சிறுகதை; வாதம்!

ஓவியம்; தாமரை
Short Story in Tamil
Updated on
Kalki Strip
Kalki Strip

-என்.ஆர். மலர்வண்ணன்

"ஈ.எஸ்.ஐ. ஒண்ணு கொடுங்க சார்" என்றவாறே பத்து ரூபாயை நீட்டினான், நாகராஜ்.

"சில்லறை ஒண்ணு அம்பது கொடுங்க சார்" - கண்டக்டர் பத்து ரூபாய்த் தாளைப் புறக்கணித்தார்.

"ப்ச், ஒண்ணு நாப்பதுதான் இருக்கு. அதான்...”

"பரவாயில்லை, கொடுங்க சார். இப்ப எல்லாம் அஞ்சு பைசா, பத்துப் பைசாவை யார் பார்க்கறாங்க. பிச்சைக்காரன்கூடத் திட்டறான்."

"கரெக்டா இருந்திருக்கலாம். ஆனா, காலைல வரப்போ..." பேசி முடிப்பதன் முன், கண்டக்டர் டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்துவிட்டுப் படிக்கட்டுப் பக்கமாய்ப் பாய்ந்து விட்டார்.

மீதியை மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் நாகராஜ். டீக்கடை வாசலில் இளநீர்க் கடை. டீக்கடை ஆள் இளநீர் வாங்கிக் குடிக்க, இளநீர்க் கடைக்காரர் டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தார்.

ஸ்கூட்டரில் வந்துகொண்டிருக்கும் அக்கவுன்ட்ஸ் நிர்மலா கண்ணில் பட்டாள். அவளுக்கு எப்போதும் பாந்தமாக இருக்கும், அந்த ரோஸ் கலர் புடைவையில் பட்டு ரோஜாவாய்த் தெரிந்தாள். 'இந்த வெயிலில் எங்கே போகிறாள்?'

சட்டென்று, சப்தமான ஒரு குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது.

"என்னய்யா இது, அநியாயமா இருக்கு. அஞ்சு ரூபாய்க்குச் சில்லறை இல்லையா?"

நாகராஜ் திரும்பிப் பார்த்தான். அந்த ஆள் குள்ளமாக, கருப்பாக இருந்தான். தண்ணி அடித்திருப்பானோ என்று வேண்டாத சந்தேகம் வந்தது.

"சில்லறை, ஒண்ணு அம்பது கொடுங்க.''

"ஏன் உங்கிட்ட சில்லறை இல்லையா?"

கண்டக்டர் சில்லறையோடு நீண்ட கைகளுக்கு முதல் மரியாதை கொடுத்து டிக்கெட் கிழித்தார். "இப்பத்தாம்பா, ஷிப்ட் மாறி வரேன். சில்லறை இருந்தால் கொடு. இல்லேன்னா, இறங்கிக்க"  என்றவாறே ஒற்றை பெல் அடித்தார், கண்டக்டர்.

அது தன்னை இறக்கி விடுவதற்கான அடிக்கப்பட்ட பெல் என்று புரிந்தது. குள்ளமான ஆசாமி, மூர்க்கமானான். ஏன் ஏன் இறங்கணும்? இறங்க முடியாது."

ஒரு வினாடி நேரம்தான். எதையும் கண்டுகொள்ளாமல் "போலாம் ரைட்" என்றவாறே கண்டக்டர் இரட்டை பெல் அடித்தார்.

"டிக்கெட் கொடு."

"சில்லறை வேணும்."

"என்னய்யா, அநியாயம் பண்றீங்க. அஞ்சு ரூபாய்க்குச் சில்லறை இல்லையா?"

"இல்லை" கண்டக்டர் அசரவில்லை.

நாகராஜ் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். மீண்டும் ஒருமுறை நிர்மலா தெரிந்தாள். பஸ் அவளைத் தாண்டிப் பாய்ந்தது.

"எப்படி இருக்கும்? நூத்துக்குப் பத்து லாபத்துக்குக் கடைக்காரங்களுக்கு வித்துறீங்க இல்லே?"

கடுமையான சொல் இல்லையோ அது?  நாகராஜ் கண்டக்டரையே பார்த்தான். கலெக்ஷன் என்ட்ரி போடுவதில் கவனமாக இருந்தார்.

இதையும் படியுங்கள்:
செங்குத்து புரட்சி: நவீன இளைஞர்களின் சாய்ஸ்!
ஓவியம்; தாமரை

இது நிஜம்தானா என்று நாகராஜ் ஆச்சரியப்பட்டான். அவன் வேறு சில கண்டக்டர்களையும் பார்த்திருக்கிறான். இந்த நேரம், இந்த இடத்தில் அவர்கள் இருந்திருந்தால்?

சண்டைக்கு என்றே வந்தவன் மாதிரி இவனும், 'உன்னை மாதிரி ஆளை நிறையப் பாத்திருக்கிறேன் போய்யா' என்ற மாதிரி கண்டக்டரும் நடந்துகொண்டார்கள்.

பீளமேட்டில் பஸ் நின்றது. "சில்லறை வேணும். எல்லாரும் பத்து ரூபாய் நோட்டை நீட்டாதீங்க!"

குள்ளமான ஆசாமி முணுமுணுத்தான். 'அஞ்சு ரூபாய்க்குக் கூடச் சில்லறை இல்லையாம். அயோக்கியத்தனம் பண்றானுங்க.'  

கண்டக்டர் காதில் அது விழுந்திருக்க வேண்டும். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. அந்த உதாசீனமே குள்ளமான ஆசாமியைப் போட்டுக் குடைய ஆரம்பித்துவிட்டது என்று நாகராஜ் புரிந்துகொண்டான்.

ஒருகணம் தலையிடலாமா என்று தோன்றியது. எந்த நிமிஷமும், நான்  வாயைத் திறக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தபோது, வெளியே மீண்டும் நிர்மலா தெரிந்தாள். 'என்ன ஸ்டைலாக ஓட்டுகிறாள்!'

"டிக்கெட் கொடு. பாக்கியை எறங்கறபோது குடு. அப்ப ஆயிடும் இல்லே."

''நான் வாக்குறுதியெல்லாம் தர முடியாது'' கண்டக்டர் முன் பக்கமாகச் செல்ல, குள்ளமான ஆசாமி அவர் பின்னாலேயே ஓடினான்.

ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தத்தில் நின்று, புறப்பட்ட பஸ், வலது பக்கச் சாலையில் இறங்கி ஓட ஆரம்பித்தது. நாகராஜ் ஜன்னல் வழியாக நிர்மலாவைத் தேடினான். தென்படவில்லை.

குள்ளமான ஆசாமிக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஐந்து ரூபாயை நீட்டிக் கொண்டு, கண்டக்டர் பின்னாலேயே அலைந்துகொண்டிருந்தான். எதையோ முணுமுணுப்பது புரிந்தாலும் ஹோப் காலேஜில் ஏறிய பெருங்கூட்டத்தின் சலசலப்பில் எதுவும் புரியவில்லை.

லைன் நிறுத்தம் தாண்டியதும், "இ.எஸ்.ஐ. எல்லாம் வந்திடுங்க" என்றார் கண்டக்டர்.

படிக்கட்டுப் பக்கமாய் மெல்ல நகர்ந்த நாகராஜ், மனிதர்களின் இடைவெளியில் ஊடுருவி ஜன்னலுக்கு அப்பால் மீண்டும் ஒருமுறை நிர்மலாவைத் தேடினான். 'அவள் ஸ்ட்ரெயிட்டாகப் போயிருக்க வேண்டும்.'

குள்ளமான ஆசாமி படிக்கட்டில் நின்றுகொண்டு, "டிக்கெட் குடுங்க சார்" என்றான். அவனுக்கும் இறங்கும் இடம் வந்துவிட்டது.

"படிக்கட்டில் நிற்காதீங்க. இறங்கறவங்களுக்கு வழி விடுங்க!"

இதையும் படியுங்கள்:
வாய்னிச் புத்தகம் பற்றி கர்னல் கந்தசாமி கண்டுபிடிப்பு!
ஓவியம்; தாமரை

நாகராஜ் சுவாரசியமானான். கீழே இறங்கி நின்று கொண்டு அவர்களையே பார்த்தான். குள்ளமான ஆசாமி கெஞ்சுகிற நிலைக்கு வந்திருந்தான். "சார், சார்."

என்ட்ரியை முடித்துக்கொண்ட கண்டக்டர் முன் பக்கக் கதவுப் பக்கம் பார்த்தபடியே, "முன்னால் ஏறியாச்சா, ரைட்" என்றார். பஸ் கிளம்பியது.

"சார் சார்" சரேலென்று கையை வெளியே இழுத்துக் கொண்ட குள்ளமான ஆசாமி, சற்று தூரம் பஸ்ஸோடு ஓடி நின்றான். கையைத் தலைக்கு மேல் உயர்த்தி, மெதுவாகக் கீழே கொண்டு வந்தான். விரல் நுனியில் ஐந்து ரூபாய்.

நாகராஜ் பஸ்ஸையும், அந்த ஆசாமியையும் மாறி மாறிப் பார்த்தான். பஸ் வேகமெடுத்துப் போய்க்கொண்டிருந்தது.

-கல்கி 10.05.1998

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com