தென்கொரியா, 5 கோடி மக்கள் தொகையை கொண்ட ஒரு சிறிய நாடு. முன்பெல்லாம் தென்கொரியா என்றதும் அதிகப்படியாக நினைவில் வருவது சேம்சங் (Samsung) கைப்பேசியாக இருக்கலாம். ஆனால், சமீபகாலமாக உலகம் முழுவதும் உள்ள இளைய சமுதாயத்தை அதிகமாக கவர்ந்துகொண்டிருக்கும் ஒன்றுதான் தென் கொரியர்களின் ‘கே பாப்’ மற்றும் ‘கே டிராமா’வாகும். இதன் மூலம் தென் கொரியர்கள் மெல்ல மெல்ல தங்களுடைய உலகளாவிய பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியை கண்டு வருகிறார்கள்.
தென் கொரியர்களின் அழகு சாதனப்பொருட்களும், உணவு பொருட்களும் இன்று சாதாரண கடைகளில்கூட கிடைக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டன.
கிமிச்சி நூடுல்ஸ் முதல் கிளேஸ் ஸ்கின் வரை தென்கொரியர்களின் மீதான மோகம் உலகம் முழுவதும் உள்ள இளம் வயதினரை கவர்ந்துள்ளது.
பி.டி.எஸ் மற்றும் பிளேக் பிங்க் என்னும் இசைக்குழுக்கள் மட்டுமே உலகப் பிரசித்தி பெற்று தென்கொரிய அரசுக்கு ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டி கொடுத்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அழகு சாதனங்கள் சம்பந்தமான விஷயங்களில் தென்கொரியர்கள் மிகவும் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். பிளேஸ்டிக் சர்ஜரி என்றாலே தென்கொரியர்கள்தான் வல்லுனர்கள் என்று சொல்லும் அளவிற்கு அழகை மேம்படுத்தும் விஷயங்களில் முதல் பங்கு வகிக்கின்றனர்.
‘காக்னம் ஸ்டைல்’ என்னும் கொரிய பாடல் உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்துகொண்டிருந்ததை அறிந்திருப்போம்.
தென்கொரிய படமான ‘பேரசைட்’ நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களுக்கும் கொரியர்களுக்குமே சில ஒற்றுமைகள் இருக்கின்றது. அவர்களும் நம்மை போலவேதான் அம்மா, அப்பா என்று தங்களுடைய பெற்றோர்களை அழைக்கிறார்கள். தமிழ் வார்த்தைகள் அவர்கள் பேச்சு வழக்கு சொற்களுடன் கலந்திருப்பதை கவனிக்கலாம்.
கொரியர்களும் இந்தியர்கள் போலவே தங்கள் பிள்ளைகளின் கல்விக்கே முதலிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் உணவுமுறையிலும் அரிசி பிரதான உணவாக இடம் பிடித்திருக்கிறது, கூட்டு குடும்பமாக வாழ்கிறார்கள்.
இப்படி கலாச்சார ரீதியாகவும் வலுவான தொடர்பு இந்தியர்களுடனும் தமிழர்களுடனும் கொரியர்கள் பகிர்ந்துள்ளதால், தென் கொரியர்களின் மோகம் இந்திய இளசுகளையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இதனால் தென்கொரியர்களின் மவுசு நாளுக்கு நாள் இளம் வயதினரிடம் கூடிக்கொண்டே போகிறது என்பதிலும் சந்தேகமில்லை.