Life lessons
Life lessons

வெளிநாட்டில் கற்ற வாழ்க்கைப் பாடம்!

- தா.சரவணா

இன்றளவும் வெளிநாட்டு வேலை என்றாலே தனி மதிப்புதான். அங்கு சென்றவர்களுள் சிலர் படும்பாடு வெளியே சொல்லமுடியாத அளவு கொடூரமாக இருந்தாலும், அங்கு சென்று, தன் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவைகளைக் கற்றுக்கொண்டவர்கள் எத்தனை எத்தனையோ பேர்!

இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்பவர்கள் இந்தப் பதிவை அவசியம் படிக்கவும்:

ஒரு கப் நெய் சோறு அரிசிக்கு, இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று படித்ததும் இங்கேதான், நாம் சாப்பிட்ட, குடிச்ச பாத்திரத்தை நாம்தான் கழுவி வைக்கவேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.

எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பில்லை, காரமில்லை, சுவை இல்லை என்று குறை சொல்லக்கூடாது என்று படித்ததும் இங்கேதான், இன்று பிரிட்ஜில் வைத்து நாளை சூடாக்கி சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது என்று படித்ததும் இங்கேதான்.

வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவும், உறங்கவும் படித்தது இங்கேதான். சப்தம் இல்லாமல் கதவைத் திறக்கவும் மூடவும் படித்ததும் இங்கேதான்.

தனது கனவு தேவதையாக தலையணையைக் கட்டிப்பிடித்து உறங்கி பழக படித்ததும் இங்கேதான்.

பொறுமை என்ற 3 எழுத்திற்கு அர்த்தம் என்ன? என்பதை படித்ததும் இங்கேதான். கும்மிருட்டிலும் ரூமில் உறங்குபவர்களுக்குத் தொந்தரவு செய்யாமல், ஆடை அணியவும், சாப்பிடவும் படித்தது இங்கேதான்.

நூறு கிடைத்தாலும் பத்து ரூபாய் கடன் வாங்கி 110 ஆக நாட்டுக்கு அனுப்ப படித்ததும் இங்கேதான். மின்சாரத்தையும், தண்ணீரையும், சோப்பையும், பற்பசையையும் சிக்கனமாக உபயோகிக்க படித்ததும் இங்கேதான்.

பள்ளிக்கூடத்தில் 10 அல்லது 15 வருடங்களில் படிக்காத பல மொழிகளைப் படித்ததும் இங்கேதான். வாழ்க்கையில் இன்ப, துன்பங்களைத் தாங்கி வாழப் பழகி படித்ததும் இங்கேதான்.

இதையும் படியுங்கள்:
சிறு வயதில் உண்டியலை உடைத்தது இன்று உலக சாதனை ஆனது!
Life lessons

சொந்தமாக ஒரு டீ கூட போடத் தெரியாதவன், வெளிநாட்டுக்கு வந்து ரெண்டு மூணு மாதங்களுக்குள் பிரியாணியும் கப்சாவும் போட படித்ததும் இங்கேதான். உலகத்தில் எங்கேயும் படிக்க கிடைக்காத பொருளாதார சாஸ்திரத்தைப் படித்ததும் இங்கேதான்.

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைப்பூண்டு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி ஆகியவற்றை சூடாக்கிய எண்ணெயில் போட்டு வதக்கி மீன் போட்டால் மீன் குழம்பும், சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும், மட்டன் போட்டால் மட்டன் குழம்பும், மோர் ஊற்றினால் மோர் குழம்பும் ஒன்றும் போடவில்லை என்றால் தக்காளி குழம்பும் கிடைக்கும் என்கிற வெளிநாட்டு வித்தையை வேற ஏதாவது யுனிவர்சிட்டியிலோ அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோ படித்திருக்க முடியுமா? அதைப் படித்ததும் இங்கேதான் என்று சொல்லவும் வேண்டுமா?

இனி, இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று யாராவது உங்களிடம் சொன்னால் இக்கட்டுரையை அவர்களுக்கு forward செய்துவிடுங்கள்!

logo
Kalki Online
kalkionline.com