கலைஞர் அண்ணா! | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்!
கலைஞர் அண்ணா! | கலைஞர் 100

கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

தமிழக முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணாவின் மறைவினை அடுத்து 10 பிப்ரவரி 1969 அன்று முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் கலைஞர் கருணாநிதி. அறிஞர் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கல்கி இதழில் 1969ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி கலைஞர் கருணாநிதி எழுதிய கட்டுரை வெளியானது. அண்ணா குறித்த அந்தக் கட்டுரைக்குக் கலைஞர் கொடுத்த வித்தியாசமான தலைப்பு : "கலைஞர் அண்ணா"!

அந்தக் கட்டுரை இதோ:

கலைஞர் அண்ணா!

மு.கருணநிதி, முதல் அமைச்சர், தமிழ்நாடு!

கலைஞர்களைப் பற்றிப் பேரறிஞர் அண்ணா ஒரு முறை அழகாகச் சொன்னார்: "ஏதேனும் ஒரு கலைத் துறையில் சிறப்பாகச் செயலாற்றிக் கொடி நாட்டியவர்களிடம் எந்தக் காரியத்தை ஒப்படைத்தாலும், அதனைத் திறம்படச் செய்து முடிப்பார்கள். ஏனெனில் அவர்கள். தங்களைச் சுற்றி இருக்கும் அத்தனை பேர்களின் ஆசாபாசங்களையும் அறிந்து வைத்திருப்பவர்கள்'' என்றார்.

இதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமானால் அண்ணாவையே கூடச் சொல்லலாம். ஏனெனில் எந்தத் துறையில்தான் அவர் ஈடுபடவில்லை! எந்தத் துறையில்தான் அவர் வெற்றிக் கொடி நாட்டவில்லை?

மேடைப் பேச்சுக்கு அவர் தந்த மெருகினை மறக்க முடியுமா? எழுத்துலகுக்கு அவர் தந்த ஏற்றமிகு உயிரோவியங்களை மறக்க முடியுமா? நாடகக் கலையை அவர் வழிநடத்திச் சென்ற நளினத்தை மறக்க முடியுமா? முடிவில், நாடாண்ட விதத்தில் அவர் காட்டிய நயங்களைத்தான் மறக்க முடியுமா?

அவரது ஒப்பற்ற சாதனைகளுக்குக் காரணம், அவரே கூறியது போல், அந்தக் கலையுள்ளம்தான் அடிப்படை. "என் தம்பிமார்களைவிட, ஏன், எல்லா அரசியல்வாதிகளைவிடவும் எனக்குக் கலைத் துறையில் நிறைய அனுபவம் உண்டு" என்று அவர் கூறியிருக்கிறார்.

அவர் ஒரு கலைஞர், பேச்சுக் கலைஞரா? எழுத்துக் கலைஞரா? ஓவியக் கலைஞரா? அல்லது நடிப்புக் கலைஞரா? பிரித்துப் சொல்வது கடினம். அவர் எல்லாமாய், எல்லாமுமாய் இருந்தார். “அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்" ஏன்பதுபோல், அவரது கைவண்ணமோ, நாவண்ணமோ, கருத்து வண்ணமோ படாத துறையில்லை; பொருளின்மை இருந்தாலும் நாடகம், நடிப்புக் கலையில்தான் அவருக்கு நாட்டம் அதிகம்.

அரசியல் - கட்சிப் பிரச்னைகளில் மூழ்கி எழும் நேரம் போக எஞ்சிய நேரத்தை நடிப்புக் கலைஞர்களுடன் அளாவிக் கழித்தவர் அவர். ஒரு கருத்தை முதலில் பேச்சாகச் சொன்னவர் அவர். அடுத்துக் கட்டுரையாக எழுதியவர் அவர். அதுவும் போதாதென்று நாடகமாக வடித்துத் தந்தவர் அவர். முடிவாக. அந்த நாடகத்திலேயே நடித்துக் காட்டியவரும் அவர்தான்.

நாடகம் என்றதும் எனக்கு “ஓர் இரவு" நினைவுக்கு வருகிறது. நடிப்பிசைப் புலவர் கே. ராமசாமி கேட்டாராம்: 'புதிய நாடகம் இல்லையே அண்ணா!” என்று. “வரம் தந்தேன் - வாங்கிக்கொள்” என்று முனிபுங்கவர்கள் சொன்னது போல இரவோடு இரவாக ஓர் நாடகம், இணையற்றதோர் நாடகம் – அமரர் கல்கியிடமிருந்து “தென்னாட்டின் பெர்னாட்ஷா” எனும் பட்டத்தை வாங்கித் தந்த நாடகம் உருவாகிவிட்டது. அதுதான் ஓர் இரவு. அண்ணாவே சொன்னது போல "ஒப்பற்ற இரவு!" ஓரிரவில் நடந்து முடிகின்ற அந்தக் கதையை ஒரே இரவில் எழுதி முடித்தார். நாடகாசிரியன் என்ற முறையில் எனக்கு மலைப்பாக இருக்கிறது. இப்படியொரு சாதனையை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியுமா? இல்லை அண்ணாவால் மட்டுமே முடியும்!

ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றபொழுது, அவரால் அந்தப் பதவிக்குப் பெருமை ஏற்பட்டுவிட்டது" என்று கல்கி எழுதினார். என் அண்ணன் அரங்கத்திலேறி - அரிதாரம் பூசி நடித்ததால் நாடகத் துறைக்கே - நடிப்புக் கலைக்கே மாபெரும் மதிப்பு ஏற்பட்டு விட்டது. நடிகர்களைக் 'கூத்தாடிகள்" என்று நையாண்டி செய்தவர்கள், 'வேஷதாரிகள்" என்று ஏளனம் பேசியவர்கள் எல்லாம் வாயடங்கிப் போயினர்.

ஆய கலைகள் அறுபத்து நான்கில் நடிப்பும் ஒரு கலைதான்" என்று உணர்த்தியவர் என் அண்ணன், பட்டம் காற்றில் பறக்கும்பொழுது அதோடு சேர்த்துக் கட்டியிருக்கும் வாலும் உயர உயரப் போகுமே! அப்படி அண்ணா அரசியல் உலகில் மேல் நிலைக்குப் போகப் போக , அவரது அந்தரங்கமான அன்புக்குப் பாத்திரமான நடிப்புக் கலையும் மேலே மேலே சென்றது. கூத்தாடிகள்', வேஷதாரிகள்' என்ற சொற்கள் மறைந்து, 'கலைஞர்கள்' என்ற புதிய சொல் பூப்போல மலர்ந்தது.

அண்ணாவின் இதயத்தில் தனியிடம் பெற்றவர் கலைவாணர் என். எஸ். கே. அவர்கள் இடையில் இருந்தது வெறும் பரிச்சயமோ - பழக்கமோ அல்ல;. உறவு என்ற சொல் கூடப் போதாது. ஏதோ ஒரு வகையான உயிர்ப் பிணைப்பு. கலைவாணர் காலமாவதற்கு முன் கடைசியாக அவர் திறந்து வைத்தது அண்ணாவின் திருவருவப் படம். அண்ணா மறைவதற்கு முன் கடைசியாகத் திறந்து வைத்தது கலைவாணர் சிலை. எந்தக் கலைஞர்களுக்கு மத்தியில் இப்படியொரு உயிர்ப் பிணைப்பு இருந்தது?

"தமிழ் நாடக உலகுக்கு ஒரு பெர்னாட்ஷா கிடைத்து விட்டார்: ஒரு இப்ஸன் கிடைத்து விட்டார்; ஒரு மோலியர் கிடைத்து விட்டார்'' என்று கல்கி ஒரு முறை எழுதினார். கிடைத்து விட்டார்" என்று அவர் எழுதிய பொழுது நம் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. ஆனால் இன்று அவர் மறைத்து விட்டார் என்று எண்ணும்பொழுது... ஐயகோ! எவ்வளவு பெரிய இழப்பு! கழகத்தினர் தங்கள் அண்ணனை இழந்துவிட்டனர். கலைஞர்கள். தங்களுக்கு நண்பனாய் நல்லாசிரியனாய், பாதுகாவலனாய் இருந்த ஓர் ஒப்பற்ற கலைஞரை இழந்து விட்டனர். “கலை என்பது மக்களை மகிழ்விப்பதற்கு மட்டுமல்ல; அவர்களது மனங்களில் சிந்தனையைக் கிளற வேண்டும்” என்பதுதான் அண்ணாவின் கருத்து. அவர் வகுத்துத் தந்த கலைப்பாதையையும் அதுதான். அந்தப் பாதையில் சென்று கலையாலும் மக்கள் நிலை உயர்த்தப் பாடுபடுவதுதான் கலை உலகம் அவருக்குச் செலுத்தும் காணிக்கையாகும்.

-கல்கி 23.03.1969 இதழ்

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com