

உலகளவில் பாதுகாப்பு விஷயங்களில் உயர்தர வரிசையில் உள்ள நாடுகள் சில பொதுவான பண்புகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கின்றன. அவை வலுவான ஆளுமை, வெளிப்படையான நீதித்துறை அமைப்புகள், சட்ட அமலாக்கத்தின்மீது மக்களின் வலுவான நம்பிக்கை போன்றவை. உதாரணமாக கொலை, துப்பாக்கி வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை உட்பட சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்துவதால், சிங்கப்பூர் தொடர்ந்து பாதுகாப்பான நாடுகளில் முதன்மையாகத் திகழ்கிறது.
இதனுடன் அவர்களின் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள், அனைத்து தரப்பு மக்களும் கீழ்படியும்படி அமைந்த சட்டங்கள் ஆகியவை பாதுகாப்பை இன்னும் வலுப்படுத்துகின்றன. அதேபோல் பின்லாந்து, நார்வே போன்ற நோர்டிக் (Nordic) நாடுகள் கடுமையான தண்டனைகள் மூலம் சட்டம் ஒழுங்கைக் காப்பதில்லை; மாறாக, அவர்களின் சமூக நம்பிக்கை, குறைந்தபட்ச ஊழல், திறமையான காவல் பணி ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. பின்லாந்து குடிமக்கள் காவல்துறை மீது 85%க்கும் அதிகமான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இது குற்ற விகிதங்களையும், குற்றத்தைப் பற்றிய அச்சத்தையும் அவர்களிடம் குறைக்கிறது.
இந்த நாடுகளில் உள்ள காவல் பணியானது முன்கணிப்பு பகுப்பாய்வு (predictive analytics), கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் நேர்மையான மக்கள் சமூக காவல்காரர்களை பெரிதும் சார்ந்துள்ளது. சிங்கப்பூரின் விரிவான சிசிடிவி வலையமைப்பு, மொத்த நாட்டின் ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்பங்கள் ஆகியவை பொது இடங்களை கண்காணிக்கவும், சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு முன்கூட்டியே செயல்படவும் அதிகாரிகளுக்கு உதவுகின்றன. இதற்கு மாறாக, நோர்டிக் நாடுகள் வேலையின்மை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற சமூகப் பிரச்னைகள் குற்றமாக மாறுவதற்கு முன்பே அவற்றைக் கையாளும் ஆரம்பகாலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தத் தடுப்பு அணுகுமுறை கொலை போன்ற வன்முறைக் குற்றங்கள் நடப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
குற்றங்களுக்கு உண்டான தண்டனைக்கும் பெரிய பங்குள்ளதா?
கடுமையான தண்டனைகள் சிங்கப்பூரில் குற்றங்களைத் தடுப்பதில் ஒரு பங்கு வகித்தாலும், அரசு மீதான நம்பிக்கையும், நீதி அமைப்புகளின் நேர்மையுமே நீண்டகால சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அதிக செயல்திறன் மிக்கவை என்று அங்குள்ள சான்றுகள் தெரிவிக்கின்றன. டென்மார்க், ஐஸ்லாந்து போன்ற நாடுகள் கடுமையான தண்டனைகளைக் குறைவாகவும், அதற்கான மறுவாழ்வை அதிகமாகவும் நம்பியுள்ளன. இதுவும் அவர்களை உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகத்தான் திகழ வைக்கிறது.
இந்தியவில் இதைப் பின்பற்றலாமா?
இந்தியாவின் பன்முகச் சமூக மற்றும் பொருளாதாரச் சூழல் இதை நேரடியாக பின்பற்றுவதைச் சவாலானதாக ஆக்குக்கிறது. இருப்பினும் தொழில்நுட்பத்தால் முற்றிலும் இயக்கப்படும் காவல் துறையாக மாற்றுவது, நீதித்துறை செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது ஆகியவை சட்டம் ஒழுங்கைக் கணிசமாக வலுப்படுத்தக்கூடும்.
திறமையான ஆளுமை, மக்களின் சமூக ஈடுபாட்டில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், எவ்வளவு கடுமையான தண்டனைகள் நம் நாட்டில் நடைமுறைப்படுத்தினாலும் அது பலனளிக்காது. இந்தியாவைப் பொறுத்தவரை சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கண்காணிப்புடன், நோர்டிக் நாடுகளில் மக்களிடம் விதைக்கப்பட்டுள்ள ‘சமூக நம்பிக்கை’ போன்ற ஒரு கலப்பின முறைதான் (hybrid model) ஒரு யதார்த்தமான மாற்றத்தை வரவைக்கலாம்.
ஆக, சட்டம் ஒழுங்கு மேலாண்மை என்பது வெறும் தண்டனையை மட்டும் சார்ந்தது அல்ல; மாறாக, அது முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள், துறைகள் சார்ந்த நம்பிக்கை மற்றும் புதிதான தொழில்நுட்கள் ஆகியவற்றைச் சார்ந்ததே ஆகும். இந்தியா இந்த மாதிரிகளைத் அவற்றின் தனித்துவமான சமூகக் கட்டமைப்பிற்கு ஏற்ப மாற்றி அமைப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கைக் காக்கலாம்.