

சில நாடுகள் தேர்தல்களை (Elections) நடத்துவதே இல்லை அல்லது போட்டி இல்லாத சூழ்நிலையில் அவற்றை நடத்துகின்றன. இதனால் பயன் யாருக்கு? இப்போது அந்த நாடுகளின் நிலை எப்படி உள்ளது?
‘சவூதி அரேபியா’ ஒரு முழுமையான முடியாட்சியாகும். அங்கு மன்னரும் அரச குடும்பத்தினரும் அதிகாரிகளை நியமிக்கின்றனர். நாட்டின் அடுத்த தலைமைத்துவம் பரம்பரை வாரிசுரிமை மூலம் கைமாற்றப்படுகிறது.
‘வாட்டிகன் நகரம் (Vatican city)’ பொது வாக்கெடுப்புக்கு பதிலாக ஒரு மதச் செயல்முறையான கர்தினால்கள் சபை மூலம் (College of Cardinals) அதன் தலைவரான போப்பை (Pope) தேர்ந்தெடுக்கிறார்கள்.
‘புருணை (Brunei)’ சுல்தானின் ஆட்சியில் செயல்படக்கூடியது (அரேபியா மொழியில் தலைவர் என்பர்). அங்கு சுல்தான் கிட்டத்தட்ட முழுமையான அதிகாரத்தை கொண்டுள்ளார். அங்கு நாட்டுக்கென்று ஒரே ஒரு அடையாளப்பூர்வமான சட்டமன்றம் மட்டுமே உள்ளது.
‘சீனா’ ஒரு கட்சி ஆட்சி (one-party system) முறையின்கீழ் செயல்படுகிறது. அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் உட்கட்சிகளுக்குள் மட்டுமே தேர்தல்கள் உள்ளன. அதில் பொதுமக்களின் தலையீடு இருக்காது.
விசித்திர நாடான ‘வட கொரியா’ தேர்தல்களை நடத்துகிறது என்று உலகிற்குச் சொல்கிறது. ஆனால், அவை பொழுதுபோக்கிற்காக என்று பரவலாக கருதப்படுகின்றன. காரணம் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்படுவதால் மக்கள் தீர்மானிப்பதற்கு என்று வெவ்வேறு தேர்வுகளே அங்கு இல்லை.
இந்த நாடுகள் ஏன் தேர்தல்களைத் தவிர்க்கின்றன:
மரபு மற்றும் பாரம்பரியம்: சவூதி அரேபியா, புருணை போன்ற முடியாட்சிகள் பரம்பரை ஆட்சியின்மூலம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கின்றன. இதனால் எந்த ஒரு குழப்பமும் இன்றி நாட்டிற்கான நிலைத்தன்மைக்கு (Stability) அவர்களால் முக்கியத்துவம் கொடுக்க முடிகிறது.
மத அதிகாரம்: வாட்டிகன் நகரம் அரசியல் பங்கேற்பைவிட ஆன்மீக சட்டபூர்வத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது.
கருத்தியல் கட்டுப்பாடு: சீனாவும், வட கொரியாவும் கருத்தியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், பல கட்சிகள் இருந்தால் அவர்களுக்குள் உருவாகும் தேவையற்ற கருத்து நாட்டின் வளர்ச்சி அல்லது அமைதி சீரழிவதைத் தடுப்பதற்கும்; இந்த ஒரு அதிகாரத்தைப் பராமரிக்கின்றன.
பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை: தேர்தல்கள் தங்கள் சமூகங்களை நிலை குலையச் செய்யலாம் அல்லது கலாச்சார நெறிமுறைகளுக்கு சவால் விடலாம் என்று இந்தத் தலைவர்கள் கருதுகிறார்கள்.
அவர்கள் தேர்தல்களை நடத்தினால் என்னவாகும்?:
இந்த நாடுகள் போட்டித் தேர்தல்களை அறிமுகப்படுத்தினால் அதன் விளைவுகள் ஆழமானதாக இருக்கும். முடியாட்சிகளில் நிகழும் தேர்தல்கள் மன்னர் அரச அதிகாரத்தைப் பலவீனப்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மாற்றக்கூடும்.
வாட்டிகன் போன்ற மதரீதியான நாடுகளில் தேர்தல்கள் அவர்களின் ஆன்மீகச் சட்டபூர்வத்தன்மையைக் குறைந்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தக்கூடும்.
ஒற்றைக் கட்சி ஆட்சி முறைகளில் உண்மையான தேர்தல்கள் எதிர்க்கட்சிக்கு இடமளித்து; இந்தியா போன்ற அரசியல் பன்முகத் தன்மைக்கு வழிவகுக்கக்கூடும். ஆனால், அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சியில் அரசியல் காரணங்களால் ஒரு அசாதாரண சூழலை வழிவகுக்கலாம். வடகொரியா போன்ற சர்வாதிகார ஆட்சிகளுக்கு உண்மையான தேர்தல்கள் பொதுமக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி, ஆளும் வர்க்கத்தின் அதிகாரப்பிடிக்குச் சவால் விடக்கூடும்.