

சமீப ஆண்டுகளாக ஒரே போராக (War) இருக்கிறதே! இதை ஒரு சாமானியரால் நிறுத்தமுடியுமா? எதுவும் ஒரு புள்ளியிலிருந்துதான் ஆரம்பமாகும்:
எந்த ஒரு உலகப் போரும் தீக்குச்சி பற்றுவதுபோல் அடுத்த வினாடியே ஆரம்பமாகுவதில்லை. அது பல வருடங்களுக்குமுன்பே கொஞ்சம் கொஞ்சமாகத் தீய எண்ணம் உடையவர்களால் ஊதி பெரிதாக்கப்பட்டு முடிவில் ஒரு நாள் போராக ஆரம்பமாகிறது. இந்த வகையான போர் சில நேரங்களில் பலத்தை நிரூபிக்கவும், தீயசக்திகளை அழிக்கவும் என்று தொடங்கப்பட்டு, நாளடைவில் அதைச் சுற்றியுள்ள அப்பாவி மக்கள் பாதிப்படைவதைக் கொஞ்சம்கூட கண்டுகொள்ளாதபடி அந்தந்த அரசாங்களை மாற்றிவிடுகிறது. இறுதியில் அந்தந்த நாடுகள் எதிர்பார்த்த விஷயங்கள் அழிந்ததோ இல்லையோ, எதற்கு இறந்தோம் என்றுகூட தெரியாமல் பல ஆயிரக்கணக்கான மக்கள் அழிந்துவிடுகிறார்கள், அழிந்துகொண்டும் இருக்கிறார்கள்.
அனைத்துச் சாமானியரிடம் இருக்கும் சக்திகள்: நாடுகளுக்கு இடையே போர்கள் வெடிக்கும்போது, அவற்றைத் தடுக்கும் உடனடி சக்தி பெரும்பாலும் அரசாங்கங்கள் மற்றும் தலைவர்களிடம்தான் உள்ளது. இருப்பினும் சில நேரடி, மறைமுக நடவடிக்கை மூலம் அந்தந்த நாட்டின் குடிமக்கள் இந்த மோதல்களைக் கட்டுப்படுத்துவதில் அல்லது நிறுத்துவதில் ஒரு தீர்க்கமானப் பங்கை வகிக்க முடியும் என்பதை வரலாறு காட்டுகிறது. இன்றைய டிஜிட்டல் பரிணாமத்தால் இணைக்கப்பட்ட உலகில் ஒரு போரைக் கட்டுப்படுத்துவதில் சாதாரண மக்களுக்கு பல வழிகள் இருக்கின்றன.
போர் சூழல் உள்ள நாடுகளில் குடிமக்கள் நேரடியாக டிஜிட்டல் செயல்பாட்டின் மூலம் அணிதிரள முடியும். சமூக ஊடகத் தளங்களால் ஒவ்வொரு நபர்களும் உலகளவில் போர் எதிர்ப்புக் குரல்களைக் கொடுக்க அனுமதிக்கின்றன. அப்படி ஒவ்வொருவரும் ஒன்றுகூடி கோடிக்கணக்கில் ஒரு பொதுக்கருத்தை எடுத்துவைத்தால் சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் மீது அழுத்தத்தை உருவாக்கும்.
தீ பற்றிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளலாமே: நாடுகள் இடையே முரண்பாடு ஏற்படும்போதோ அல்லது போர் சூடுபிடிக்கும் முன்பே அனைத்து மக்களால் பகிரப்படும் வைரல் பிரச்சாரங்கள்(campaigns), ஹேஷ்டேக்குகள்(hashtags) மற்றும் ஆன்லைன் மனுக்கள்(online petitions) மூலம் இதனைப் பற்றிய விழிப்புணர்வு சில மணிநேரங்களில் மில்லியன் கணக்கானவர்களைச் சென்றடைகின்றன. இது போரைத் துரிதபடுத்த நினைக்கும் அந்தந்த அரசாங்க கொள்கையில் பின்வாங்குவதைப் பற்றி யோசிக்க வைக்கலாம்.
இதோடு மறைமுகமாக மக்கள் பொருளாதார எதிர்ப்பில் (economic resistance) கூட ஈடுபடலாம். போருக்குத் தேவையான பொருட்களை வழங்கும் நிறுவனங்களைப் புறக்கணிப்பதன் மூலம், மோதல் ஏற்படக்கூடும் நேரங்களில் அரசாங்களுக்குத் தேவைப்படும் நிதி ஊக்கங்களைப் பலவீனப்படுத்தி அவர்களை அமைதியைநோக்கி கொண்டு வரலாம்.
மக்களிடம் உள்ள ஒற்றுமை: மற்றொரு சக்திவாய்ந்த அணுகுமுறை கலாச்சார இராஜதந்திரம் (cultural diplomacy). ஒவ்வொரு நாட்டு குடிமக்களும் தங்களின் கலை, இசை, திரைப்படம் மற்றும் இலக்கியங்களைப் பயன்படுத்தி அவரவர் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி வசிப்பவர்களுக்குள் ஒரு மனிதாபிமானத்தை(humanize) விதைக்கலாம். இது அவர்களுக்குள் உருவான விரோத எண்ணங்களை அழிக்கலாம். எடுத்துக்காட்டாக, எதிரி என்று பிறரால் சொல்லப்படும் நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் (artists) நமக்கும் இடையேயான கூட்டுமுயற்சி மூலம்; அந்தந்த நாடுகளின் மக்கள் இதயங்களில் மனிதாபிமானத்தையும், தேவையான புரிதலையும் விதைக்கலாம்.
இதேபோல் அந்தந்த நாடுகள் இடையே ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் மன்றங்கள்(forums), பாட்காஸ்ட்கள்(podcasts) மற்றும் கேமிங் தளங்கள்(gaming platforms)மூலம் நாடுகளுக்கு இடையே உள்ள இளைஞர்களை இணைக்க முடியும். இதன்மூலம் அங்கு நிகழும் உண்மையான நிலவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் அல்லது தீர்வையும் பரிமாறிக்கொள்ளலாம்.