

மூதறிஞர் இராஜாஜி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலைத் தொகுத்து புத்தகமாக பதிப்பித்தபோது முன்னுரை எழுதினார். அதில் இப்படியாகக் குறிப்பிடுவார்.
'புத்தகத்தில் வரையப்பட்ட மணியம் அவர்களின் ஓவியங்கள் (Drawings) யோக்கியர்களையும் திருடத் தூண்டும். அதையும் சோதனையாகக் கொண்டு வாசிக்க வேண்டும்.'
'வந்தியத் தேவன் என்றால் இப்படித்தான்' என ஒரு தோற்றத்தை வரைந்து மக்கள் மனதில் பதிய வைத்தார் ஓவியர் மணியம் பின்னாளில் மணியம் செல்வன்.
ஒரு காட்சியை கல்கி அவர்கள் விவரிக்கும்போது மணியம் வரைந்த ஓவியம் கால்வாசி வேலையை முடித்து விடும். சில உணர்வுகளைச் சொல்லாமல் சொல்லும். பொன்னியின் செல்வன் ஒரு எழுத்தோவியம். சினிமாவில் காட்சிகளுக்கு உயிரோட்டம் தருவது பின்ணணி இசை, பாடல்கள். அது போல் மனதில் ஒரு தொடர் கதையைப் பதிய வைப்பது ஓவியரின் கை வண்ணம்.
ஒரு காட்சியை மையப்படுத்தி ஓவியம் இருக்கும். எழுத்தாளரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். ஓவியங்களின் முக பாவனைகள், உடல் மொழி இவை வரையப்பட்டு எழுத்தாளரின் படைப்புக்கு ஒரு மெருகாக அமையும். நந்தினி வட்ட முகம், சாய்ந்த கொண்டை. குந்தவை நீள் வாட்டு முகம், உயரமான நேர் கொண்டை. காலாந்தக காண்டர் எனப்படும் சின்ன பழுவேட்டரையர் ஒல்லியான தேகம், கரப்பான் பூச்சி மீசை. பெரிய பழுவேட்டரையரின் பெரிய வீரப்பன் மீசை. ஆழ்வார்க்கடியான் தொப்பை, சிரித்த முகம். சேந்தன் அமுதன் பக்திமான், ஓடக்காரப்பெண் பூங்குழலி சிம்ப்பிளான உடை. ஆனால் அழகு. இந்த முகங்கள் கனவிலும் நம்முடன் சம்பாஷிப்பவை.
சென்னையில் மேடம் டுஸாட்ஸ் மெழுகு மியூசியம் போல் ஒன்று அமைக்க யாரும் யோசனை செய்து நிறைவேற்றினால், பொன்னியின் செல்வன் பாத்திரங்கள் நிச்சயம் இடம் பெறுவர், மணியம் வரைந்ததை வைத்து. மறக்க முடியுமா? இந்தப் பாத்திரங்களை.
தமிழ்ப் பத்திரிக்கைகளில் ஓவியர்களின் பங்கு மகத்தானது. ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி, ஒரு முத்திரை. கீழே இனிஷியலைப் போடாவிட்டால் கூட படத்தைப் பார்த்தாலே, வரைந்தவர் ஜெயராஜ், கோபுலு, லதா, மாருதி, ராமு எனச் சொல்லி விடுவார்கள் வாசகர்கள்.
ஓவியர்களை அவர்களின் ஓவியங்கள் மூலம் படித்தவர்கள் அவர்கள். வண்ணமயமான பின் மாருதி அவர்களின் மங்கையர்களின் முகம் வசீகரமாய் இருக்கும். வாசகர்களோடு ஒன்றிப் போனவை இவர்களின் ஓவியங்கள். சுஜாதா கதைகளுக்கு பெரும்பாலும் ஜெயராஜ் தான் காட்சிப் படுத்துவார். கணேஷ், வஸந்த். சாண்டில்யன் கதைகளுக்கு லதா, மணியன். இதய வீணை போன்ற கதைக்கு மாயா, ஜாவர் சீதாராமன் கதைகளுக்கு வர்ணம்.
தில்லானா மோகனாம்பாள் (கொத்தமங்கலம் சுப்பு) கலைமணிக்கு கோபுலு. பின்னாளில் சவடால் வைத்தி ரோலுக்கு நாகேஷ் வருவார் என அறிந்த தீர்க்க தரிசி அல்லவா கோபுலு.
அம்புலிமாமா சங்கர், வேதாளம் சொன்ன கதையில் வாளேந்தி பேயைத் தூக்கிச் செல்லும் விக்கிரமன் அற்புதம். காடு என்றால் வேர்கள் வரை துல்லியம். கார்ட்டூன் மதன் இன்றும் வரைகிறார். லைன் டிராயிங்தான் எப்போதும். இந்த ஓவியர்கள் லிஸ்ட் மிகப் பெரிது. ஒரு ஐம்பது அறுபதாண்டு காலத்தில் வரைந்தவர்கள் பலராயினும் முக்கியமானவர்கள் மாலி, ராஜு, சிற்பி, வாணி, ஸாரதி, செல்லம், சுதர்ஸன், நடனம், சுமன், அரஸ், ராகி பலர் விடுபட்டு இருக்கலாம்.
இன்று சிலர் அமரத்துவம் அடைந்தும் இருக்கலாம். சிரஞ்சீவியாய் ஜீவனுள்ள ஓவியங்களை நமக்குத் தந்து. இன்று முதுமை அடைந்து பலர் வரைவதை நிறுத்தி நினைவுகளின் உந்துதலால் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் வாசகர்களின் மனதில்.
ஆர்.கே. லக்ஷ்மணன் அவர்களின் பொது ஜன சாமானியனை மறக்க முடியுமா? சிலை வைத்துள்ளார்கள், அந்த சாமானிய முதியவருக்கு. ஒரு ஓவியரின் தியாகம் பத்திரிக்கைத் துறையில் அளப்பரியது. இந்த பத்திரிக்கை சாகரத்தில் ஒரு துளியைத் தானே நாம் பார்த்தது. ஒரு ஆசை, ஏ ஐ பயன்பாட்டுக் காலம் இது. ஒரு குரூப் ஃபோட்டோ...
கல்கி அவர்கள் அமர்ந்திருக்க அருகில் இருபுறமும் சுந்தர சோழர், அனிருத்த பிரம்மராயர், வானமாதேவி, செம்பியன் மாதேவி, மந்தாகினி, பெரிய பழுவேட்டரையர், மலையமான், பெரிய வேளார், சம்புவரையர், கோவில் பட்டர் அமர்ந்திருக்கணும். முதல் வரிசை நிற்பவர்கள் வந்தியத்தேவன், கந்தமாறன், ஆழ்வார்க்கடியான், பார்த்திபேந்திரன், சேந்தன் அமுதன், ஆதித்தகரிகாலன், அருள்மொழி வர்மன், வானதி, குந்தவை, பூங்குழலி, நந்தினி, மணிமேகலை.
இரண்டாம் வரிசை நிற்பவர்கள் மதுராந்தகன், காலாந்தக காண்டன் எனும் சின்ன பழுவேட்டரையர், வீரபாண்டியன், குடந்தை சோதிடர், வைத்தியர் மகன் பினாகபாணி, ராக்கம்மாள், அவள் புருஷன் படகோட்டி, ரவிதாசன், இடும்பன்காரி, தேவராளன், தேவராட்டி இந்த குரூப் ஃபோட்டோ ஒவியம் கிடைக்குமா? ஏ ஐ நண்பர்களே..!
இந்தப் பாத்திரங்கள் தான் நம் வாழ்க்கை நாடகத்தில் சிறந்த பொழுது போக்கு நண்பர்கள். என்னது? வில்லன் பாத்திரங்களும் நண்பர்களா? ஆமாம். நம்பியார், பி எஸ் வீரப்பா, அசோகன் இல்லாவிட்டால் யாருடன் ஹீரோ சண்டை போடுவார்? ஹீரோயின் உடனா?
அது கல்யாணம் ஆகி பத்து வருஷம் கழித்து தானே நடக்கும். பொன்னியின் செல்வன் பாத்திரங்களே.. தினமும் வாருங்கள் கனவில், பேசுவோம். ஓவியம் என்றாலே நினைவுக்கு வருவது முதலில் மோனலிசா தான். வாலி அவர்களின் ஒரு டூயட் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவார்.
செம்மாங்கனி புன்னகை நல்லோவியம்.
செவ்விதழ் தேன் மாதுளை,
பொன்மொழி சொல்லோவியம்.
வாலியின் தேன் வரிகள். டி.எம்.எஸ், சுசீலா, எம்.எஸ்.வி காம்பினேஷன். இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே மோனலிசாவைப் பாருங்கள். வரிகள் பொருந்துதா?எழுத்தோவியம் பொன்னியின் செல்வன் என்றால், புன்னகை நல்லோவியம் மோனலிசா.
பாட்டி கம்ப்யூட்டரில் வெகு நேரம் நான் மோனலிசாவைப் பார்த்ததைக் கவனித்து விட்டு அம்மாவிடம் கிசுகிசுத்தாள்.
"பாஸ்கர் ஒரு பொண்ணு போட்டோ வச்சுப் பார்க்கிறான். அழகாத் தான் இருக்காள். பூ பொட்டு இல்லே. வெள்ளைக் காரி மாதிரி தோணுது. கொஞ்சம் வயசு கூட இருக்கும் இவனை விட, கிறிஸ்டியன் போல இருக்கு....பேசி முடிங்கோ."
கல்யாண ஏற்பாட்டில் வெகு நாள் வர்ற பெண்களின் போட்டோ பார்த்து பாஸ்கர் நிராகரித்ததன் பக்க விளைவு இது.