

இந்தியாவில் வாரிசு அரசியல் பின்னணி கொண்ட பல முதலமைச்சர்கள் உள்ளனர். அதில் 2021ம் ஆண்டு மட்டும் 7 மாநில முதல்வர்களாக வாரிசுகள் ஆட்சி பொறுப்பில் இருந்தனர்.
2021ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வரானார் மு.க.ஸ்டாலின். இவர் 5 முறை தமிழக முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர், தி.மு.கவின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மகன்.
2021ம் ஆண்டு பசவராஜ் பொம்மை கர்நாடகா மாநிலத்தில் முதல்வரானார். இவர் 1989ல் கர்நாடக முதல்வராக இருந்த எஸ்.ஆர்.பொம்மையின் மகன்.
ஆந்திரப் பிரதேசத்தில் 2019ம் ஆண்டு முதல்வரானார் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் 2009ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019ம் ஆண்டு ஹேமந்த் சோரன் (ஜேஎம்எம்) முதல்வராக இருந்தார். இவரின் தந்தை ஷிபு சோரன் அம்மாநிலத்தில் 3 முறை முதல்வராக இருந்தவர்.
ஒடிசாவின் முதல்வராக 2019ல் பதவியேற்றார் நவீன் பட்நாயக் (பிஜு ஜனதா தளம்). இவரின் தந்தை பிஜு பட்நாயக் 1995ம் ஆண்டு ஒடிசா முதல்வராக இருந்தவர்.
மேகாலயாவின் முதல்வராக 2018ம் ஆண்டு கான்ராட் சங்மா (என்பிபி) பதவியேற்றார். இவரின் தந்தை பி.ஏ.சங்மா 1988ம் ஆண்டு மேகாலயா முதல்வராக இருந்தவர்.
அருணாசல பிரதேசத்தில் 2019ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றார் பெமா காண்டு. இவர் 2011ம் ஆண்டு அருணாசல பிரதேசத்தில் முதல்வராக இருந்த டோர்ஜி காண்டுவின் மகன்.
சட்டமன்ற தேர்தலில் வென்ற மாமனாரும்:
சட்டமன்ற தேர்தலில் நின்று தந்தையும் மகனும் வெல்வர், கணவனும் மனைவியும் வெல்வர். முதல் முறையாக 2021ம் ஆண்டு ஏப்ரல் 6-ம்தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தர்மடம் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கேரள மாநிலத்தின் முதலமைச்சரானார் பினராயி விஜயன்.
அவரது மருமகன் பி.ஏ.முஹம்மது ரியாஸ், 2021 சட்டசபைத் தேர்தலில் பேப்பூர் தொகுதியில் சிபிஎம் கட்சி சார்பாக நின்று, வென்று பொதுப்பணித்துறை அமைச்சரானார், இவர் கேரள ஜனநாயக வாலிபர் சங்க தேசிய தலைவர். இது மாமனார்-மருமகன் அரசியல் கூட்டணிக்கு ஒரு முக்கிய உதாரணமாக கருதப்பட்டது.
இந்தியாவின் மூத்த எம்.எல்.ஏ:
இந்தியாவின் மிகவும் வயதான மற்றும் மூத்த எம்.எல்.ஏ-வாக கர்நாடகாவின் தாவங்கரே தெற்கு தொகுதி காங்கிரஸ் உறுப்பினர், 94 வயதான சாமனூர் சிவசங்கரப்பா அறியப்படுகிறார். 'அப்பாஜி' என்று அழைக்கப்படும் இவர், 2023ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் நின்று 27,888 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். சிவசங்கரப்பா தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் 6 முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில் அந்த சட்டமன்ற தேர்தலில் வடக்கு தவண்கரே தொகுதியில் நின்று எம்.எல்.ஏ ஆனார் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன். இவர் சிவசங்கரப்பாவின் மகன். தந்தையும், மகனும் சட்டப்பேரவையில் இருந்தனர்.
கான்ஸ்டபிள் முதல்வர், டிஜிபி துணை முதல்வர்:
2017 மார்ச் 15 அன்று, நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் தேசிய மக்கள் கட்சி (பிஜேபி), நாகா மக்கள் முன்னணி மற்றும் லோக் ஜனசக்தி கட்சியுடன் கூட்டணி அமைத்து என்.பிரேன் சிங் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
மணிப்பூரில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது அதுவே முதல் முறையாகும். சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாகத் தொடர்ந்தது.
மணிப்பூரின் துணை முதல்வராக பொறுப்பேற்றார் தேசிய மக்கள் கட்சியின் (NPP) முக்கியத் தலைவர் யும்னம் ஜாய்குமார் சிங், இவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அம்மாநிலத்தில் டிஜிபியாக பணியாற்றியவர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர்.
கான்ஸ்டபிலாக இருந்து டிஜிபி ஜாய் குமார் சிங்க்கு சல்யூட் அடித்து வந்த பிரேன் சிங் பின்னாளில் முதல்வர். கான்ஸ்டபிள் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் வேலை வாங்கிய டிஜிபி ஜாய் குமார் சிங் பின்னாளில் துணை முதல்வர். உலகத்தில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.