

பொதுச்சொத்துக்களின் சேதாரங்களைச் சுட்டிக்காட்டுவது நம் கடமையல்லவா!!
நம் கண் முன் அவல நிலையில் பெரும் சேதாரத்துடன் காணப்படும் பொதுச்சொத்துக்களைப் பற்றி பொதுமக்களாகிய நாம் எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கலாம்?
தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை (online grievance redressal) என்றால் என்ன செய்யலாம்? எங்கு புகாரளிக்கலாம்?:
இந்தியாவில் உள்ள பொதுச்சொத்துக்களான சாலைகள், பாலங்கள், குடிநீர் குழாய்கள், மின் கம்பங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகள் ஆகியவை பல குடிமக்களின் வாழ்வின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன. இந்தச் சொத்துக்கள் சேதமடையும்போது நாம் எவ்வளவு விரைவாக புகாரளிக்கிறோமோ; அந்தளவு சிறப்பாகப் பல அப்பாவி மக்களின் நலனைப் பாதுகாக்க முடியும்.
தற்போது இந்தியாவில் அனைத்து பொதுச்சொத்து சேதங்களையும் புகாரளிப்பதற்கு என்று ‘ஒரு பொதுவான தேசிய இணையதளம்’ இல்லை. மாறாக பெரும்பாலான மாநிலங்களும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் (states and urban local bodies). அந்தந்த நகராட்சிகளின் வலைத்தளங்கள் (municipal corporation websites), அதற்கான மொபைல் செயலிகள் அல்லது உதவி எண்கள் மூலம் ‘பொதுமக்கள் குறை தீர்க்கும்’ தளங்களாக வைத்துள்ளன. உதாரணமாக நம் தமிழ்நாட்டில் ‘முதல்வரின் முகவரி’ (CM Helpline Portal.com) என்ற தளமும். மற்ற நகரங்களில் உள்ள புகார்களை பதிவு செய்ய 'ஸ்மார்ட் சிட்டி' (Smart City) செயலிகள் அல்லது 'ஸ்வச்சதா' (Swachhata) போன்ற இணையதளங்கள் இதற்காக இருக்கின்றன.
எதில் தாக்கம் அதிகம் உள்ளது? Online or Offline:
இன்றைய காலகட்டத்தில் offline (நேரடியாக போவது) அல்லது Online (மொபைல் மூலம் புகாரளிப்பது) எதில் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது என்று பார்த்தால்; onlineதான் அதிக கவனத்தைப் பெறுகிறது. காரணம் அதுதான் அனைத்து தரப்பினராலும் கண்காணிக்கக்கூடியதாக உள்ளது.
இந்த வகையான டிஜிட்டல் தளங்கள் குடிமக்கள் புகார்களைப் பற்றிய புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யவும், அதன் தற்போதைய நிலையை கண்காணிக்கவும் அனுமதிக்கின்றன. கடிதங்கள் அல்லது நேரடிவருகைகள் மூலம் ஆஃப்லைனில் புகாரளிக்கும் போது இந்த வசதிகள் பெரும்பாலும் இருப்பதில்லை. இருப்பினும் இணைய சேவைகள் குறைவாக உள்ள கிராமப்புறங்களில் offline வழிகள் முக்கியமானவையாகவே இருக்கின்றன.
எந்தெந்த பொதுச் சொத்துகளின் சேதாரங்களைப்பற்றி காலம் தாழ்த்தாமல் புகார் அளிக்க வேண்டும்?
‘சாலைகள் மற்றும் பாலங்களில்’ உள்ள சேதங்கள் விபத்துக்களை ஏற்படுத்தும்.
‘மின் கம்பங்கள் மற்றும் transformers’ இதனால் தீ அல்லது மின்சாரத் தாக்குதல் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.
‘குடிநீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் அமைப்புகள்’. இதனால் ஒட்டுமொத்த மக்களுக்கும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும்.
‘பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ரயில்வே சொத்துக்கள்’ போன்ற பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்புகளின் பிரச்னைகள்.
புகாரளிக்கப்பட்ட பிரச்னைகள் நீண்ட காலத்திற்குத் தீர்க்கப்படாமல் இருந்தால்?
குடிமக்கள் சட்டப்பூர்வமாக பல தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம். பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் சட்டம், 1984படி குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எப்படி அதிகாரம் அளிக்கிறதோ அதற்கு இணையாக அரசாங்க நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டால் பொதுநல வழக்குகள் (Public Interest Litigation (PIL) தாக்கல் செய்யும் உரிமையை நீதிமன்றங்கள் குடிமக்களுக்கு உறுதி செய்துள்ளன. எனவே, நிர்வாக ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்; இந்தச் சட்டக் கட்டமைப்புகளும் சில நேரங்களில் அரசாங்களுக்குப் பொறுப்புணர்வை நினைவூட்டுகின்றன.