நமக்கெல்லாம் மழை தெரியும். ஆனால், நம் மக்கள் மழையை எப்படியெல்லாம் பகுத்து, பெயரிட்டு அழைத்தனர் தெரியுமா? வாருங்கள் சொல்வளம் மிக்க தமிழ் மழையில் நனைவோம்.
பொதுவாகச் சொல்வதென்றால்...
சடசடவென நனைத்துப் பொழிவது (பெய்வது) - மழை!
பருத்த மழைத்துளி ஆங்காங்கே அகலவிழுந்தால் - அது தூறல்! .
நுண்ணிய மழைத்துளி நெருங்கி சாய்வாக விழுந்தால் - அது சாரல்!
துளித்துளியாய் தெளிப்பது போலப் பெய்வது - தூறல்!
தூறல் [தூத்தல்] : பூந் தூறல், ஊசித்தூறல், எறி தூறல், போடி தூறல், ரவைத்தூறல்.
பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துச் சிதறுவது சாரல்! (சாரல் மழை - என்றால் சாய்வாய் பெய்யும் மழையைக் குறிக்கும்).
சாரல்: சாரல் மழை [ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் நுண்ணிய மழை], ஆலி,
பொசும்பல், தூவானம், எறசல், பரவல், துணை மழலை.
சடசடவென நனைத்துப் பெய்வது - மழை!
மழை: தக்காலம் [மழை காலம்], பருட்டு மழை, அரண்ட பருவ மழை, பேய் மழை, நச்சு மழை, வதி மழை, கல் மழை[ஆலங்கட்டி மழை], காத்து மழை, சேலை நனைகிறாப்புல மழை, கோடை மழை, கால மழை, பாட்டம் [பாட்டமாய் பெய்யும் மழை], நீருந்து மழை, வெக்கை மழை, அடை மழை, மாசி மழை, தை மழை, சுழி மழை, பட்டத்து மழை, எல்லைக் கட்டி பெய்யும் மழை, குளிக்கும் மழை, பனி மழை, வெள்ளை மழை, பரு மழை [கனமழை], பருவ மழை, பத மழை, அப்பு மழை.
அடடா... மழையின் தன்மையைப் பொருத்து, பெய்யும் காலத்தைப் பொருத்து அதற்கு எத்தனை எத்தனைப் பெயர்கள்!
'மழை' என்ற சொல் தமிழில் பிறந்தவிதம் குறித்தும் விளங்கிக்கொள்வோம்!
மழ - என்பது இளமைப் பொருள் குறித்த ஓர் உரிச்சொல்!
மள் > மழ = இளமை.
"மழவுங் குழவும் இளமைப் பொருள்" - எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
மழ > மழவு.
மழ > மழல் > மழலை = இளமை.
மழவு > மழவன் = இளைஞன்.
மழ + ஐ = மழை! இளமையின் அலட்டலும் ஆர்ப்பாட்டமும்போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் 'மழை' என்ற காரணப் பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர்கள்.
அடைமழை: விடாமல் பெய்வதால், ஊரையே ‘அடை’த்து விடும் மழையே அடை மழை! எவ்வித இடைவெளியின்றி பார்வையை மறைக்கும்படி - அடைத்துக்கொண்டு பெய்யும் மழை.
கனமழை: துளிகள் சற்றுப் பெரிதாக எடை அதிகம்கொண்டதாக இருக்கும்.
ஆலி: என்றால் ஆங்காங்கே பரவலாக விழும் ஒற்றை மழைத்துளி. இதனால் உடலோ உடையோ நனையாது!
ஆலங்கட்டி மழை: திடீரென மாற்றம் பெறும் வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து, மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை.
பனிமழை : பனிதுளிகளே மழைபோல பொழிவது. இது பொதுவாக இமயமலை போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்.
ஆழி மழை: ஆழி என்றால் கடல். இது கடலில் பொழியும் மழையைக் குறிக்கும். இதனால் மண்ணுக்கு எவ்விதப் பயனுமில்லை என்றாலும், இது இயற்கைச் சமன்பாட்டின் ஒரு பகுதியாகும்.
மாரி: காற்றின் பாதிப்பு ஏதும் இல்லாமல் - வெள்ளசேதங்களின்றி - மக்கள் இன்னலடையாமல் - பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது.
மாதம் மும்மாரி பொழிகிறதா? – என அன்றைய அரசர்கள் ஏன் கேட்டார்கள் எனப் புரிகிறதா?