Why Did the Cat Run Away from Milk?

சில மாதங்களுக்குப் பிறகு, தான் அளித்த பூனைகளைப் பார்வையிட அரசர் எண்ணினார். ஒரு குறிப்பிட்ட நாளில் அரண்மனை வளாகத்திற்குப் பூனைகளைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். அவ்வாறே ஒவ்வொருவரும் தாங்கள் வளர்த்த பூனைகளைக் கொண்டு வந்தனர். பூனைகள் எல்லாம் கொழு கொழுவென்று வளர்ந்திருந்தன; ஆனால், அவற்றை வளர்த்தவர்களோ எலும்பும் தோலுமாகத் தெரிந்தனர்.

அரசர் ஒவ்வொரு பூனையாகப் பார்த்துக் கொண்டு வரும்போது, எலும்பும் தோலுமாக மெலிந்து போயிருந்த ஒரு பூனையைக் கண்டு, “இது யார் வளர்த்த பூனை?” என்று கேட்டார். அருகில் நின்று கொண்டிருந்த தெனாலிராமன், “மன்னா, இது நான் வளர்த்த பூனை,” என்று கூறினான்.

அரசர் கோபமுற்று, “உன்னுடைய பூனைக்கு ஏன் பால் கொடுக்காமல் பட்டினியாகப் போட்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்குத் தெனாலிராமன், “அரசே, என் பூனை பாலைக் கண்டாலே குடிக்காமல் ஓட்டம் பிடிக்கிறது. அதற்கு நான் என்ன செய்வேன்?” என்றான்.

அதைக் கேட்டு வியப்படைந்த அரசர், “பால் குடிக்காத பூனை எங்கேயாவது உண்டா? நீ கூறுவது உண்மையானால் உனக்கு நூறு பொற்காசுகள் பரிசளிப்பேன்!” என்றார். உடனே பாலைக் கொண்டு வரச் செய்து, அந்தப் பூனையின் முன்னே வைக்கும்படி கட்டளையிட்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை : 'ஆல்-இன்-ஆல்' வாட்ச்...!
Why Did the Cat Run Away from Milk?

பாலைக் கண்டதும் அந்தப் பூனை அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது. காவலர்கள் அதைப் பிடித்து வந்து பார்த்தபோது, அதன் வாய் வெந்து புண்ணாகி இருப்பது தெரிந்தது.

“அடேய் சுயநலமி! பாலைச் சுட வைத்து பூனைக்கு வைத்தாயா? அதனால்தான் சூடு கண்ட பூனை பாலைக் கண்டதும் ஓட்டம் பிடிக்கிறது!” என அரசர் கோபத்தோடு கூறினார்.

தெனாலிராமன் பணிவுடன், “மன்னர் பெருமானே, என்னை மன்னியுங்கள். பூனைகளுக்குப் பால் வார்த்து வளர்ப்பதைக் காட்டிலும், குடிமக்களுக்குப் பாலும் உணவும் தாராளமாகக் கிடைப்பதற்கு வழி செய்வதே ஓர் அரசரின் முதன்மையான கடமை என்பதைத் தாங்களுக்கு உணர்த்தவே இப்படிச் செய்தேன்,” என்றான்.

தெனாலிராமனின் பரந்த மனப்பான்மையையும், மக்களின் மீதான அக்கறையையும் பாராட்டிய அரசர், தான் வாக்களித்தபடி நூறு பொற்காசுகளைப் பரிசாக அளித்தார். உடனே பூனைகளை எல்லாம் காட்டில் விடுமாறும், பசுவின் பால் மக்களுக்குச் சேருமாறும் கட்டளையிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com