கடந்த 1965-ம் ஆண்டு முதல் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 1975-ம் ஆண்டில் எழுத்தாளர் அகிலன், 2002-ம் ஆண்டில் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் ஞான பீட விருதைப் பெற்றிருந்தனர். மிக நீண்ட காலத்துக்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு, கவிஞர் வைரமுத்துவுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஞான பீட விருது பெறும் கவிஞர் வைரமுத்துவை பாராட்டி எழுதப்பட்ட ஒரு அழகான கவிதையை பார்க்கலாம்...
எழுபத்தியிரண்டில் எழுந்த வைகறை மேகங்கள்
ஐம்பத்துநான்கு ஆண்டுகளை அழகாய்க் கடந்த பின்னால்
உச்சத்தைத் தொட்டு உலாவரும் நேரமிது!
மிச்சம் ஏதுமின்றி முழுவதையும் எழுதியதால்
தக்க விருதினையே தந்திடலே முறையென்று
மிக்க புகழுடைய ஞானபீடப் பரிசரங்கம்
கவிப்பேரரசுவைக் கச்சிதமாய் அடையாளங்கண்டு
அறிவிப்பை வெளியிட்டு அகமகிழ்ந்து நிற்கிறது!
கலைஞர் கருணாநிதி ‘கவிப்பேரரசு’ என்றழைத்தார்
கலாம்சாரோ ‘காப்பியக் கவிஞர்’ என்றுபெருமைப்பட
வாஜ்பாய் அவர்களோ ‘கவிசாம்ராட்’ என்றுபுகழ
‘வைரவரிகளின் சிற்பி’ ‘இலக்கிய உலகின் ஆளுமை’
என்றெல்லாம் ஏனையோர் பாராட்டி மகிழ
உங்கள்புகழ் என்றைக்கும் உச்சத்தில் நின்றிலங்கும்!
ஏழாயிரத்தைனூறு இனிய பாடல்களின் நாயகரே!
ஏழுசுரங்களைப்போல் நீங்கள் ஏழுமுறை தேசீய விருதினையே
பெற்றுவந்த பேற்றினையும் பெருமையுடன் விளம்பிடவோ!
இத்தகுதி இந்தியாவில் வேறெவருக்கும் இல்லை ஐயா!
அன்பான அகிலனையும் ஆரவார ஜெயகாந்தனையும்
பின்பற்றி நீங்கள் பேருவகை தந்திட்டீர்!
தமிழைத் தாரணியில் தக்க முறையினிலே
உயர்த்திப் பிடித்திட்ட உங்களுக்கு எம்வணக்கம்!
கள்ளிக் காடென்றால் கனவினிலும் அதில்பசுமை
விளையாது என்றே வீறாப்பு பேசிடுவார்!
கள்ளிக் காட்டினையே இதிகாச விருந்தாக்கி
சாகித்ய அகாடமி விருதைச் சாகசமாய்த் தனதாக்கி
கொண்டு வந்ததனால் குவலயத்தில் பேறுபெற்றீர்!
‘சாதனாசம்மான்’ ‘பத்மஶ்ரீ’ ‘பத்மபூஷண்’ என்றே நீளும்
விருதுப் பட்டியலே விளம்பிடுமே உம்திறத்தை!
ஞானபீட விருதுபெறும் நாயகனே உனைநாங்கள்
பாராட்டி மகிழ்கின்றோம்! பாரினிலே மேலுமுங்கள்
திறமை பளிச்சிடவே சிறப்புடனே வாழ்த்துகின்றோம்!
கிராமத்துச் சூழ்நிலையைக் களிப்புடனே உமைப்போல
கூறியோர் வேறில்லை! குன்றாது அதுஎன்றும்!
உள்ளத்தில் நிழலாடும் ஒன்றைப் பார்ப்போமே!
“கண்ணிமை கவிழும்போதும்
கனவுகள் முகிழ்க்கும்போதும்
என்னையே தொலைத்துவிட்டு
எங்கெங்கோ தேடும்போதும்
பொன்மணியோடு கொஞ்சம்
பூர்வீகம் பேசும்போதும்
என்னையே பிழியுதம்மா
எங்கள் ஊர்ஞாபகங்கள்!