

-என்.ஆர். மலர்வண்ணன்
"ஈ.எஸ்.ஐ. ஒண்ணு கொடுங்க சார்" என்றவாறே பத்து ரூபாயை நீட்டினான், நாகராஜ்.
"சில்லறை ஒண்ணு அம்பது கொடுங்க சார்" - கண்டக்டர் பத்து ரூபாய்த் தாளைப் புறக்கணித்தார்.
"ப்ச், ஒண்ணு நாப்பதுதான் இருக்கு. அதான்...”
"பரவாயில்லை, கொடுங்க சார். இப்ப எல்லாம் அஞ்சு பைசா, பத்துப் பைசாவை யார் பார்க்கறாங்க. பிச்சைக்காரன்கூடத் திட்டறான்."
"கரெக்டா இருந்திருக்கலாம். ஆனா, காலைல வரப்போ..." பேசி முடிப்பதன் முன், கண்டக்டர் டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்துவிட்டுப் படிக்கட்டுப் பக்கமாய்ப் பாய்ந்து விட்டார்.
மீதியை மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் நாகராஜ். டீக்கடை வாசலில் இளநீர்க் கடை. டீக்கடை ஆள் இளநீர் வாங்கிக் குடிக்க, இளநீர்க் கடைக்காரர் டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தார்.
ஸ்கூட்டரில் வந்துகொண்டிருக்கும் அக்கவுன்ட்ஸ் நிர்மலா கண்ணில் பட்டாள். அவளுக்கு எப்போதும் பாந்தமாக இருக்கும், அந்த ரோஸ் கலர் புடைவையில் பட்டு ரோஜாவாய்த் தெரிந்தாள். 'இந்த வெயிலில் எங்கே போகிறாள்?'
சட்டென்று, சப்தமான ஒரு குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது.
"என்னய்யா இது, அநியாயமா இருக்கு. அஞ்சு ரூபாய்க்குச் சில்லறை இல்லையா?"
நாகராஜ் திரும்பிப் பார்த்தான். அந்த ஆள் குள்ளமாக, கருப்பாக இருந்தான். தண்ணி அடித்திருப்பானோ என்று வேண்டாத சந்தேகம் வந்தது.
"சில்லறை, ஒண்ணு அம்பது கொடுங்க.''
"ஏன் உங்கிட்ட சில்லறை இல்லையா?"