ஒரு நிருபரின் டைரி – 16.– எஸ். சந்திரமெளலி.'1961ம் வருடம். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர்' என்ற பெருமைக்குரிய ருஷ்ய நாட்டுக்காரரான 'யூரி காகரின்' ஹைதராபாத் வந்திருந்தார். அவருடன் பள்ளி மாணவர்களது சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறையப் பேர் காரிகனுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளவும் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கவும் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த கூட்டத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒரு சிறுவன் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தான். ஆனால் பிற்காலத்தில் தானும் விண்வெளிக்குச் செல்லப்போகிறோம் என்பதோ, இதேபோல ஏராளமானவர்கள் தன்னை ஆட்டோகிராஃப் கேட்டு மொய்க்கப்போகிறார்கள் என்றோ அவனுக்கே தெரியாது. அந்தச் சிறுவன்தான் ராகேஷ் சர்மா, பிற்காலத்தில் விமானப் படையில் சேர்ந்து ஸ்குவாட்ரன் லீடர் ஆகி விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்திய சாதனையாளர்..1949ல் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தவர் ராகேஷ் சர்மா. 1984ல் அவர் இந்திய விமானப்படையில் பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில்தான் விண்வெளிப் பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் ராகேஷ் சர்மாதான் என்றபோதிலும் உலகின் 138வது விண்வெளி வீரர் அவர். ருஷ்ய அரசாங்கம் அவருக்கு "ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்" என்ற விருதளித்து கௌரவித்தது. இந்திய அரசு அவருக்கு "அசோக் சக்ரா'" விருது வழங்கியது. விமானப் படையிலிருந்து விங் கமாண்டர் ஆக ரிடையர் ஆன ராகேஷ் சர்மா அதன் பிறகு ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் சீஃப் டெஸ்ட் பைலட்டாகப் பணியாற்றினார்..1984ல் விண்வெளிப் பயணம் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ராகேஷ் சர்மாவும், ராகேஷ் சர்மாவால் கடைசி நிமிடத்தில் விண்வெளிக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக விண்வெளிக்குச் செல்லத் தயார் செய்யப்பட்டவரான ரவீஷ் மல்ஹோத்ராவும் சென்னை வந்திருந்தார்கள். அவர்களைத் தாம்பரம் விமானப் படைத் தளத்தின் ஆஃபீசர்ஸ் மெஸ்ஸில் தாம்பரம் விமானப்படையினரது குடும்பத்தினர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட சுவாரசியமான தகவலை விமானப்படை அதிகாரி சந்திர சேகரன் சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்..அங்கே ராகேஷ் சர்மாவும், ரவீஷ் மல்ஹோத்ராவும் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார்கள். "ராகேஷ் விண்வெளியில் பறந்துகொண்டிருந்த சமயம் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?" என்று ரவீஷிடம் ஒரு நிருபர் கேட்டபோது, "பூமியில் இருந்த கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விண்கலத்தையும் ராகேஷையும் கவனித்துக் கொண்டிருந்தேன்" என்றார். இடையில் புகுந்த ராகேஷ் சர்மா "விண்வெளியில் தன்னந்தனியாக பறந்துகொண்டிருந்த சமயத்தில் நம்முடைய நெருங்கிய சகா ஒருவர் பூமியிலிருந்து சதா தன்னைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்ற எண்ணமே எனக்கு மிகுந்த மனோதைரியத்தைக் கொடுத்தது" என்றார்.."எங்களுக்கு ஏதாவது ஒரு யோகா செய்து காட்டுங்களேன்" என்று ஒருவர் ராகேஷ் சர்மாவிடம் கேட்டதற்கு அர்த்தம் உண்டு. காரணம், விண்வெளி நிலையத்தில் ராகேஷ் சர்மா சில யோகா பயிற்சிகளைச் செய்தார். "விண்வெளியிலேயே இருக்கச் சொன்னால் இருந்து விடுவீர்களா?" என்று ராகேஷ் சர்மாவிடம் ஒருவர் கேட்டபோது " நோ! பூமியில் வசிக்கவும் விண்வெளிக்குச் சென்று வரவும் பிரியப்படுகிறேன்" என்று பதிலளித்தார்..தாம்பரத்திலிருந்து புறப்பட்டு வள்ளுவர் கோட்டம்வரை திறந்த ஜீப்பில் ராகேஷ் சர்மாவும் ரவீஷ் மல்ஹோத்ராவும் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்கள். வழி நெடுக சாலையின் இரண்டு பக்கங்களிலும் மக்கள் நின்று கை அசைத்து அவர்களை உற்சாகமூட்டினார்கள். பலருக்கும் இரண்டு பேரில் யார் ராகேஷ் ? யார் ரவீஷ்? என்று அடையாளம் தெரியவில்லை. இரண்டு பேருமே விமானப்படைச் சீருடையில் இருந்தார்கள். பார்வையாளர் ஒருவர் சட்டென்று அடையாளம் சொன்னார்: "மீசை இல்லாதவர் ராகேஷ்; மீசை வைத்திருப்பவர் ரவீஷ்.".வள்ளுவர் கோட்டத்தில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் விண்வெளி வீரர்களுக்குப் பாராட்டு விழா. ராகேஷ், ரவீஷ் இருவரும் சின்ன உரையாற்றினார்கள். அவர்களது பேச்சைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொன்ன அவ்வை நடராஜன், ராகேஷ் சர்மா, ரவீஷ் மல்ஹோத்ரா இருவரிடமும் ஒரு புதிர் போட்டார். "ராகேஷ் சர்மாவுக்கு முன்னதாகவே எங்கள் முதலமைச்சர் ஒரு விண்வெளிவீரர்" என்று சொல்லி அவர்களுக்கு மட்டுமின்றி அவையினரருக்கும் சஸ்பென்ஸ் கொடுத்தார். அவரே சஸ்பென்சையும் உடைத்தார்: "பல வருடங்களுக்கு முன்னால் கலையரசி என்ற திரைப்படத்தில் எங்கள் முதலமைச்சர் விண்வெளி வீரராக நடித்திருக்கிறார்" என்றபோது அதை எம்.ஜி.ஆர்.கூட ரசித்தார்..அன்று இரவு எட்டு மணிக்கு விண்வெளி வீரர்களுக்கு ராஜாஜி ஹாலில் தமிழக அரசின் சார்பில் ஒரு விருந்துக்கு ஏற்பாடாகி இருந்தது. பத்திரிகையாளர்கள் உள்படச் சுமார் 400 பேர் கலந்துகொண்டார்கள். விருந்தின் முடிவில் விண்வெளி வீரர்களுக்கு நினைவுப் பரிசாக நடராஜர் சிலையும் தஞ்சாவூர்த் தட்டும் வழங்கப்பட்டது. அவர்களின் திருமதிகளுக்குப் பட்டுப் புடைவையும், அவர்களின் குழந்தைகளுக்கு எல்காட் கைக் கடிகாரமும் பரிசளிக்கப்பட்டது. நான் ராகேஷ் சர்மாவிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டேன்..ராகேஷ் சர்மா ரிடையர்மென்ட்டுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் குன்னூரில் செட்டில் ஆகிவிட்டார். இன்றைக்குக்கூடக் கல்லூரிகளில் அவரைப் பேச அழைக்கிறார்கள். அவரிடம் பலரும் கேட்கிற ஒரு கேள்வி: "விண்வெளியிலிருந்து இந்தியாவைப் பார்த்தபோது எப்படி இருந்தது?" அன்றும், இன்றும், என்றும் அவர் சொல்லும் பதில்: "சாரே ஜஹான் சே அச்சா!" அப்புறம் இன்னொன்றும் சொல்கிறார். "முதல் நாள் இந்தியாவைப் பார்த்தேன். அடுத்தடுத்த நாள்களில் ஒட்டு மொத்த உலகமும் என் தாய் நாடு போலத்தான் உணர்ந்தேன்.".1984ல் விண்வெளி வீரர்களைச் சந்தித்த எனக்கு, 1997ல் இந்தியா ராக்கெட் செலுத்தும்போது ஸ்ரீஹரி கோட்டாவுக்குச் சென்று பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு ராக்கெட் லாஞ்சின்போதும் பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ சென்னையிலிருந்து சில பத்திரிகையாளர்களை ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அழைத்துக் கொண்டுபோகும். அப்போது நானும் அந்தக் குழுவில் இடம்பெற்றேன். அதுவரை இந்திய விண்வெளிச் சரித்திரத்தில் இடம்பெற்ற ராக்கெட் ஏவும் நிகழ்ச்சிகளை வீட்டில் டி.வி.யில் பார்த்துப் பழகியிருந்த எனக்கு ஸ்ரீஹரிகோட்டாவுக்கே நேரில் சென்று நெருப்பையும் புகையையும் கக்கியபடி வெள்ளை நிற ராக்கெட் மேலே எழும்புவதையும் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி அகம் மகிழ்ந்தபடியே பெருமை பிடிபடாமல் பத்திரிகையாளர்களுக்கான பஸ்ஸில் எறி உட்கார்ந்தேன்..தடாவைத் தாண்டி சூலூர்பேட்டைக்கு அப்புறம் ஓர் இடது பக்கத் திருப்பம். இரண்டு பக்கமும் ஏரி. நடுவே செமத்தியாக இரை தின்றுவிட்டுப் படுத்துக் கிடக்கும் பாம்பு போல ஒரு தார் ரோடு. ஈ, காக்கை நடமாட்டமில்லை. அந்த ரோடு முடியும் இடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக வளாகம் ஆரம்பிக்கிறது. ஏற்கனவே அது பாதுகாக்கப்பட்ட பகுதி. அன்று ராக்கெட் ஏவுதலைப் பார்க்கப் பிரதமர் குஜராலும் வந்திருந்ததால் செக்யூரிடி கெடுபிடிகள் இன்னும் அதிகம்..ஐ.எஸ்.ஆர்.ஓ. உயர் அதிகாரி ஒருவரிடம் "ராக்கெட் புறப்படுவதை எவ்வளவு அருகில் இருந்து பார்க்கப்போகிறோம்?" என்று கேட்டேன். அதற்கு அவர்,"ராக்கெட் புறப்படும் தளத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் 'ஜீரோ ஸோன்" என்ற கட்டுப்பாட்டு மையம் இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருக்கும் சுமார் 400 விஞ்ஞானிகள் அங்கேதான் அமர்ந்து ராக்கெட்டைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அங்கே பார்வையாளர்களுக்காக ஒரு பிரத்யேகமான கண்ணாடி அறை உள்ளது….."."ஓ! அத்தனை தூரத்திலிருந்துதான் நாங்கள் ராக்கெட் மேலே செல்வதைப் பார்க்க முடியுமா?"."ஸாரி சார்! அது பிரதமர் மற்றும் இதர வி.வி.ஐ.பி.க்களுக்கான ஸ்பெஷல் அறை."."அப்படியென்றால் அங்கே இருக்கும் வேறு அறையில் இருந்துதான் நாங்கள் பார்க்க முடியுமா?"."ரொம்ப அவசரப்படறீங்களே! அந்தக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, அதிகமில்லை, மூணே கிலோ மீட்டர் தூரத்தில் பிரம்ம பிரகாஷ் ஆடிட்டோரியம் என்று ஒரு பெரிய அரங்கம். அங்கே அமர்ந்து நீங்கள் ராக்கெட் மேலே செல்வதைப் பார்க்கலாம்."."ஆடிட்டோரியத்தின் உள்ளே அமர்ந்து எப்படி சார் ராக்கெட் புறப்படுவதைப் பார்க்க முடியும்?"."டோன்ட் ஒர்ரி! உங்களுக்காக ஒரு குளோஸ்டு சர்க்யூட் டி.வி. அங்கே வைத்திருக்கிறோம்.".ஏமாற்றத்துடன் "அடப் போங்க சார்! இதுக்கு ஏன் ஸ்ரீஹரிகோட்டாவரைக்கும் வரணும்? வீட்டுலயே சோஃபாவுல சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, டி.வி.யில லைவ் கவரேஜைப் பார்த்திருக்கலாமே" என்றேன்..அடுத்து, "கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் கூட ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்க்க முடியாது; அவருக்கும் டி.வி.தான்!" என்றபோது, "ஓ!" என்று அற்ப திருப்தி அடைந்தேன்..சில புத்திசாலி ஃபோட்டோகிராஃபர்கள் பிரம்ம பிரகாஷ் அரங்கத்தின் மொட்டை மாடிக்குப் போனால் ராக்கெட் ஏவுதளத்தைப் பார்க்க முடியுமோ என்ற நம்பிக்கையோடு படியேறிச் சென்றார்கள். ஆனால் பாவம், சுற்றிலும் மரங்கள், மரங்கள் மற்றும் மரங்கள்தான்! ஏவுகளம் எந்தத் திசையில் இருக்கிறது என்பதுகூடத் தெரியவில்லை..ஒரு நிஜ புத்திசாலி, மொட்டை மாடியின் தரையில் போடப்பட்டிருந்த அம்புக்குறியைக் கண்டுபிடித்துச் சொல்ல, எல்லாரும் அம்புக்குறி காட்டிய திசையில் காமெராக்களைத் திருப்பி ராக்கெட்டைச் சுடத் தயாரானார்கள். அரங்கத்தின் உள்ளே டி.வி.யின்மீது ஒரு டிஜிட்டல் கடிகாரம் கவுன்ட் டவுன் எண்ணிக்கையைக் காட்டிக்கொண்டிருந்தது. டிஜிட்டல் கடிகாரத்தில் நிமிடங்கள் கரைந்து வினாடிகள் பளிச்சிட்டன..50…49.. ….30……24….18….14.. 11.. 10…."பத்திரிகை நண்பர்களே, ஒரு சரித்திரச் சாதனையைக் கண்டு மகிழ நீங்கள் தயாரா?" பில்ட் அப் கொடுத்தார் அதிகாரி..9…8…7……..4..நம்மையும் அறியாமல் உடம்பு இருக்கையின் நுனிக்கு வந்தது..3..2…1..பூஜ்ஜியம் வந்த கணத்தில் டி.வி. திரையில் ராக்கெட்டின் அடிப்பகுதியில் பட்டாசுத் திரி கணக்காக நெருப்பு பற்றியது. தடதடவென்று அந்தப் பிராந்தியத்தையே அதிரவைக்கும் சப்தத்துடன் ராக்கெட் புறப்பட்டது. அரங்கமே கை தட்டி ஆர்ப்பரித்தது. யாரோ ஒருவர் 'பாரத் மாதாகீ!" என்று குரல் கொடுக்க அத்தனை பேரும் "ஜே!" சொன்னார்கள்..ஸ்ரீஹரிகோட்டாவுக்குப் போய் அரங்கத்தின் உள்ளே அமர்ந்து டி.வி.யில் பார்த்தாலும், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சந்தோஷத்தில் நேரில் கலந்துகொண்ட சந்தோஷம் எல்லோர் மனத்திலும் நிறைந்து இருந்ததை உணர முடிந்தது..(தொடரும்)
ஒரு நிருபரின் டைரி – 16.– எஸ். சந்திரமெளலி.'1961ம் வருடம். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர்' என்ற பெருமைக்குரிய ருஷ்ய நாட்டுக்காரரான 'யூரி காகரின்' ஹைதராபாத் வந்திருந்தார். அவருடன் பள்ளி மாணவர்களது சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறையப் பேர் காரிகனுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளவும் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கவும் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த கூட்டத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒரு சிறுவன் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தான். ஆனால் பிற்காலத்தில் தானும் விண்வெளிக்குச் செல்லப்போகிறோம் என்பதோ, இதேபோல ஏராளமானவர்கள் தன்னை ஆட்டோகிராஃப் கேட்டு மொய்க்கப்போகிறார்கள் என்றோ அவனுக்கே தெரியாது. அந்தச் சிறுவன்தான் ராகேஷ் சர்மா, பிற்காலத்தில் விமானப் படையில் சேர்ந்து ஸ்குவாட்ரன் லீடர் ஆகி விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்திய சாதனையாளர்..1949ல் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தவர் ராகேஷ் சர்மா. 1984ல் அவர் இந்திய விமானப்படையில் பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில்தான் விண்வெளிப் பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் ராகேஷ் சர்மாதான் என்றபோதிலும் உலகின் 138வது விண்வெளி வீரர் அவர். ருஷ்ய அரசாங்கம் அவருக்கு "ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்" என்ற விருதளித்து கௌரவித்தது. இந்திய அரசு அவருக்கு "அசோக் சக்ரா'" விருது வழங்கியது. விமானப் படையிலிருந்து விங் கமாண்டர் ஆக ரிடையர் ஆன ராகேஷ் சர்மா அதன் பிறகு ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் சீஃப் டெஸ்ட் பைலட்டாகப் பணியாற்றினார்..1984ல் விண்வெளிப் பயணம் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ராகேஷ் சர்மாவும், ராகேஷ் சர்மாவால் கடைசி நிமிடத்தில் விண்வெளிக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக விண்வெளிக்குச் செல்லத் தயார் செய்யப்பட்டவரான ரவீஷ் மல்ஹோத்ராவும் சென்னை வந்திருந்தார்கள். அவர்களைத் தாம்பரம் விமானப் படைத் தளத்தின் ஆஃபீசர்ஸ் மெஸ்ஸில் தாம்பரம் விமானப்படையினரது குடும்பத்தினர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட சுவாரசியமான தகவலை விமானப்படை அதிகாரி சந்திர சேகரன் சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்..அங்கே ராகேஷ் சர்மாவும், ரவீஷ் மல்ஹோத்ராவும் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார்கள். "ராகேஷ் விண்வெளியில் பறந்துகொண்டிருந்த சமயம் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?" என்று ரவீஷிடம் ஒரு நிருபர் கேட்டபோது, "பூமியில் இருந்த கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விண்கலத்தையும் ராகேஷையும் கவனித்துக் கொண்டிருந்தேன்" என்றார். இடையில் புகுந்த ராகேஷ் சர்மா "விண்வெளியில் தன்னந்தனியாக பறந்துகொண்டிருந்த சமயத்தில் நம்முடைய நெருங்கிய சகா ஒருவர் பூமியிலிருந்து சதா தன்னைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்ற எண்ணமே எனக்கு மிகுந்த மனோதைரியத்தைக் கொடுத்தது" என்றார்.."எங்களுக்கு ஏதாவது ஒரு யோகா செய்து காட்டுங்களேன்" என்று ஒருவர் ராகேஷ் சர்மாவிடம் கேட்டதற்கு அர்த்தம் உண்டு. காரணம், விண்வெளி நிலையத்தில் ராகேஷ் சர்மா சில யோகா பயிற்சிகளைச் செய்தார். "விண்வெளியிலேயே இருக்கச் சொன்னால் இருந்து விடுவீர்களா?" என்று ராகேஷ் சர்மாவிடம் ஒருவர் கேட்டபோது " நோ! பூமியில் வசிக்கவும் விண்வெளிக்குச் சென்று வரவும் பிரியப்படுகிறேன்" என்று பதிலளித்தார்..தாம்பரத்திலிருந்து புறப்பட்டு வள்ளுவர் கோட்டம்வரை திறந்த ஜீப்பில் ராகேஷ் சர்மாவும் ரவீஷ் மல்ஹோத்ராவும் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்கள். வழி நெடுக சாலையின் இரண்டு பக்கங்களிலும் மக்கள் நின்று கை அசைத்து அவர்களை உற்சாகமூட்டினார்கள். பலருக்கும் இரண்டு பேரில் யார் ராகேஷ் ? யார் ரவீஷ்? என்று அடையாளம் தெரியவில்லை. இரண்டு பேருமே விமானப்படைச் சீருடையில் இருந்தார்கள். பார்வையாளர் ஒருவர் சட்டென்று அடையாளம் சொன்னார்: "மீசை இல்லாதவர் ராகேஷ்; மீசை வைத்திருப்பவர் ரவீஷ்.".வள்ளுவர் கோட்டத்தில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் விண்வெளி வீரர்களுக்குப் பாராட்டு விழா. ராகேஷ், ரவீஷ் இருவரும் சின்ன உரையாற்றினார்கள். அவர்களது பேச்சைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொன்ன அவ்வை நடராஜன், ராகேஷ் சர்மா, ரவீஷ் மல்ஹோத்ரா இருவரிடமும் ஒரு புதிர் போட்டார். "ராகேஷ் சர்மாவுக்கு முன்னதாகவே எங்கள் முதலமைச்சர் ஒரு விண்வெளிவீரர்" என்று சொல்லி அவர்களுக்கு மட்டுமின்றி அவையினரருக்கும் சஸ்பென்ஸ் கொடுத்தார். அவரே சஸ்பென்சையும் உடைத்தார்: "பல வருடங்களுக்கு முன்னால் கலையரசி என்ற திரைப்படத்தில் எங்கள் முதலமைச்சர் விண்வெளி வீரராக நடித்திருக்கிறார்" என்றபோது அதை எம்.ஜி.ஆர்.கூட ரசித்தார்..அன்று இரவு எட்டு மணிக்கு விண்வெளி வீரர்களுக்கு ராஜாஜி ஹாலில் தமிழக அரசின் சார்பில் ஒரு விருந்துக்கு ஏற்பாடாகி இருந்தது. பத்திரிகையாளர்கள் உள்படச் சுமார் 400 பேர் கலந்துகொண்டார்கள். விருந்தின் முடிவில் விண்வெளி வீரர்களுக்கு நினைவுப் பரிசாக நடராஜர் சிலையும் தஞ்சாவூர்த் தட்டும் வழங்கப்பட்டது. அவர்களின் திருமதிகளுக்குப் பட்டுப் புடைவையும், அவர்களின் குழந்தைகளுக்கு எல்காட் கைக் கடிகாரமும் பரிசளிக்கப்பட்டது. நான் ராகேஷ் சர்மாவிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டேன்..ராகேஷ் சர்மா ரிடையர்மென்ட்டுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் குன்னூரில் செட்டில் ஆகிவிட்டார். இன்றைக்குக்கூடக் கல்லூரிகளில் அவரைப் பேச அழைக்கிறார்கள். அவரிடம் பலரும் கேட்கிற ஒரு கேள்வி: "விண்வெளியிலிருந்து இந்தியாவைப் பார்த்தபோது எப்படி இருந்தது?" அன்றும், இன்றும், என்றும் அவர் சொல்லும் பதில்: "சாரே ஜஹான் சே அச்சா!" அப்புறம் இன்னொன்றும் சொல்கிறார். "முதல் நாள் இந்தியாவைப் பார்த்தேன். அடுத்தடுத்த நாள்களில் ஒட்டு மொத்த உலகமும் என் தாய் நாடு போலத்தான் உணர்ந்தேன்.".1984ல் விண்வெளி வீரர்களைச் சந்தித்த எனக்கு, 1997ல் இந்தியா ராக்கெட் செலுத்தும்போது ஸ்ரீஹரி கோட்டாவுக்குச் சென்று பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு ராக்கெட் லாஞ்சின்போதும் பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ சென்னையிலிருந்து சில பத்திரிகையாளர்களை ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அழைத்துக் கொண்டுபோகும். அப்போது நானும் அந்தக் குழுவில் இடம்பெற்றேன். அதுவரை இந்திய விண்வெளிச் சரித்திரத்தில் இடம்பெற்ற ராக்கெட் ஏவும் நிகழ்ச்சிகளை வீட்டில் டி.வி.யில் பார்த்துப் பழகியிருந்த எனக்கு ஸ்ரீஹரிகோட்டாவுக்கே நேரில் சென்று நெருப்பையும் புகையையும் கக்கியபடி வெள்ளை நிற ராக்கெட் மேலே எழும்புவதையும் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி அகம் மகிழ்ந்தபடியே பெருமை பிடிபடாமல் பத்திரிகையாளர்களுக்கான பஸ்ஸில் எறி உட்கார்ந்தேன்..தடாவைத் தாண்டி சூலூர்பேட்டைக்கு அப்புறம் ஓர் இடது பக்கத் திருப்பம். இரண்டு பக்கமும் ஏரி. நடுவே செமத்தியாக இரை தின்றுவிட்டுப் படுத்துக் கிடக்கும் பாம்பு போல ஒரு தார் ரோடு. ஈ, காக்கை நடமாட்டமில்லை. அந்த ரோடு முடியும் இடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக வளாகம் ஆரம்பிக்கிறது. ஏற்கனவே அது பாதுகாக்கப்பட்ட பகுதி. அன்று ராக்கெட் ஏவுதலைப் பார்க்கப் பிரதமர் குஜராலும் வந்திருந்ததால் செக்யூரிடி கெடுபிடிகள் இன்னும் அதிகம்..ஐ.எஸ்.ஆர்.ஓ. உயர் அதிகாரி ஒருவரிடம் "ராக்கெட் புறப்படுவதை எவ்வளவு அருகில் இருந்து பார்க்கப்போகிறோம்?" என்று கேட்டேன். அதற்கு அவர்,"ராக்கெட் புறப்படும் தளத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் 'ஜீரோ ஸோன்" என்ற கட்டுப்பாட்டு மையம் இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருக்கும் சுமார் 400 விஞ்ஞானிகள் அங்கேதான் அமர்ந்து ராக்கெட்டைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அங்கே பார்வையாளர்களுக்காக ஒரு பிரத்யேகமான கண்ணாடி அறை உள்ளது….."."ஓ! அத்தனை தூரத்திலிருந்துதான் நாங்கள் ராக்கெட் மேலே செல்வதைப் பார்க்க முடியுமா?"."ஸாரி சார்! அது பிரதமர் மற்றும் இதர வி.வி.ஐ.பி.க்களுக்கான ஸ்பெஷல் அறை."."அப்படியென்றால் அங்கே இருக்கும் வேறு அறையில் இருந்துதான் நாங்கள் பார்க்க முடியுமா?"."ரொம்ப அவசரப்படறீங்களே! அந்தக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, அதிகமில்லை, மூணே கிலோ மீட்டர் தூரத்தில் பிரம்ம பிரகாஷ் ஆடிட்டோரியம் என்று ஒரு பெரிய அரங்கம். அங்கே அமர்ந்து நீங்கள் ராக்கெட் மேலே செல்வதைப் பார்க்கலாம்."."ஆடிட்டோரியத்தின் உள்ளே அமர்ந்து எப்படி சார் ராக்கெட் புறப்படுவதைப் பார்க்க முடியும்?"."டோன்ட் ஒர்ரி! உங்களுக்காக ஒரு குளோஸ்டு சர்க்யூட் டி.வி. அங்கே வைத்திருக்கிறோம்.".ஏமாற்றத்துடன் "அடப் போங்க சார்! இதுக்கு ஏன் ஸ்ரீஹரிகோட்டாவரைக்கும் வரணும்? வீட்டுலயே சோஃபாவுல சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, டி.வி.யில லைவ் கவரேஜைப் பார்த்திருக்கலாமே" என்றேன்..அடுத்து, "கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் கூட ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்க்க முடியாது; அவருக்கும் டி.வி.தான்!" என்றபோது, "ஓ!" என்று அற்ப திருப்தி அடைந்தேன்..சில புத்திசாலி ஃபோட்டோகிராஃபர்கள் பிரம்ம பிரகாஷ் அரங்கத்தின் மொட்டை மாடிக்குப் போனால் ராக்கெட் ஏவுதளத்தைப் பார்க்க முடியுமோ என்ற நம்பிக்கையோடு படியேறிச் சென்றார்கள். ஆனால் பாவம், சுற்றிலும் மரங்கள், மரங்கள் மற்றும் மரங்கள்தான்! ஏவுகளம் எந்தத் திசையில் இருக்கிறது என்பதுகூடத் தெரியவில்லை..ஒரு நிஜ புத்திசாலி, மொட்டை மாடியின் தரையில் போடப்பட்டிருந்த அம்புக்குறியைக் கண்டுபிடித்துச் சொல்ல, எல்லாரும் அம்புக்குறி காட்டிய திசையில் காமெராக்களைத் திருப்பி ராக்கெட்டைச் சுடத் தயாரானார்கள். அரங்கத்தின் உள்ளே டி.வி.யின்மீது ஒரு டிஜிட்டல் கடிகாரம் கவுன்ட் டவுன் எண்ணிக்கையைக் காட்டிக்கொண்டிருந்தது. டிஜிட்டல் கடிகாரத்தில் நிமிடங்கள் கரைந்து வினாடிகள் பளிச்சிட்டன..50…49.. ….30……24….18….14.. 11.. 10…."பத்திரிகை நண்பர்களே, ஒரு சரித்திரச் சாதனையைக் கண்டு மகிழ நீங்கள் தயாரா?" பில்ட் அப் கொடுத்தார் அதிகாரி..9…8…7……..4..நம்மையும் அறியாமல் உடம்பு இருக்கையின் நுனிக்கு வந்தது..3..2…1..பூஜ்ஜியம் வந்த கணத்தில் டி.வி. திரையில் ராக்கெட்டின் அடிப்பகுதியில் பட்டாசுத் திரி கணக்காக நெருப்பு பற்றியது. தடதடவென்று அந்தப் பிராந்தியத்தையே அதிரவைக்கும் சப்தத்துடன் ராக்கெட் புறப்பட்டது. அரங்கமே கை தட்டி ஆர்ப்பரித்தது. யாரோ ஒருவர் 'பாரத் மாதாகீ!" என்று குரல் கொடுக்க அத்தனை பேரும் "ஜே!" சொன்னார்கள்..ஸ்ரீஹரிகோட்டாவுக்குப் போய் அரங்கத்தின் உள்ளே அமர்ந்து டி.வி.யில் பார்த்தாலும், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சந்தோஷத்தில் நேரில் கலந்துகொண்ட சந்தோஷம் எல்லோர் மனத்திலும் நிறைந்து இருந்ததை உணர முடிந்தது..(தொடரும்)