சிறுகதை – அமலாக்கப்படும் அதிர்ஷ்டம்!
-அகிலா கார்த்திகேயன்
"பெரிய 'ஹமாம்' ஆபீஸர்னு சொல்லுவியே, அவருடைய விவகாரம் அமலாக்கம் வரைக்கும் போயிடுச்சி பார்த்தியா?" என்று வரதராஜன்தான் நியூஸ் பேப்பரில் அதைக் காட்டினார்.
'திருவானைக்காவலில் அரசு அதிகாரி பாலகிருஷ்ணன் வீட்டில் அமலாக்கப் பிரிவினர் சோதனையிட்டனர். விசாரணையின்போது ஹார்ட் அட்டாக், ஏற்பட்டு, தொடர முடியாமல் போனது!' என்று நாலே வரிகளில் ஒரு குட்டிச் செய்தி இருந்தது. அப்பொழுதும் என்னால் நம்பவே முடியவில்லை. என் மதிப்பிற்குரிய ஆபீஸர் பாலகிருஷ்ணன் மீது இப்படி ஒரு தகவலா என்று மனம் அடித்துக்கொண்டது.
"அப்பவே திருச்சி டிவிஷன் ரங்கநாதன் சொன்னான்னு நான் சொல்லலே... இங்கேயிருந்து டிரான்ஸ்பர் ஆனதும் ஆள் சுத்தமா மாறியாச்சாம்! திருவானைக்காவல்லே ஒரு பெரிய பங்களாவாம், ரெண்டு மாருதி காராம். கலர் டீ.வி., ஃபிரிட்ஜ்னு வாங்கி தள்ளிட்டே இருந்தாராம். வீட்டு வேலைக்காரி கூட, பட்டுப் புடைவை கட்டிட்டுதான் வேலை செய்வாளாம். நீதான் பழைய பாலகிருஷ்ணன்னு நினைச்சிட்டு நம்பமாட்டேன்னு அடம் பிடிச்சே...இப்ப பாரு! அமலாக்கம், ஹார்ட் அட்டாக்குன்னு போயிடுச்சு!'' வரதராஜன் கொட்டித் தீர்த்தார்.
எனக்கென்னவோ அந்த அதிகாரியின் அமுல் பேபி முகம்தான் நினைவிற்கு வந்தது. அச்சமின்றி அணுகிப் பேசலாம். பந்தா இல்லாத ஆசாமி. வரதராஜன்போல், அவருடைய நேர்மையால் வரும்படி பாதிக்கப்பட்ட ஓரிருவரைத் தவிர அவரை யாருமே அப்பழுக்காய்ப் பேசியதில்லை.
திருச்சி டிவிஷன் ஒரு 'வரும்படி' பொக்கிஷம்தான். அதை ஒரு ஒழுங்கிற்குக் கொண்டு வரத்தான் இவரை அங்கு மாற்றினார்கள். அப்படியிருக்க இவரே மாறிவிட்டாரா.. பேப்பர்காரன் பொய் சொல்கிறானா?
மிகவும் வேதனையாகப் போய்விட்டது. உடனே போய்ப் பார்த்துவிட்டு வர வேண்டுமென்று தோன்றவே, ஆபீஸுக்கு லீவ் போட்டுவிட்டு திருச்சி கிளம்பினேன்.
திருச்சிக்குப் போய் இறங்கியபோது இரவு ஏழாகியிருந்தது. லாட்ஜில் ரூம் போட்டுவிட்டு திருவானைக்காவலுக்கு பஸ்ஸைப் பிடித்தேன். அவர் வீட்டிற்குப் போய் விசாரித்துதான் எந்த ஆஸ்பத்திரி என்பதை அறிய வேண்டும். திருவானைக்காவலில் விலாசம் கேட்டதும் ஆளாளுக்கு "ரெய்டு நடந்துச்சே, அந்த வீடுதானே!" என்று நமுட்டு சிரிப்போடு வீட்டிற்கு வழிகாட்டியபோது பாலகிருஷ்ணன் ஸாரை நினைக்க எனக்குப் பரிதாபமாக இருந்தது.
ஆனால், அந்தப் பரிதாபம் அசத்தலான அவருடைய பங்களாவைப் பார்த்ததும் மாறிவிட்டது. மாமரம், தென்னை மரம் என்று புடைசூழ ஒரு பண்ணையார் வீடு கெட்டது. ஒன்றுக்கு இரண்டாக மாருதி கார்கள். இன்னும் உள்ளே என்னென்னவோ... பாலகிருஷ்ணன் மேல் எனக்கிருந்த மதிப்பில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.
கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவனை பாலகிருஷ்ணன் ஸாரின் மனைவிதான் வரவேற்றார்.
"வாங்க... வாங்க... பேப்பர்லே, நியூஸ் பார்த்துட்டு நீங்களெல்லாம் வருவீங்கன்னு எனக்குத் தெரியும்!"
''ஸாரை எங்கே போய்ப் பார்க்கறது?" தயங்கியபடி கேட்டேன்.
"எல்லாம் என் தலை எழுத்து... உள்ளே பெட்ரூமுக்குப் போய்ப் பாருங்க!''
அறைக்குள் எட்டிப் பார்த்தேன். தூக்கி வாரிப்போட்டது. பாலகிருஷ்ணன் ஸார் வேட்டியும் பனியனுமாக கீழே உட்கார்ந்தபடி கார்டுகளில் எதையோ எழுதி எழுதி வீசிக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி கார்டுகள் காடாய் குவிந்திருக்க, நான் வந்து நிற்பதை அவர் கவனிக்கவில்லை. அவர் கிறுக்கி எறிந்ததில் ஒரு கார்டு என் அருகில் விழ, அதில் 'அமலா' என்றிருந்தது. மெதுவாக உள்ளே நுழைந்து பார்த்தபோது பகீர் என்றது. அத்தனை கார்டிலும் 'அமலா', 'அமலா', 'அமலா'தான்!
ஐயோ பாவம்! அமலாக்கப் பிரிவு இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டதே என்று எனக்குத் திரும்பவும் இவர்மேல் பச்சாதாபம் பிறந்தது. ஒரு நல்ல திறமையான அதிகாரிக்கு பணத்தாசையால் இப்படி மனநிலை பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே என்றிருந்தது.
"மூர்த்தி வந்திருக்கார் பாருங்கோ...என்னமோ ஏதோன்னு அவா அவர் பயந்துண்டு உங்களைப் பார்க்க வர்றா! நீங்க என்னடான்னா பைத்தியமாட்டம் டீ.வி., பத்திரிகை, போஸ்ட் கார்டுன்னு உட்கார்ந்துட்டிருக்கீங்க. மானம் போறது!" பாலகிருஷ்ணனின் மனைவி ஒரு அதட்டல் போட்டதும் அவர் நிமிர்ந்து நான் வந்திருப்பதை உணர்ந்தார்.
"அடடா, மூர்த்தியா? வாப்பா... மெட்ராஸ்லேர்ந்து அலறி அடிச்சிட்டு வந்தீராக்கும்.... ஹக்..... ஹக்... ஹக்...." என்று சிரிக்க ஆரம்பிக்கவே, எனக்குக் கொஞ்சம் கோபம்கூட வந்தது!
"இவ நடந்ததையெல்லாம் சொல்லியிருப்பாளே... உனக்கு முன்னாலேயே என்னை பைத்தியம்கறா பாரு... இந்த பைத்தியத்தாலேதான் இத்தனை பெரிய பங்களா, கார், கலர் டீ.வின்னு அனுபவிக்க முடியுது... 'அவனவன் அரசாங்க உத்யோகத்தை வைச்சி எப்படியெல்லாம் சம்பாதிக்கறான். நீங்க பிழைக்கத் தெரியாத பைத்தியமாட்டம் இருக்கீங்களே'ன்னு இவளேதான் என்னை அடிக்கடி குத்திக் காட்டுவா... இப்போ சம்பாதிக்கும்போதும் பைத்தியம்னு சொல்றா..."
நான் நெளிந்தேன்.
"மூர்த்தி ரொம்ப பயந்துட்டயா? பாவம். உன்னை மாதிரிதான் எல்லாரும் என்னை தப்பாவே புரிஞ்சிட்டு திரிஞ்சானுங்க. பங்களா, பிளாட், ஃபிரிட்ஜ்னு சொந்தமாக்கிக்க இப்பெல்லாம் 'அவுட் ஆஃப் வே'யிலே போய் சம்பாதிக்கணும்னு அவசியமேயில்லே... 'பன்றி மார்க் சீயக்காய் தூளே சிறந்தது, ஏனென்றால்... ஒரு பத்து வார்த்தைக்குள்ளே இதை பூர்த்தி செஞ்சி கூப்பனை அனுப்பணும்னு 'மலர் மொட்டு' பத்திரிகையிலே போட்டி வந்திருந்தது. அனுப்பினேன். பங்களா முதல் பரிசா கிடைச்சது! டீ.வி.யிலே ஸ்ரீதேவியோட பழைய மூக்கை மட்டும் காட்டி யார்னு கண்டுபிடிக்கச் சொன்னாங்க. பம்பர் பரிசா ஒரு மாருதி அடிச்சிது.... அப்புறம் 'தரித்திர லட்சுமி ஃபைனான்ஸ்'லே நூறு ரூபாய் 'டெபாசிட்' பண்ணினேன். குலுக்கல் முறையிலே இன்னொரு கார் விழுந்தது... போன மாசம் 'பந்த்' நடந்தன்னிக்கு 'பா.பா' டீ.வி.காரங்க சிறப்பு நிகழ்ச்சி நடத்தினாங்க. 'பந்துவராளிலே அமைஞ்ச சினிமா பாட்டு எது'ன்னு போன்லே சொல்லச் சொன்னாங்க. உடனே டயல் பண்ணி சொன்னேன்.. ஒரேடியா ஐம்பது வேலைக்காரிக்குப் பத்து புடைவை கொடுத்தான்னா பாரேன்.... அப்புறம் 'காஷ்மீர் கி கலி' இந்தி படத்தோட இசையமைப்பாளர் ஓ.பி. நய்யார்னு எழுதிப் போட்டு வடக்கத்தி டீ.வி.காரங்ககிட்டேர்ந்து கலர் டீ.வி.
அடிச்சேன்."
எனக்கு தலையை சுற்றிக்கொண்டு வந்தது!
"என்ன மூர்த்தி, மயக்கம் வருதா... சொல்றதைக் கேளு.... இப்படித்தான் எவனோ மொட்டை பெட்டிஷன் போட, அதை தூக்கிண்டு இன்வெஸ்டிகேட் பண்ணனும்னு 'என்ஃபோர்ஸ்மெண்ட்'காரன் வந்தான். எவிடென்ஸோட நான் சம்பாதிச்ச பொருளுக்கெல்லாம் எப்படின்னு விளக்கம் சொன்னேன். பாவம் அந்த ஆபீஸர் - எதை எதையோ எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு வந்தவருக்கு ஒரே ஷாக்... ஹார்ட் அட்டாக் வந்து விழுந்துட்டாரு... அவரோட வந்தவங்க தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனாங்க... பேப்பர்காரன் இதைத்தான் மொட்டையா குட்டிச் செய்தின்னு போட்டுட்டான்... இப்ப பாரு, நீயே மெட்ராஸ்லேர்ந்து அலறி அடிச்சிட்டு வந்திருக்கயே..."
நான் பேந்தப் பேந்த முழித்தேன். அவர் தொடர்ந்தார்.
"பயப்படாதே! நான் இன்னும் நேர்மையான அதிகாரிதான்... இந்த மட்டும் என்ன ஏதுன்னு விசாரிக்க வந்தியே, ரொம்ப தாங்க்ஸ்... ஊருக்கு இன்னிக்கே திரும்பறதுன்னா எனக்கொரு ஹெல்ப் பண்ணு..... வீட்டைத் தாண்டிய விசாலி' சீரியல்லே. ‘வேதம் புதிது’ படத்தோட மூன்றெழுத்து கதாநாயகி யார்னு கேட்டிருந்தாங்க... நாளைக்குள்ளே போய்ச் சேரணும்... அதைத்தான் அமலா அமலான்னு போஸ்ட்கார்டிலே எழுதிட்டு இருந்தேன். எப்படி அனுப்பறதுன்னு புரியாம இருந்தது. நல்லவேளை, நீ வந்தே. ஐநூறு கார்டு இருக்கு... தி.நகர் போஸ்ட் ஆபீஸிலே கொண்டு போய் நாளைக்கே போட்டுடு... 'வாஷங்மிஷின் விழுந்தா நீயே எடுத்துக்கோ. எங்கிட்டே ஏற்கெனவே பரிசா விழுந்தது இருக்கு!''
பைத்தியமா... சூழ்நிலைகளால் பைத்தியமாக்கப்பட்டிருக்கிறாரா... குழப்பத்துடன் அவர் கொடுத்த கார்டு கத்தைகளை வாங்கிக் கொண்டாலும், சென்னை வந்து இறங்கியதும் தி.நகர் போஸ்ட் ஆபீஸ் போவதுதான் என் முதல் காரியமாக இருந்தது. வாஷிங் மிஷின் விழுந்தால் வேண்டாமென்று சொல்ல எனக்கென்ன பைத்தியமா!
பின்குறிப்பு:-
கல்கி 18 பிப்ரவரி 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்