

வீட்டிற்குள் நுழைந்ததும் மீனா அதட்டத் துவங்கினாள். "இங்க பாருங்க, இந்த மீனெல்லாம் நமக்கு செட் ஆகாது. பேசாம குளம், குட்டைல கொண்டு போய் விட்டுட்டு வந்துருங்க!" என்று சொன்னவாறு அடுக்களைக்குள் நுழைந்தாள்.
"ஏன்மா? பிள்ளைங்க ஆசைப்பட்டாங்கன்னு தான வாங்கிட்டு வந்தோம்? இப்ப இப்படி பேசுற?" என்று கனிவுடன் கேட்டான் பிரபு.
"பிள்ளைங்க ஆசைப்படுவாங்க... அதுக்குன்னு எல்லாத்துக்கும் ஓகே சொல்வீங்களா??" என்று கடுகடுத்தாள் மீனா.
மகன் நகுலன் மெதுவாகத் தாயின் அருகில் வந்து கொஞ்சினான். "அம்மா, அந்த ஆட்டோ அங்கிள் அவங்க பிடிச்ச மீனை நமக்காகத் தந்தாங்கல்லம்மா? பிளீஸ் மா, நாம வச்சுக்கலாம்மா. நானும் நிவிதாவும் பாத்துப்போம் மா," என்றான்.
மகனை நிமிர்ந்து பார்த்தவள், "அதெல்லாம் சரிப்பட்டு வராது நகுல்," என்றபடி எழுந்து சென்றாள். அந்த மீன்கள் தோட்டத்து டப்பில் இது எதுவும் தெரியாமல் நீந்திக் கொண்டிருந்தன.
மறுநாள் காலை பிள்ளைகள் அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தயார் செய்வதில் மும்முரமாக இருந்தாள் மீனா. அனைவரும் சென்ற பின்பு, அவள் கடைத்தெருவிற்குக் கிளம்பினாள். வரும்போது கையில் ஒரு பெரிய பெட்டியுடன் வந்தாள். அதை எவருக்கும் தெரியாமல் கட்டிலின் அடியில் தள்ளி வைத்துவிட்டு, தனது அன்றாடக் கடமைகளில் மூழ்கினாள்.
மாலை பிள்ளைகள் பள்ளியில் இருந்து திரும்பியபோது சோர்வுடன் வந்தனர். மீனா, "என்னப்பா ஆச்சு?" என்றாள்.
"இல்லம்மா, இன்னைக்கு நம்ம மீன் எல்லாம் போய்டும்ல..." என்றார்கள் சோகமாக.
மீனாவுக்கு என்னவோ போல ஆகியது. எதுவும் பேசாமல் கட்டிலின் அடியில் இருந்த பெட்டியை எடுத்து அவர்களிடம் கொடுத்தாள். கணவர் பிரபுவிற்கும் ஒன்றும் புரியவில்லை.
பெட்டியைத் திறந்து பார்த்த நகுல், அம்மாவை ஓடி வந்து கட்டிக் கொண்டான். "சூப்பர் மா! தேங்க்ஸ் மா!" என்று கொஞ்சினான். அருகில் வந்து பார்த்த பிரபு, "நேத்து என்னவோ 'இனி இந்த மீன் இங்க இருக்கக் கூடாது' அது இதுன்னு சொன்ன? இப்ப என்ன ஆச்சு? மீன் தொட்டி வாங்கிட்டு வந்து நிக்கிற?" என்றான் வியப்புடன்.
"இல்லங்க, நேத்து போன்ல வீடியோஸ், போட்டோஸ் பாத்துட்டு இருந்தேன். அப்ப அண்ணனும் தங்கச்சியும் அணைக்கட்டுல மீன் பிடிக்க அவ்ளோ பாடுபட்டுருக்காங்க. இதைப் பாத்துட்டு இருந்த ஒரு ஆட்டோகாரர், அவர் பசங்களுக்குப் பிடிச்ச மீனை இவங்களுக்காகக் கொடுத்துட்டுப் போயிருக்காரு..."
"ஓ! இது இப்பதான் மேடம்க்கு தெரியுதா?" என்றான் பிரபு கிண்டலாக.
"அப்படி இல்லைங்க... அந்த மீனை வாங்கும்போது அவங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்! அதான், இருக்குற வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும்னு நானே தொட்டி வாங்கிட்டு வந்துட்டேன்," என்றாள் மீனா.
"அது சரி, இதையே நான் செஞ்சிருந்தா திட்டியிருப்ப, இல்ல?" என்று சிரித்தான் பிரபு.
இதற்குள் நகுலும் நிவிதாவும் மீன்களைத் தொட்டியில் விட்டு, ஹாலில் இருந்த ஷெல்பில் அழகாக வைத்தனர். "அம்மா, அப்பா... வாங்க வந்து பாருங்க!" என்று கோரசாக அழைத்தனர். பிரபும் மீனாவும் தங்கள் 'இரு மீன்களின்' (பிள்ளைகளின்) மகிழ்ச்சியை ரசித்தபடி நின்றிருந்தனர்.