

அப்போதுதான் நானும் பருவமடைந்தேன்.
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எட்டாம் வகுப்பிலே அப்பா ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் என்னை சேர்த்து விட்டார். அந்த பள்ளிக்கூடத்தின் விடுதியின் விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருந்தன. எங்கள் பள்ளிக்கூடம் பத்து ஆசிரிய இயக்குனர்களால் நடத்தப்படுவது என்றும், அந்த பத்து ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியருக்கான அதிகாரம் இருக்கிறது என்பதையும் பள்ளியில் சேர்ந்த புதிதில் வகுப்பில் என் அருகில் அமர்ந்திருந்த குமாரன்தான் எனக்கு விளக்கப்படுத்தினான். பள்ளியில் பெரும்பாலனோர் விடுதியில் தங்கி படிப்பவர்கள். அதிகளவில் விடுதியில் தங்கி மாணவ மாணவிகள் படிப்பதற்கு காரணம் ஆசிரிய இயக்குனர்கள்தான். பள்ளியின் விளம்பர பேனர்களில் விடுதி வசதியும், பத்து ஆசிரிய இயக்குனர்களால் நடத்தப்படும் பள்ளி என்றும் பெரிதாக போடப்பட்டிருக்கும்.
விடுதி மாணவர்களின் தினசரி அட்டவணை, காலையில் 5 மணிக்கு கட்டாயமாக எழும்ப வேண்டும். 6 லிருந்து 8 மணி வரை படிக்கவும், 8 லிருந்து 9 மணி வரை காலை உணவும் சாப்பிட்டு 9 மணிக்கு பள்ளியின் ஆரம்ப மணி ஒலிப்பதற்கு முன் வகுப்பறைக்கும் செல்ல வேண்டும்.