

Radiology என்னும் கதிரியக்கவியல் மற்றும் Imaging ஆகியவற்றின், முன்னோடியாக, அத்துறையில் பல புதிய சாதனைகளையும் முன்னேற்றங்களையும் செய்த மருத்துவராகவும், பேராசிரியராகவும் திகழ்ந்த சென்னையின் பிரபல மருத்துவர் (மறைந்த) டாக்டர் கஜராஜ் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு,
“21ம் ஆண்டு Professor Arcot Gajaraj Memorial Oration “ என்னும் நிகழ்ச்சி, அண்மையில் அண்ணாசாலையில் உள்ள, புல்மேன் ஹோட்டலில் பெரிய அரங்கில் அவரது மகள் டாக்டர் ஜெயஸ்ரீ கஜராஜ் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
நம் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் டாக்டர் ஜெயஸ்ரீ கஜராஜ்.
மகப்பேறு மருத்துவத்துறையில் சீனியர் கன்சல்டன்ட் (Senior Consultant in Obstetrics and Gynaecology) Target Foundation மற்றும் கௌசல்யா கஜராஜ் சாரிடபிள் டிரஸ்டின் (Kausalya Gajaraj Charitable Trust) தலைவராக இருப்பவர்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில், அருமையான பரத நாட்டியம். தொடர்ந்து சற்றே புதுமையான இசை நிகழ்ச்சி.
நவரசங்களையும், மனித உணர்வுகளையும் பிரதிபலிக்கும் தமிழ்த் திரைப்படப் பாடல் காட்சிகள் பெரிய திரையில் ஓரிரு நிமிடங்கள் ஓட, அதற்கு சரியாக குரல் கொடுத்து சிறப்பாகப் பாடினார் மருத்துவர் ஷோபனா.
டாக்டர் ஜெயஸ்ரீ தமது அறிமுக உரையில், தனது தந்தை கஜராஜ் அவர்கள், இன்றைய நவீன தொழில் நுட்பம் இல்லாத பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, ரேடியாலஜியின் பல பிரிவுகளிலும் திறமையுடன் செயல்பட்டு, முன்னோடியாக விளங்கியதை விவரித்தார்.
பெற்றோர் டாக்டர் கஜராஜ் , கௌசல்யா கஜராஜ் இருவரும், மனிதாபிமானத்தோடு, எளிதான அணுகுமுறையுடன், மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்பதற்கு சான்றாகவே இருந்தார்கள் என்று குறிப்பிட்டார்.
Indian College of Radiology and Imaging (ICRI) நிறுவியவர்களில் ஒருவராகவும், Indian Radiology and Imaging Association (IRIA) முன்னாள் தலைவராகவும் கஜராஜ் அவர்கள் ஆற்றிய பணிகள் பற்றியும் கூறினார்.
தொடர்ந்து பேராசிரியர், டாக்டர் வி .ஜெயந்தி (Senior Gastroenterologist) பேசுகையில், தனது பேராசிரியராக இருந்த டாக்டர் கஜராஜ் அவர்களின் திறமைகளை நினைவு கூர்ந்தார்.
ரேடியாலஜியில் Imaging Science மூலம் ஜீரண உறுப்புக்களான குடல், இரைப்பை, கல்லீரல் இவற்றில் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி நுணுக்கமாக விவரித்து, அதற்குத் தகுந்த சிகிச்சை முறைகளையும் கற்றுக் கொடுத்தவர் பேராசிரியர் கஜராஜ் என்று தகுந்த விளக்கப் படங்களுடன் சிறப்பாக உரையாற்றினார்.
Artificial intelligence (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு எல்லாத்துறைகளையும் வேகமாக நவீனப்படுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில், அரசாங்கம், நிதித்துறை இவற்றில் AI எவ்வாறு செயல்படுகிறது என்று ஒரு விவாதம் அடுத்து நடைபெற்றது.
தமிழக அரசின் செயலராக நீண்ட நாள் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. வில்ஃப்ரெட் டேவிடர் Wilfred Davidar, Sundaram Finance நிறுவனத்தின் ஓய்வு பெற்ற மேலாளர் திரு. T.T. ஸ்ரீனிவசராகவன்., மற்றும் துபாயிலிருந்து வந்திருந்த பிரபாகரன் கேசவன், டாக்டர். முத்தழகி ஆகியோர் பங்கு பெற்றனர்.
அரசின் பணிகளில் செயற்கை நுண்ணறிவு வேகமாகவும் எளிதாகவும் எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்தும், நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு க்ரெடிட் கார்டு வழங்குவது உட்பட பல பணிகளில் ஏ.ஐ யின் சிறப்பு பற்றியும் அறிவு பூர்வமான விவாதமாக அமைந்தது.
தொடர்ந்து அன்றைய் நிகழ்வின் முக்கிய சிறப்பு அம்சம், மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும், Chat GPT, Google இவற்றின் தாக்கம் குறித்து கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவர் (Chairman, Dept of Orthopaedics) டாக்டர் எஸ். ராஜசேகரன் அவர்களின் சிறப்புரை.
அவர் தனது உரையில், உடல் நலம் குறித்த விழிப்புணர்வும், மருத்துவம் பற்றி சமூக வலைத்தளங்கள் மூலம் பொது அறிவும் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில், மருத்துவர்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும், மருத்துவத்தின் பல பிரிவுகளின் கூட்டமைப்பு, (Clinical Integrity) கடைப்பிடிக்க வேண்டிய சரியான நெறிமுறைகள், பணிவுடன் நோயாளியை அணுகவேண்டிய விதம் , செயற்கை நுண்ணறிவின் அபரிமிதமான பலன்கள், ஆனால் அதனால் நாம் இழப்பது என்னென்ன போன்றவற்றை மிகத்தெளிவாக, பவர் பாயிண்ட் விளக்கப்படங்களுடன் எடுத்துரைத்தார்.
செயற்கை நுண்ணறிவின் பல புதிய கோணங்களை அறிந்துகொள்ள உதவிய நல்லதோர் நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.