

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் அம்மாவின் Class ஐடியா… Mass எஸ்கேப்! பற்றிய அனுபவத்தை கேட்டிருந்தோம். அதில் தேர்வான ஐந்து சுவாரஸ்யமான கட்டுரைகளில் ஐந்தாவது கட்டுரை இதோ…
பெசன்ட் நகரில், தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தினர் நடுத்தர வருமானம் உள்ள குரூப்பினருக்காக கட்டி ஒதுக்கியிருந்த ஃபிளாட் ஒன்றில் நாங்கள் வசித்து வந்த நேரம் அது. அந்த ஃபில்டிங்கில் இடத்தை சேமிக்கும் நோக்கத்தில், ஒரே இடத்தில் நான்கு வீட்டிற்கான நுழைவு வாயிலை அமைத்திருந்தனர்.
எங்கள் வீட்டிற்கு இடது புறத்தில் இருந்த வீட்டில் ஒரு கணவன் மனைவி மற்றும் அவர்களது ஒரே மகள் அனிதாவும் வசித்து வந்தனர். அனிதாவின் அம்மாவும் நானும் நெருங்கி பழகி வந்தோம். அனிதா ஒரு கலைக்கல்லூரியில் பயின்று வந்தாள். அவள் கல்லூரிக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த சுந்தர் என்பவருடன் அனிதாவுக்கு காதல் அரும்பியது.
வீட்டுக்குத் தெரியாமல் காதலை வளர்த்து வந்த ஜோடிக்கு காதலின் பிணைப்பு வலுவானது. அவ்வப்போது காதலன் பெசன்ட் நகருக்கே வந்து சிக்னல் மூலம் அனிதாவை அழைப்பதும், உடனே அவள் கிளம்பிப் போவதும், பீச்சில் நேரத்தை போக்கிவிட்டு வீட்டுக்கு வருவதும் வழக்கமானது.
பின், விஷயம் அப்படி இப்படியென அனிதாவின் அம்மாவுக்கும் வேறு சிலருக்கும் தெரியவந்தது. பிசினஸில் பிஸியாயிருக்கும் அனிதாவின் அப்பா ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமாக வீட்டுக்கு வந்திருந்தார். ஒருமணி நேரம் கழித்து இரவு எட்டு மணி வாக்கில் அனிதா வீட்டுக்கு வந்தாள். கதவை திறந்த அவள் அப்பா எதிர்பாராத விதமாக அவள் கன்னத்தில் ஓர் அறைவிட்டார். அதிர்ந்துபோய் ஓடி வந்த அவர் மனைவி, "ஏங்க, அவ தோழி வீட்டு கொலுவுக்கு போய்ட்டு வரேன்னு சொல்லிட்டுத்தான் போனாள்" என்றாள். "சும்மா போடி... விஷயம் என் காதுக்கும் வந்துவிட்டது" என்று கர்ஜித்தார்.
மறுநாளே தரகர் ஒருவரை பார்த்து அமெரிக்க மாப்பிள்ளை ஒருவரின் பெற்றோரை பெண் பார்க்க வரவும் ஏற்பாடு செய்துவிட்டார். பெண் பார்க்க வந்தவர்கள் தங்கள் சம்மதத்தையும் தெரிவித்துவிட்டு சென்றனர். இரண்டு நாள் சென்றது. அனிதாவின் அம்மா தன் கணவரிடம், "ஏங்க, ஒரு வருடத்துக்கும் மேலா நம்ம பொண்ணு ஒருத்தனோட பீச் சினிமான்னு சுற்றிக் கொண்டிருந்திருக்கா. அவள அமெரிக்காவுல இருக்கிறவனுக்கு கட்டிக்குடுக்க நினைக்கிறீங்க. இதுல எத்தனை பேர் சந்தோஷமும் நிம்மதியும் கெடும்னு நினைச்சீங்களா? பேசாம அவ காதலிச்சவனுக்கே கட்டிக் குடுத்திடலாம். கொஞ்சம் யோசிங்க" என்றாள்.
அவள் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்தவர் அனிதா-அவள் காதலித்த பையனையே திருமணம் செய்து வைத்தனர். இப்போது பெற்றோருக்கு இரண்டு பேரப்பிள்ளைகளை பெற்றுக்கொடுத்து அவர்களையும் அன்போடு அரவணைத்து செல்கிறாள் அனிதா.