

ஆப்பிளை பார்த்தால் நமக்கு இரண்டு பேர்களை பற்றி ஞாபகம் வரவேண்டும். ஒன்று சர் ஐசக் நியூட்டன். ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்த அவர் தலையின்மேல் ஒரு ஆப்பிள் பழம் தொப்பென்று விழ, அது ஏன் கீழே விழ வேண்டும்; மேலே ஏன் போகவில்லை? என்றெல்லாம் யோசித்து பூமியின் ஈர்ப்பு விசையை கண்டறிந்தார்.
வேறு யாராக இருந்திருந்தா என்ன விழுந்தது எப்படி விழுந்தது என்று ஆராயாமல் ஆப்பிளை குரங்கை போல கடித்து சாப்பிட்டு இருப்பார்கள். ஆப்பிளை பார்க்கும் போது நமக்கு இன்னொருவரை பற்றியும் ஞாபகம் வர வேண்டும். அது வேறு யாருமில்லை வில்லியம் டெல் என்ற வில்வீரன் தான்.
ஸ்விட்சர்லாந்த் ஆஸ்ட்ரியாவின் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் இருந்தவர்தான் இந்த வில்லியம் டெல் (William Tell) ஸ்விட்சர்லாந்தின் விடுதலை இயக்கத்திற்கு வித்திட்டவர்தான் இந்த வில்லியம். புரட்சியாளர் என்ற காரணத்தினால் அவரை பிடித்து கொல்ல முடிவெடுக்கப்பட்டது. அப்போது ஆஸ்திய கவர்னர் அவருக்கு மரண தண்டனையிலிருந்து தப்ப ஒரு வாய்ப்பு கொடுத்தார்.
"உன் மகன் தலையில் ஒரு ஆப்பிளை வைத்து ஒரு மரத்தடியில் நிற்க வைக்கிறேன். அந்த ஆப்பிளை நீ குறி தவறாமல் அம்பு எய்து சுட்டால் உன்னை விட்டு விட சொல்கிறேன். எப்படி உன் சௌகர்யம்?" என்று கூறி ஏளனமாக சிரித்தான்.
வில்லியம் டெல் ஒரு கணம் தயங்கினாலும், அவரது மகன் துளியும் தயங்காமல் மரத்தடிக்குச் சென்று தனது தலையில் ஒரு ஆப்பிளை வைத்து கொண்டு நின்றான். தனது தந்தையின் வில் எய்தும் திறமையில் அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. வில்லியம் டெல் அம்பை வில்லில் வைத்து தயாரானபோது அங்கு கூடியிருந்த மக்கள் மூச்சு ஒரு கணம் நின்றது.
குறி ஒரு இன்ச் தவறினால் கூட, சிறுவனின் தலை தகர்ந்துவிடும். வில்லியம் டெல் விட்டார் அம்பை. அது பறந்து போய் ஆப்பிளை மட்டும் தாக்கி இரண்டாக பிளந்தது. கூட்டம் ஆசுவாச பெரு மூச்சு விட்டது. கவர்னரின் முகம் சுருங்கிப் போனது. வில்லியம் டெல்லை பார்த்து அவன் சொன்னான்.
"உன் குறி தவறி உன் மகன் தலை துண்டாகி இருந்தால், என்ன செய்திருப்பாய்?'' அதற்கு வில்லியம் டெல், "என் மகனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்கும் பட்சத்தில், உன்னை கொல்ல இதோ தயாராக இந்த இரண்டாவது அம்பை வைத்திருந்தேன்" என்று மறைத்து வைத்திருந்த இன்னொரு அம்பை காண்பித்தார்.