

-மும்தாஜ் யாசீன்
"ஆமீனா நாளைக்கு வர்றாளாம். சொல்லி விட்டிருக்கா.." என்றாள் மைமூன் பீவி.
சிலீரென்று காற்று வீசியது போலிருந்தது மஜீது சாயபுவுக்கு. மேலே கவிந்திருந்த அலுப்பெல்லாம் கரைந்துபோக, உள்ளே பூ வாசம் வீசியது. சந்தோஷம் அரும்பியது.
ஆமீனா அவரது மகள். "அம்மாடி..." என்ற குரலுக்கு "என்னத்தா..." என ஓடி வந்த பெண். முகக்குறிப்பை அறிந்து பணிவிடை செய்தவள். எல்லாம் சரியாக இருந்தால் எப்படி இருக்க வேண்டிய உறவு இது?
ஆமீனா மீது அதீத பிரியம் அவருக்கு. அவளது நிக்காஹ் ஒரு தவம் போலவே இருந்தது. எத்தனையோ இடம் வந்தும், கேட்டும் உள்ளுக்குள்ளிருந்து உத்தரவுக் குரல் எழும்பவே இல்லை. மனச் சஞ்சலத்துடன் தட்டிக்கொண்டே வந்தார். சுல்தானைப் பார்த்ததும் படக்கென்று கதவு திறந்த மாதிரி இருந்தது. இத்தனைக்கும் சாதாரண ஓட்டல் சிப்பந்தி அவன். பேசும்போது துறுதுறுத்த கண்கள் அவனுள் ஒரு பொறி இருப்பதை அடையாளம் காட்டின. சுடராக ஒளிர்ந்த அது, தன் ஆத்மாவுடன் பேசுவது போலிருந்தது. மைமூன் பீவி உட்பட யாருக்கும் இஷ்டம் கிடையாது. ஆளாலும் அவர் உறுதி குறையவில்லை. காரியத்தை நடத்தி வைத்தார்.