

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் “எங்க ஊர் சாமி எனும் தலைப்பில் உங்க ஊர் சாமியின் மகிமையை சொல்லுங்க’’ன்னு கேட்டிருந்தோம். அதில் தேர்வான சுவாரஸ்யமான கட்டுரைகளில் இரண்டாவது கட்டுரை இதோ…
திருவிதாங்கூர் சமஸ்தான வரலாற்றில் களியங்காடு சிவன் கோவில்:
ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் புண்ணிய பூமியான கன்னியாகுமரி மாவட்டத்தில், நகரின் நுழைவாயிலாகத் திகழும் களியங்காடு (சிவபுரம்) பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சி சமேத சிவபெருமான் திருக்கோவில்.
இக்கோவில் எங்கள் வீட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மன அமைதி இல்லாமல் இருக்கும் போது இங்கு சென்று வந்தால் நிம்மதியாக இருக்கும். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில், அமைதியான தெப்பக்குளத்துடன் காட்சியளிக்கும் இக்கோவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வீர வரலாற்றோடும், ஓர் அர்ச்சகரின் உன்னதமான தியாகத்தோடும் நெருங்கிய தொடர்புடைய ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலின் வரலாறு மற்றும் மகிமையை இங்கு பார்க்கலாம்.
அர்ச்சகரின் தியாகம்: மன்னர் மார்த்தாண்ட வர்மா தனது ஆட்சிக்காலத்தில் தனது அரசியல் எதிரிகளால் துரத்தப்பட்டபோது, தப்பி ஓடி இந்த களியங்காடு சிவன் கோவிலில் அடைக்கலம் புகுந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த எதிரிப்படை சூழ்ந்துகொண்ட வேளையில், அங்கிருந்த கோவிலின் தலைமை அர்ச்சகர் மன்னரைக் காப்பாற்ற ஒரு சாதுரியமான முடிவை எடுத்தார்.
அவர் தனது அர்ச்சகர் ஆடையை மன்னருக்குக் கொடுத்து, மன்னரின் அரச உடைகளைத் தான் உடுத்திக்கொண்டார். அர்ச்சகரின் வேடத்தில் மன்னர் மார்த்தாண்ட வர்மா அங்கிருந்து தப்பித் திருவனந்தபுரத்திற்குப் பத்திரமாகச் சென்றடைந்தார். ஆனால், அரச உடையில் இருந்த அர்ச்சகரை மன்னர் என்று தவறாக நினைத்த எதிரிக்கூட்டம் அவரை அங்கேயே வெட்டிக்கொன்றது.
பிற்காலத்தில் அர்ச்சகரின் இந்த அதீத அரசபக்தியையும் தியாகத்தையும் அறிந்த மன்னர் மார்த்தாண்ட வர்மா, மிகுந்த மனவருத்தமடைந்து, நன்றிக்கடனாக இந்தக் கோவிலுக்குப் பல ஏக்கர் நிலங்களை மானியமாக வழங்கினார் என்று வரலாற்றுச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.
இந்த கோவிலின் மகிமைகள்:
1.ஆபத்துக்களை நீக்கும் ‘அபயத் தலம்: வாழ்க்கையில் எதிர்பாராமல் வரும் பெரிய ஆபத்துகள், எதிரிகளின் தொல்லைகள், அரசியல் அல்லது தொழில் ரீதியான நெருக்கடிகளில் சிக்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு ஒரு வழி பிறக்கும் என்பது பக்தர்களின் பலத்த நம்பிக்கை.
2.தேய்பிறை அஷ்டமி கால பைரவர் மகிமை: இக்கோவிலில் தனிச்சன்னதியில் வீற்றிருக்கும் கால பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று இங்கு நடைபெறும் சிறப்புக் கூட்டு வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவருக்கு வடை மாலை சாத்தியும், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தும், மிளகு தீபம் (சிவப்புத் துணியில் மிளகைக் கட்டி நெய் தீபம் ஏற்றுவது) ஏற்றியும் வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டின் மூலம் தீராத கடன்கள் தீரும், ஏவல்-பில்லி-சூனியப் பயங்கள் நீங்கும் மற்றும் சனிக்கிரகத்தின் தாக்கத்தால் ஏற்படும் ‘சனி தோஷங்கள்’ விலகும் என்பது இத்தலத்தின் முக்கிய மகிமையாகும்.
3. மன அமைதி தரும் தியானத் தலம்: கோவிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனித்துவமான அமைதியும், ஆன்மீக அதிர்வுகளும் (Positive Vibrations) மனதை ஆட்கொள்ளும். இக்கோவிலில் உள்ள பழமையான மரங்களும், முன்புறம் உள்ள தெப்பக்குளமும் மன அமைதியைத் தந்து, தியானம் செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்குகிறது.
4. குடும்ப ஒற்றுமை தரும் மீனாட்சி அம்மன்: இங்கு சிவபெருமான், அன்னை மீனாட்சியுடன் சமேதராகக் காட்சியளிப்பதால், குடும்ப ஒற்றுமைக்கு இத்தலம் சிறப்பானது. திருமணத் தடைகள் உள்ளவர்கள் மற்றும் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து சுவாமிக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால், தடைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது என்னுடையது அனுபவ ரீதியான நம்பிக்கை.
நான் என்ன துன்பம் வந்தாலும் இந்த மீனாட்சி அம்மனை இதயத்தில் நினைத்துக்கொண்டு முன்னாளில் எல்லாம் அடிக்கடி போய் வருவேன். இப்போது மாதத்தில் ஒரு முறைதான் போக முடிகிறது. என்னை வழிநடத்தும் அன்பு தாய் மீனாட்சியம்மன்தான்.