

AI தொழில்நுட்பம் துல்லியமான தரவுகள், தகுதிகள் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் திறன் கொண்டிருந்தாலும், மனிதர்கள் பயோடேட்டா மாற்றம், பரிந்துரை, நேரடி இலஞ்சம் போன்ற முறைகளால் AI அமைப்புகளையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அறிவியல் வளர்ச்சி உச்சத்தை எட்டினாலும், மனித மனதில் பதிந்துள்ள ஊழல், லஞ்சம் போன்ற பழக்கங்களை முழுமையாக அழிக்க AI-க்கு இயலாத நிலை உருவாகி இருப்பதை இந்த கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
AI என்று சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவு வந்தவுடன் எல்லாம் மாறிவிட்டதா? பார்க்கலாமா..
இன்றைய காலகட்டத்தில் AI என்று சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவு எல்லாவிதங்களிலும் நமக்கு உதவியாக இருக்கிறது. நமக்கு என்ன வேண்டுமோ அதை அந்த AI இடம் கேட்டால் எல்லாவற்றையும் அதுவே அழகாக செய்து கொடுக்கிறது.
ஜாதகம் கணிக்க வேண்டுமா?? AI இல் உங்களுடைய பிறந்த தேதியை போட்டால் போதும், தானாகவே எல்லா விவரங்களும் வந்து விடுகின்றன. அதைப் போல ஒரு ப்ராஜெக்ட் ரெடி பண்ண வேண்டுமா, சில முக்கியமான அடிப்படை விவரங்களை போட்டாலே போதும், ஒரு முழுமையான ப்ராஜெக்ட் ஒரு சில நிமிடங்களிலேயே ரெடியாகி விடும்.
அலுவலகங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும் போது இந்த AI மூலமாக candidates ஐ சட்டென செலக்ட் செய்கிறார்கள். இந்ந AI-க்கு வேலைக்குத் தேவையான தகுதிகள் மற்றும் விவரங்களை கொடுத்தாலே போதும், அது தானாகவே எந்த candidate பொருந்துகிறாரோ அவரை எடுத்துக் கொண்டு மற்றவர்களை ரிஜெக்ட் செய்துவிடும்.
இது மட்டுமா.. இதைப் போல இன்னும் எத்தனையோ இந்த AI யின் மூலமாக நமக்கு பல விதமான பயன்கள் கிடைக்கின்றன. சொல்லப்போனால் நம்முடைய அறிவியல் வளர்ச்சி எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.
ஆனால், இதில் மிகவும் வருந்ததக்க விஷயம் என்னவென்றால், இந்த AI யின் மூலமாகவோ அல்லது AI யின் உதவியோடு இலஞ்சத்தையும் ஊழலையும் தடுக்க முடிந்ததா?? அல்லது தடுக்கத்தான் முடியுமா??
இந்த AI ஐ கண்டுபிடித்ததே மனிதன் தானே.. ஆகவே மனிதனின் செயல்கள் AI ஐ விட சற்று அபாரமாகவே இருக்கிறது.
உதாரணத்திற்கு, ஒரு கம்பெனியில் தனக்குத் தெரிந்த ஒருவரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றால், அந்த AI க்கு ஏற்றவாறு பயோடேட்டாவை மாற்றி வைத்து முதல்நிலை candidate ஆக வைத்து விடுகிறார்கள். அப்படி வைக்கும் போது அவர்கள் பரிந்துரைத்த நபர் முதல் நபராக செலக்ட் செய்யப்படுகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இலஞ்சத்தை வாங்கிக் கொண்டு நேரடியாகவே கம்பெனிக்குள் நுழைத்து விடுகிறார்கள். இதை போல வெறும் அலுவலகத்தில் மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் யாருக்காவது ஒரு வேலை அவசரமாகவோ அல்லது கட்டாயமாகவோ ஆக வேண்டும் என்கிற பட்சத்தில் அந்த இடத்திலே இந்த ஊழலும் இலஞ்சமும் தான் தலை விரித்து ஆடுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலைகளை பொருத்தவரையில் எல்லோராலும் போற்றப்படுகின்ற இந்த AI சூன்யமாகி விடுகிறது.
இந்த AI ஐ ஒரு சிலர் தனக்கு சாதகமாகவும் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
இந்த செயற்கை நுண்ணறிவு உச்சக் கட்ட நிலையை அடைந்தாலும், ஒரு சில மனிதர்களின் மூளையானது குறுக்கு வழியையும் ஏமாற்றும் வழியையும் விட்டு விலகவே விலகாது.
அவர்களை பொருத்தவரையில் எந்த AI இருந்தாலென்ன? யார் இருந்தாலென்ன? எங்களுடைய வேலைகளும் திட்டங்களும் கணகட்சிதமாக நடந்தே தீர வேண்டும் என்பது தான். AI க்குத் தகுந்தவாறு சில இடங்களில் தங்களுடைய புள்ளி விவரங்களை மாற்றி அமைப்பதிலும் அவர்களை மிஞ்ச முடியாது.
ஆக மொத்தத்தில், Ai வந்து விட்டது, அதனால் ஆட்குறைப்பு ஏற்படும், வேலை கிடைப்பது கடினம், பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று உலகமே சொன்னாலும், எது வந்த போதிலும் இந்த ஊழலையும் இலஞ்சத்தையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டவே முடியாது என்பது தான் உண்மையான கருத்து.
தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியிலும் நடைமுறைச் யதார்த்தங்களை ஆழமாகப் புரிந்து கொண்டு, அலுவலக மற்றும் சமூகச் சூழல்களில் நடக்கும் மறைமுக ஏமாற்று வேலைகளைத் துல்லியமாக அடையாளம் காணும் விழிப்புணர்வைப் பெறலாம்.