

மனிதர்கள் நீண்ட காலமாகவே சத்தியங்களையும் உறுதிமொழிகளையும் நேர்மை அல்லது அர்ப்பணிப்பின் அடையாளங்களாக நம்பி வருகின்றனர். அதேநேரம், நடைமுறையில் பலரால் செய்யப்படும் சத்தியங்கள் எளிதாக மீறப்படுகின்றன. அப்படியென்றால் ஒருவர் செய்யும் சத்தியம் உண்மையா (true-promises-psychology) அல்லது பொய்யா என்பதை எப்படி உடனடியாக மதிப்பிடலாம்? அதற்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ:
ஒருவரின் ‘நடவடிக்கைகளின் நிலைத்தன்மையே’ அவர் உண்மையைப் பேசுகிறார் என்பதற்கான மிக வலிமையான அறிகுறியாகும். தன் வார்த்தைகளைக் கடந்தகால செயல்களுடன் பொருத்திப் வாழ்பவர் உண்மையுள்ளவராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். இதுவே, ஒருவர் கடந்த காலத்தில் அடிக்கடி வாக்குறுதிகளை மீறியிருந்தால், அவரது இப்போதைய சத்தியத்தின் மதிப்பு குறைகிறது. எனவே, சத்தியம் செய்த அடுத்த நொடியே அதை அப்படியே நம்புவதை விட, சம்பந்தப்பட்டவரின் கடந்த காலப் போக்குகளைக் கவனிப்பது மிகவும் நம்பகமானது.
மனிதர்கள் வெளிப்படுத்தும் சைகைகளின் மூலமும் அவர்களின் நேர்மை வெளிப்படும். உண்மையான நபர்கள் பேசும்போது உங்களுடன் நிலையான கண் தொடர்பை (Eye Contact) மேற்கொள்வார்கள்; சாந்தமான உடல் அசைவுகளை வெளிப்படுத்துவார்கள்; தேவையற்ற சைகைகளைத் தவிர்ப்பார்கள்.
இதற்கு நேர்மாறாக, பதட்டமான உடல் அசைவுகள், பார்வையைத் தவிர்ப்பது அல்லது சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி நம்மை நம்ப வைக்க முயற்சிப்பது போன்றவை அவர்களின் சத்தியத்தில் உள்ள நேர்மையின்மையைக் குறிக்கலாம். இந்த அறிகுறிகள் மட்டுமே முழுமையான ஆதாரம் அல்ல என்றாலும், பயனுள்ள தடயங்களாகச் செயல்படும்.
ஒருவர் கொடுக்கும் உறுதிமொழியின் பின்னணிச் சூழல் மிகவும் முக்கியமானது. ஒருவர் சாதாரணமாகப் பேசும்போதோ அல்லது ஏதேனும் ஒரு கட்டாயத்தின், அழுத்தத்தின் பேரிலோ சத்தியம் செய்யும்போது நேர்மையின்மைக்கான சாத்தியக்கூறு அதிகரிக்கிறது.
இதற்கு மாறாக, ஒரு சத்தியம் தனிப்பட்ட விஷயத்திற்காகவோ, கலாச்சார மரபுகள் அல்லது தார்மீகப் பொறுப்பேற்புடன் பிணைக்கப்பட்டிருக்கும்போதோ அது அதிக மதிப்பையும் உண்மையையும் பெறுகிறது. ஒருவர் தனது சத்தியத்தை எவ்வளவு தீவிரமாக முன்வைக்கிறாரோ, அது பெரும்பாலும் அவரது உண்மையான நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
ஒருவர் கூறும் உண்மையான கருத்துகளில் பொதுவாக முரண்பாடுகள் இருக்காது; அது ஒரு தெளிவான கதைபோல நமக்கு உணர வேண்டும். இதுவே ஒருவரின் சத்தியம், நமக்கு ஏற்கனவே தெரிந்த உண்மைகளுடனோ அல்லது அந்த நபரின் தற்போதைய சூழ்நிலைகளுடனோ முரண்படுவதாகத் தோன்றினால், அதைப்பற்றி கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியமாகும்.
இறுதியாக, பல கலாச்சாரங்கள் ‘சத்தியங்களுக்கு’ ஆன்மீக அல்லது தார்மீகச் சக்தி உள்ளதாக நம்பினாலும், யதார்த்தத்தில் அவை சத்தியம் செய்பவரின் நேர்மையைப் பொறுத்தே வலிமை பெறுகின்றன. ஒரு உண்மையான சத்தியத்தின் மூலம் நாம் பெறும் "நேர்மறை உணர்வு" (Positive Vibe), ஏதோ ஒரு மாய சக்தியிலிருந்து வருவதில்லை; மாறாக, சத்தியம் மேற்கொள்ளும் மனிதரிடம் வெளிப்படும் ‘நேர்மையின் புரிதலிலிருந்தே’ நமக்குக் கிடைக்கிறது.