தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படும் பண்டிகை இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி எனக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், கிரகங்களின் அரசனான சூரிய பகவான்
தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசியில் நுழைகிறார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது சங்கராந்த் எனப்படும். ஒரு சங்கிராந்திக்கும் மற்றொன்றுக்கும் இடைப்பட்ட காலம் சூரிய மாதம். ஒரு வருடத்தில் மொத்தம் 12 சங்கராந்தங்கள் உள்ளன, ஆனால் மகர சங்கராந்த் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. உத்தராயணம் முடிந்து சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் தை மாதத்தில், இந்நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
இந்த மகர சங்கராந்தி கொண்டாட்டங்களில் இரண்டு கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.
கிச்சடி இந்தியாவின் ஒரு அதிசயமான பிரதானமான உணவு. எளிமையான இந்திய உணவான கிச்சடியில் கவனம் செலுத்தி கின்னஸ் உலக சாதனையை இந்தியா இரண்டு முறை எட்டியுள்ளது.
மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக அப்போது இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மற்றும் சுவாமி ராம்தேவ் ஆகியோருடன் இணைந்து உலக உணவு இந்தியா 2017 விழாவில் 'கிச்சடி' சமைத்து உலக சாதனை படைத்தனர்.
உலக உணவு இந்தியா நிகழ்வில், இந்தியப் பொருட்கள் மற்றும் உணவு வகைகளை ஊக்குவிக்கும் வகையில், தில்லியில் உள்ள இந்தியா கேட் புல்வெளியில் (India Gate Lawns) 1000 லிட்டர் துருப்பிடிக்காத ஸ்டீல் கடாயைப் பயன்படுத்தி 918 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டு புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்தது. தி கிரேட் இந்தியன் ஃபுட் ஸ்ட்ரீட்டின் பிராண்ட் அம்பாசிடரான செஃப் சஞ்சீவ் கபூர் மற்றும் அக்ஷயா பத்ரா ஆகியோர் தலைமையிலான 50 பேர் கொண்ட குழு இக்கிச்சடியை தயாரித்தது.
அந்த சாதனையை முறியடித்து இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மிகப்பெரிய கிச்சடியை தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 2020 ம் ஆண்டு ஜனவரி 15 ம்தேதி மகர சங்கராந்தி விழா கொண்டாடத்திற்காக ஹிமாச்சல் பிரதேச சுற்றுலா துறை சிம்லா அருகே மாண்டி மாவட்டத்தில் தட்டாபானி என்ற ஊரில் 1995 கிலோ எடையில் கிச்சடி செய்து உலக கின்னஸ் சாதனை படைத்தார்கள். சிம்லாவின் ஹோட்டல் ஹாலிடே ஹோமில் இருந்து 25 சமையல் கலைஞர்கள் கொண்ட சமையல் கலைஞர்கள் குழு இந்தப் பணிக்காக இணைந்து 405 கிலோ அரிசி, 190 கிலோ பருப்பு, 90 கிலோ நெய் கலந்து 5 மணிநேரத்தில் செய்து முடித்தார்கள்.
இதற்காக பயன்படுத்தப்பட்ட பாத்திரம்கூட கேள்விப்படாத அளவீடுகள் கொண்டது. இது ஹரியானாவில் உள்ள ஜகதாரி என்பவரிடமிருந்து சிறப்பாகப் பெறப்பட்டது. இதன் எடை 270 கிலோ... கிட்டத்தட்ட 2,000 கிலோ உணவு சமைக்கக்கூடிய பாத்திரம். 4 அடி ஆழமும் 7 அடி விட்டமும் கொண்டது. சட்லஜ் நதியில் புனித நீராடிய பிறகு பக்தர்களுக்கு சாதனை படைத்த கிச்சடி அன்று வழங்கப்பட்டது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவான உலகின் மிக நீளமான கேக்யை உருவாக்கியது நம் இந்தியாதான்.
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் கேக் தயாரிப்பு அசோசியேசன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 2020 ஆண்டு ஜனவரி 15ம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் 1500 பேக்கரி சமையல் கலைஞர்கள் இணைந்து 5,300 மீட்டர் நீளமுள்ள (17,338 அடி), 4 அங்குலம் கணத்தில் கேக்யை 4 மணி நேரத்தில் உருவாக்கினார்கள். அதை 6.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு திறந்த வெளியில் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.
இதற்காக 12,000 கிலோ சர்க்கரை, மாவு எல்லாம் சேர்த்து 27,000 கிலோவில் கேக்யை உருவாக்கினார்கள். சீனா இதற்கு முன்னர் 2018 ல் 3.2 கி.மீ. நீளமுள்ள கேக்யை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருந்தது. இந்த ரிக்கார்டை உடைக்கவேண்டும் என 6.5 கி.மீ. நீளமுள்ள கேக் செய்து அசத்தினார்கள். இது உலகின் மிக நீளமான கேக் என்று கின்னஸ் சாதனை புத்தக நிறுவனம் ஏற்றுக்கொண்டது.