‛வந்தே பாரத்’ வந்தது எப்படி?

Vande Bharat Express
Vande Bharat Express

- தா.சரவணா

பணி ஓய்வு பெற உள்ள நிலையில் இருப்பவர்களிடம், இந்திய ரயில்வே நிர்வாகம், ஒரு கேள்வி கேட்கும். அதாவது, இந்தியாவில் உங்கள் விருப்பப்படி எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் மாறுதல் தருவோம், சொல்லுங்கள் உங்கள் விருப்பம் என்ன? என்பதாகும். வாழ்நாள் முழுக்க இட மாறுதலில் சிக்கும் பணியாளர்கள், கடைசியில் ஒரு ஊரை தேர்வு செய்து, அந்த ஊரில் ஒரு சொந்த வீடு, வாசல் வாங்கி செட்டிலாகட்டுமே என்ற நல்லெண்ணம்தான் அதற்குக் காரணம்.

இந்த வகையில், பணி ஓய்வுக்கு இரு ஆண்டுகள் இருந்தவர்களில் ஒருவரான சுதான் ஷூ மணி என்பவரிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தேர்வு செய்தது சென்னை ஐசிஎப் (ICF- Integral Coach Factory). அதைக் கேட்ட அதிகாரிகள், “எதுக்குய்யா சென்னைக்கு போகணும்னு அடம் பிடிக்கற?” என்றனர். அதற்கு அவர், “நம் நாட்டுக்காக ஒரு அதிவிரைவு ரயில் உருவாக்கணும். அதுக்கு எனக்கு ஒரு நல்ல டீம் வேண்டும்” என்றாராம்.

அதேநேரத்தில்தான் ஸ்பெயின் நிறுவனமான டால்கோ, மணிக்கு 180 கிமீ வேகத்தில், பத்து பெட்டிகள் மட்டுமே கொண்ட ஒரு ரயிலை 250 கோடிக்கு இந்திய ரயில்வேக்கு விற்க ஒப்பந்த புள்ளி கோரியது. மேலும், தொழிற்நுட்பம் சார்ந்த எந்த தகவல் பரிமாற்றமும் தர மாட்டோம் என்ற நிபந்தனை வேறு.

அதன் பின்னர் சென்னை வந்து சேர்ந்த சுதான் மணி, அங்குள்ள உயர் அதிகாரிகளிடம், ‛அய்யா, ஸ்பெயின் ரயிலைவிட உன்னதமான ரயிலை நம்மால் டிசைன் செய்ய முடியும். அதுவும் பாதி விலையில் என்றுள்ளார். இதைக் கேட்ட அங்கிருந்த உயர் அதிகாரிகள் வாயைப் பிளந்துள்ளனர். பின்னர் ஒரு வழியாக அரசுக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டு, சுதானின் ஆலோசனை ஏற்கப்பட்டு, அந்தப் பணிக்காக ஒரு குழு தயாரிக்கப்பட்டு, ஆராய்ச்சிப் பணிக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் ஐசிஎப்பில் மணி மற்றும் குழுவினர் இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தனர். அது அவர்களின் கர்ம யோகத்தின் உச்சம். அவர்களால் புதிதாக தயாரிக்கப்பட்ட அந்த டிரெயின்தான் ‛வந்தே பாரத்' (இதற்கு முன் Train 18 என அழைக்கப்பட்டது).

16 கோச்சுகள் கொண்ட ரயில், 180 கிமீ வேகம். 54.6 வினாடிகளில் 100 கிமீ வேகம் எடுக்கும். 180 கிமீ வேகம் என்பது, 145 செகண்டுகளில். இதற்கான தயாரிப்பு செலவு 97 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், ஸ்பெயின் நிறுவனத் தயாரிப்பு 10 கோச்சுகளுக்கு 250 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மணி மற்றும் குழுவினரின் தயாரிப்பு, 97 கோடி ரூபாயில் சாத்தியமானது.

அப்படி என்ன பெரிய டிசைன் இந்த வந்தே பாரத் ரயிலில்? என பலரின் மனதில் தோன்றலாம்.

இதையும் படியுங்கள்:
‘நீட் தேர்வு’ எதிர்ப்பு ஹிந்தி எதிர்ப்பின் நீட்சியா?
Vande Bharat Express

இந்த ரயிலுக்கு என்று தனியே ஒரு இன்ஜின் தேவையில்லை. ஒவ்வொரு கோச்சும் சுய உந்துதலில்(Self Propellant) முன்னேறும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு கோச்சிலும் ஒரு மோட்டார்.

இதன் சோதனை முயற்சியாக முதலில் டில்லியிலிருந்து வாரணாசி வரை முதல் ஓட்டம் வெற்றி பெற்றது. கிழக்கே போன இந்த ரயில், வெற்றிகரமாக ஓடிய போதெல்லாம் நம்ம மணியை ஒருவரும் பாராட்டவில்லை. மணி யாருன்னுகூட உலகுக்கு தெரியவில்லை.

ஆனால், ஒரு எருமை கூட்டம், தண்டவாள பாதையில் வந்து இந்த ரயில் மோதியவுடன், ‘என்னத்த ரயில் செஞ்சு விட்டிருக்காங்க? தகர டப்பா மாதிரியில்ல இருக்கு? இதுல எந்த இஞ்சீனியருக்கு எவ்ளோ கமிஷனோ? அந்த காலத்துல, பிரிட்டிஷ் செஞ்ச இன்ஜின் இருக்கே! அதுல காண்டாமிருகமே குறுக்கே வந்தாலும், சும்மா தூக்கி வீசிட்டு ரயில் போயிட்டே இருக்கும் தெரியுமா?’ என்று இணைய ஊடகங்களில், கண்ட தகவல்களை ஏகப்பட்ட மெக்கானிக்கல் இன்ஜினியர்கள். சும்மா அள்ளி விட… என்னே நாம் செய்த பாக்கியம்.

இவ்வளவு சர்ச்சை வெடித்ததும், மனம் பொறுக்கமுடியாமல் தனது டிசைன் எப்படி வேலை செய்யும்? எவ்வளவு மேம்பட்டது? என மணி ஒரு கட்டுரை எழுதினார்.

நம்பி நாராயண் வடிவமைத்த விகாஸ் இன்ஜின்தான், செவ்வாய் கிரகம் வரை நமது செயற்கை கோள்களை நிலை நிறுத்துகின்றது. அவரையும் நாம் 15 வருடம் அல்லாட விட்டோம் என்ற கதையை தெரிந்துகொள்ளவே ஒரு திரைப்படம் வர வேண்டியிருந்தது.

நம் நாட்டில் இது போல சில நம்பிகள், சிவன்கள், மணிகள் தன்னலம் பாராமல், கர்ம யோகம் பயில்வதாலேயே, பாரதம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

2023ல் மணி தன் பணியிலிருந்து மன நிறைவோடு ஒய்வு பெற்று லக்னோவில் வசித்து வருகிறார். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, இந்த ரயிலை டிசைன் செய்ய ரயில்வே நிர்வாகம் ஒதுக்கிய 100 கோடியில், 97 கோடி போக, மிச்ச 3 கோடியை மணி பத்ரமாகத் திருப்பி தந்து விட்டாராம்!srtip

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com