

யானைகளின் புத்திக்கூர்மையை லேசில் எடை போட்டு விட முடியாது. யானை சக்திமான் மட்டுமல்ல புத்திமானும் கூட. காடுகளின் பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி கொண்டே வருவதால் உணவு தேடி, கூட்டம் கூட்டமாக யானைகள் காடுகளை விட்டு காட்டின் விளிம்பில் இருக்கும் கிராமங்கள் மீது படையெடுத்து விவசாயிகளுக்கு ஒரு பெரிய தலை வலியாக உருவெடுத்து கொண்டிருக்கின்றன. அவைகளை தடுக்க என்னென்னவோ செய்தும் பாச்சா பலிக்கவில்லை. மின் வேலி அமைத்தலை ஒரு தீர்வாக முதலில் நினைத்தார்கள். ஆனால் நடப்பதே வேறு. யானைகள் என்ன செய்கின்றன தெரியுமா?
மரக்கிளைகளை பிய்த்து எடுத்து வந்து வேலியின் மீது போட்டு அதன் மீது பத்திரமாக நடந்து மறுபுறம் போய் புகுந்து விளையாடுகின்றன. அவைகளுக்கு மரம் மின்சாரம் கடத்தாது என்பது எப்படி தெரியும்? புரியாமல் திணறுகிறார்கள். சில யானைகள் மின்சார கம்பி வேலிகளை தாங்கி பிடித்திருக்கும் தூண்களை (Poles) முட்டி சாய்த்து அதனால் ஷார்ட் சர்குய்ட் ஏற்படுத்தி காரியத்தை சாதித்து விடுகின்றன. முக்கால் வாசி விவசாயிகள் மின் வேலியை ஜெனரேட்டருடன் இணைத்துள்ளனர். ஜெனெரேட்டர் சத்தத்திற்கும் வேலி ஷாக் அடிப்பதற்கும் சம்பந்தம் உள்ளது என்று கண்டுபிடித்து ஒன்று விலகி போகின்றன அல்லது சில முரட்டு யானைகள் ஜெனெரேட்டர் அறையை தாக்குகின்றன.
சில யானைகள் மிகவும் sensitive ஆனா தங்கள் துதிக்கையால் லேசாக தொட்டு கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கா என்று பறி சோதிக்கின்றன என்றும் கூறுகிறார்கள். எப்படி தெரிந்ததோ தெரியவில்லை யானைகளுக்கு அவைகளின் தந்தம் மின்சாரம் கடத்தாது என்று, அவைகளை வைத்து மின் வேலியை துவம்சம் செய்து விடுகின்றன.
தாங்கள் வேர்வை சிந்தி வளர்க்கும் பயிரை பாதுகாப்பது எப்படி என்று புரியாமல் தலை மேல் கை வைத்தபடி உள்ளனர் கிருஷ்ணாகிரி, நீலகிரி போன்ற ஜிலாக்களில் உள்ள விவசாயிகள். யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து உண்பதைவிட அழிப்பது அதிகம்.
மின் வேலி வைத்து பார்த்தாயிற்று தடுக்க முடியவில்லை தந்தம் தாங்கிய தாதாக்களை. மிளகாய் பொடி வேலி வைத்து பார்த்தாகிற்று, பலிக்கவில்லை. பள்ளம் தோண்டுவது ஓரளவு கை கொடுக்கிறது. மின் வேலியை தாண்டும் தாண்டவராயங்கள் பள்ளத்தை கண்டு பயந்து போய் விடுகின்றன. ஆனால் பள்ளம் தோண்டுவது அவ்வளவு சுலபம் அல்ல. செலவும் அதிகம் அவை தூர்ந்து விடாமல் பராமரிப்பது கடினம்.
இப்போது முற்றிலும் புதிதாக ஒரு வழி கண்டு பிடித்துள்ளனர் . அது தான் தேனீ வளர்ப்பது. தங்கள் நில எல்லைகளில் தேனீக்களை வளர்க்க தொடங்கி விட்டனர். தேர் போன்ற யானைகளுக்கு தேனீக்களை கண்டால் உதறல். தேனீக்கள் துரத்தினால் யானைகள் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடுகின்றனவாம். தேனீ என்ன ஒரே ஒரு குளவியை கண்டால் அலறி அடித்து ஓடுமாம் ஆல்பா (Alpha) ஆண் யானையும்..!