

சமீபத்திய தசாப்தங்களில் மக்களின் பங்கேற்போடு செய்யப்படும் நிதி ஒதுக்கீடு (Participatory Budgeting) என்பது ஆளுமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அணுகுமுறையாக உருவெடுத்துள்ளது. 1980களின் பிற்பகுதியில் பிரேசிலின் போர்டோ அலெக்ரேயில் (Porto Alegre) நிதி ஒதுக்கீட்டில் பொது நிதிகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பதைத் தீர்மானிப்பதில் குடிமக்களை நேரடியாக ஈடுபட அனுமதித்தது.
பிரேசில், போர்ச்சுகல், ஸ்பெயின், தென் கொரியா, கனடா, அமெரிக்காவின் சில பகுதிகள் போன்ற நாடுகள் அவர்களின் நகராட்சி அல்லது மாகாண மட்டங்களில் இத்தகைய அமைப்புகளைச் செயல்படுத்தியுள்ளன.
இந்த வழிமுறைகள் செலவினங்களை மக்களே கண்காணிக்கவும், வளர்ச்சி நிதிகள் வெளிப்படையாக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவும் உதவும் வகையில் செலவினங்களின் பற்றிய விவரங்களை வெளிப்படையாக வெளியிடுகின்றன.
உலக வங்கியும், பங்கேற்பு ஜனநாயகத்திற்கான சர்வதேசக் கண்காணிப்பகமும் (International Observatory) உலகெங்கிலும் நிகழும் இத்தகையச் செயல்முறைகளை ஆயிரக்கணக்கில் ஆவணப்படுத்தியுள்ளன. அவை நம்பிக்கையையும், பொறுப்புடைமையையும் மக்களிடம் வலுப்படுத்துவதில் வகிக்கும் பங்கை எடுத்துக்காட்டுகின்றன.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இதைப் பின்பற்றினால்!
சில பிராந்தியங்களில் இது வெற்றி பெற்றிருந்தாலும் எல்லா நாடுகளும் இந்த மாதிரியைப் பின்பற்றுவதில்லை. நிர்வாகச் சிக்கல்கள், அரசியல் எதிர்ப்பு அல்லது மையப்படுத்தப்பட்டக் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என்ற அரசியல்வாதிகளின் அச்சம் காரணங்களால்; பல அரசாங்கங்கள் இதை செய்யத் தயங்குகின்றன. அதுவும் உலகின் சில சர்வாதிகார ஆட்சிகளில் இந்த வெளிப்படைத்தன்மை அதிகாரத்திற்கு ஓர் அச்சுறுத்தலாகக் கருதப்படலாம்.
அதோடு, வளரும் நாடுகளில் இருக்கும் பல பலவீனமான நிறுவனங்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பற்றாக்குறை மற்றும் வரையறுக்கப்பட்ட குடிமைக் கல்வி (Limited civic education) ஆகியவை; பெரும்பாலும் இதன் அமலாக்கத்தை தடுக்கின்றன. இறுதியில் பல ஆளுமை மரபுகளில் உள்ள கலாச்சார வேறுபாடுகள் காரணமாக, அரசின் நிதி பகிர்வு விஷயங்களில் குடிமக்களின் பங்கேற்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.
ஒரு வேளை இது அமலானால் என்ன நடக்கலாம்?
மக்களின் பங்கேற்போடு செய்யும் நிதி ஒதுக்கீடு, அதன் வெளிப்படையான செலவினம் ஆகியவை நடைமுறைப் படுத்தப்பட்டால்; குடிமக்களும், அரசாங்கங்களும் சேர்ந்துதான் பெரிதும் பயனடைகின்றனர். நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்பதை நேரடியாக மக்களே வடிவமைப்பதன் மூலம் அவர்கள் அதிகாரம் பெறுகிறார்கள். தேவையற்ற வெட்டி விளம்பரங்களுக்கு இல்லாமல், அந்தந்தத் திட்டங்கள் சமூகத்தின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் மக்கள் உறுதி செய்கிறார்கள். இப்படி இதன் வெளிப்படைத்தன்மை நம்பிக்கையை வளர்க்கிறது; ஊழலைக் குறைக்கிறது; தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான பொறுப்புடைமையை வலுப்படுத்துகிறது.
இதன் விளைவாக அரசாங்கங்கள் நிதிகளை மிகவும் திறமையாக ஒதுக்கீடு செய்கின்றன, வீண்விரயத்தைத் தவிர்க்கின்றன, அனைத்துத் திட்டங்களும் உள்ளூர் யதார்த்தங்களுடன் எந்த ஒரு எதிர்ப்பின்றி செயல்படுத்தப்படும். இறுதியில் இந்த வெளிப்படைத்தன்மை சமூக ஒற்றுமையை வளர்க்கிறது. காரணம் அனைத்து மக்களும் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ‘தாங்களும் மதிக்கப்படுவதாக’ உணர்கின்றன.
ஆக, பங்கேற்பு நிதிநிலை அறிக்கை மற்றும் வெளிப்படையான நிதி நிர்வாகம் ஆகியவை நம்பிக்கையையும், பொறுப்புக் கூறலையும் வளர்ப்பதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டிருந்தாலும். அவற்றின் உலகளாவிய அமலாக்கம் சற்று சீரற்றதாகவேதான் உள்ளது. இந்த மாதிரியை ஏற்கும் நாடுகள் நிதி முடிவுகளில் குடிமக்களின் நேரடி ஈடுபாடு எவ்வாறு ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதைக் உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
ஆனால், என்னதான் இதில் பல நன்மைகள் இருந்தாலும். இதன் அமலாக்கத்திற்கு அரசியல், பல கலாச்சாரத் தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது.