'அம்மா, அப்பா பிரிவால் அழும் குழந்தைகள்': உச்ச நீதிமன்றத்தின் மனநலப் பரிசோதனை!

பெற்றோரின் ஈகோவால் நசுங்கும் பிஞ்சு மனங்கள்; நீதிபதிகள் கையில் எடுத்த அதிரடி ஆயுதம்!
Child Custody | குழந்தைக் காவல்
Child Custody | குழந்தைக் காவல்AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

இன்றைய நவீனச் சமுதாயத்தில் விவாகரத்து (Divorce) வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கணவனும் மனைவியும் தங்களின் தனிப்பட்ட ஈகோ (Ego) சண்டையினால் பிரிந்து செல்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றாலும், அவர்களுக்கு நடுவில் இருக்கும் பிஞ்சு குழந்தைகளின் நிலைதான் இன்று மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

முந்தைய காலங்களில், பெற்றோர் பிரிந்தாலும் குழந்தைகளைத் தாங்கிப் பிடிக்கத் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என ஒரு பெரிய கூட்டுக்குடும்பக் கட்டமைப்பு இருந்தது.

ஆனால், இன்றைய தனிக்குடித்தன (Nuclear Family) கலாச்சாரத்தில், தாத்தா பாட்டியின் அரவணைப்பும் இல்லாத நிலையில், பெற்றோரின் பிரிவால் குழந்தைகள் முற்றிலும் நாதியற்றுக் கைவிடப்படுகிறார்கள். ஒரு பந்து போல நீதிமன்றப் படிக்கட்டுகளிலும், பெற்றோரின் வீடுகளிலும் மாற்றி மாற்றிப் பந்தாடப் படுகிறார்கள்.

Parents with Child | குழந்தைக் காவல்
Parents with Child | குழந்தைக் காவல்Image credit: AI

குழந்தைக் காவல் வழக்குகளில் பெற்றோரின் மனநிலை ஏன் சோதிக்கப்பட வேண்டும்?

குழந்தைக் காவல் (Child Custody) வழக்குகளில், பிரிந்து வாழும் தம்பதியர் குழந்தையைத் தன்வசம் வைத்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தில் மாறி மாறிப் பல அசிங்கமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். தன் துணையின் மீதுள்ள ஆக்ரோஷத்தில், குழந்தையிடம் 'உங்க அப்பா ஒரு குடிகாரர்' என்றோ அல்லது 'உங்க அம்மா உன்னைக் கைவிட்டுட்டுப் போன பாவி' என்றோ நச்சுக் கருத்துகளை விதைத்து, குழந்தையின் பிஞ்சு மனதை நஞ்சாக்குகிறார்கள். மருத்துவ அறிவியலில் இதனை 'Parental Alienation Syndrome' (பெற்றோர் மன வேற்றுமை விதைப்பு) என்று அழைக்கிறார்கள்.

இந்தச் சூழலில், பெற்றோர்களில் யார் சொல்வது உண்மை, யார் பக்கம் நியாயம் இருக்கிறது? என்பதை வெறும் நீதிமன்ற வாதங்களை மட்டுமே வைத்து நீதிபதிகளால் துல்லியமாகக் கண்டறிவது மிகக் கடினம்.

இந்தியச் சட்டப்படி, குழந்தைக் காவல் வழக்குகளில் பெற்றோரின் உரிமை முக்கியமல்ல; 'குழந்தையின் எதிர்காலத்திற்கு எது நல்லது?' என்பதுதான் முதன்மையான விதி.

பெற்றோர் பணக்காரர்களாக இருக்கலாம், சொகுசு வாழ்க்கை தரலாம். ஆனால், அவர்களின் மனநிலை சண்டைக் கோழியாக இருந்தால், அந்தக் சூழலில் வளரும் குழந்தை எதிர்காலத்தில் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகும்.

இதற்குத் தீர்வாகத்தான், குழந்தைக் காவல் வழக்குகளில் 'பெற்றோர்களின் மனநலப் பரிசோதனை' (Psychological Evaluation of Parents) என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற விவாதம் இன்று சட்ட மேடைகளில் தீவிரமாக எழுந்துள்ளது.

குழந்தைக் காவல் விவகாரத்தில் நிம்ஹான்ஸ் (NIMHANS) வழிகாட்டுதல்களின் முக்கியத்துவம் என்ன?

நீதிமன்ற உத்தரவின்படி, நடுநிலையான ஒரு மனநல மருத்துவர் (Clinical Psychologist) மூலமாக இரு பெற்றோரின் மனநலத்தையும் முழுமையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக, குழந்தைக் காவல் வழக்குகளில் பெற்றோரின் மனநிலையைச் சோதிக்க, பெங்களூருவில் உள்ள இந்தியாவின் புகழ்பெற்ற 'நிம்ஹான்ஸ்' (NIMHANS) மனநல நிறுவனம் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டின் துல்லியமான வழிகாட்டு நெறிமுறைகளைப் (Guidelines) பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே (Supreme Court) தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: குற்றவாளி
Child Custody | குழந்தைக் காவல்

இதன் மூலம், பெற்றோரின் ஆளுமைத் திறன், அவர்களின் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பக்குவம், மன அழுத்தம் தாங்கும் திறன் ஆகியவை ஆராயப்படும்.

குழந்தை யாரிடம் உண்மையான பாசத்தோடும், பாதுகாப்பாகவும் உணர்கிறது என்பது கவனிக்கப்படும்.

குழந்தைக்குப் பெற்றோர்களில் யாராவது 'பிரெயின் வாஷ்' (Brainwashing) செய்கிறார்களா என்பதும் இந்தச் சோதனையில் அம்பலமாகிவிடும்.

இந்த மனநலப் பரிசோதனை அறிக்கை (Psych Evaluation Report) மூலமாக, எந்தப் பெற்றோரிடம் இருந்தால் குழந்தையின் மனவளர்ச்சியும் கல்வியும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நீதிபதிகள் துல்லியமாகத் தீர்மானிக்க முடியும்.

கூட்டுக் குடும்பங்கள் இல்லாத இன்றைய காலகட்டத்தில், பந்தாடப்படும் குழந்தைகளின் மன அமைதியைக் காக்க, நீதிமன்றங்கள் கையில் எடுக்கும் இந்த மனநலப் பரிசோதனைச் சட்டம் தான் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கும் உன்னதமான கேடயமாகும்!

logo
Kalki Online
kalkionline.com