சிறு வயதில் உண்டியலை உடைத்தது இன்று உலக சாதனை ஆனது!

Breaking the piggy bank
Breaking the piggy bank
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

1986 ஆம் ஆண்டில் ஜூலை 10 ஆம் நாளில் பிறந்த உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த மணீஷ் தமேஜா (Manish Dhameja) என்பவர், 2016 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாள் வரை, ஏற்கனவே இருக்கும் நாடுகள், தற்போது இல்லாத நாடுகள், ஒன்றிணைக்கப்பட்ட நாடுகள் என்று மொத்தம் 473 நாடுகளிலிருந்து மொத்தம் 12,155 நாணயங்களைச் சேகரித்து, ’இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ்’ எனும் இந்தியச் சாதனைப் புத்தகத்தில் 2016 ஆம் ஆண்டில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 28 ஆம் நாளில், இரண்டு உலோகங்களில் (Bi-Metallic) உருவாக்கப் பெற்ற 2602 நாணயங்களைச் சேகரித்து வைத்திருப்பவர் என்று கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார்.

Manish Dhameja
Manish DhamejaImg Credit: Yourstory

இவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாணயச் சேகரிப்பாளர்களாக இருந்ததால், இவரும் தனது 5வது வயதிலேயே நாணயச் சேகரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். தொடக்கத்தில், தனது தந்தையார் சேகரித்து வைத்திருந்த நாணய உண்டியலை உடைத்து, அதிலிருந்த நாணயங்களை பண்டக அறையில் மறைத்து வைத்திருந்து, பின்னர் அந்த நாணயங்களைத் தனது கைவினைப் புத்தகத்தில் ஒட்டி வைத்தார். அதனைக் கண்ட ஆசிரியர்கள், உடன் பயிலும் மாணவர்கள் அவரைப் பாராட்டி மகிழ்ந்தனர். அந்த ஊக்கத்தில், அவர் நாணயச் சேகரிப்பில் கூடுதலாக ஆர்வம் கொள்ளத் தொடங்கினார். உலகின் பல்வேறு நாட்டு நாணயங்களைத் தேடித்தேடிச் சேகரித்தார்.

இவருடைய நாணயச் சேகரிப்பில், பலாவ் குடியரசின் 5.4 செ.மீ விட்டம் கொண்ட மிகப் பெரிய நாணயம், அக்பர் பேரரசின் 100 கிராம் அளவிலான எடை அதிகமான நாணயம், 16 முதல் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான முகலாய நாணயங்கள் போன்றவைகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
'யானைப் பாகனுக்கு யானையால்தான் சாவு' – ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?
Breaking the piggy bank

நாணயச் சேகரிப்புப் பொழுது போக்கில் மட்டுமின்றி, கல்வியிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், 8 முதுகலைப் பட்டங்கள், 2 இளங்கலைப் பட்டங்கள் மற்றும் 6 சான்றிதழ்களை இந்தியா மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பெற்றிருக்கிறார். தற்போது இவர், நாணயம் மற்றும் அருங்காட்சியக மேலாண்மையில் முனைவர் பட்ட (Ph.D.,) ஆய்வினையும் மேற்கொண்டு வருகிறார்.

இவர் சாதனைகளுக்கும், சமூகப் பணிகளுக்கும் என்று 25 தேசிய மற்றும் பன்னாட்டு விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவற்றுள், ராஜீவ் காந்தி சிறப்பு விருதுகள் (அனைத்திந்திய மனித நலன்), ராஜீவ் காந்தி சிறப்பு விருதுகள் (பெச்சன்), தொலைத்தொடர்பு அமைச்சகம் (மடகாஸ்கர்), கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (அமெரிக்கா), உலக சாதனை இந்தியா (ஜீனியஸ் அறக்கட்டளை), ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதுகள் குறிப்பிடத்தக்கவை.

”நாணயச் சேகரிப்பைப் பொழுது போக்காகச் செய்து வந்தேன். அதுவே, எனக்குக் கின்னஸ் உலக சாதனையாளர் எனும் மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்து விட்டது” என்கிறார் மணீஷ் தமேஜா.

logo
Kalki Online
kalkionline.com