

குமாரி சஹானா பிரபலமடைந்து வரும் ஒரு நாட்டிய தாரகை. தாளத்திற்கு ஏற்ப ஜதி ஓசை எழுப்பும் சுத்த நிருத்தத்தில் தேர்ந்த இளம் நடன மணி இவர். கலா சாதனாலயா மாணவியான இவரது குரு திருமதி ரேவதி ராமசந்திரன்.
தமிழ் நாடகம் மற்றும் கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் சஹானா. பரதநாட்டியத்தின் மீது இருந்த ஆர்வத்தால், தனது ஒன்பது வயதில் திருமதி. ரேவதி ராமச்சந்திரன் அவர்களிடம் முறையான பயற்சியைத் தொடங்கினார். தற்போது கலா சாதனாலயாவில், குரு ரேவதியின் மகளும், பிரபல நடனக் கலைஞருமான K. R. மனஸ்வினி அவர்களின் வழிகாட்டுதலில் தனது பயிற்சியைத் தொடர்ந்து வருகிறார்.
சாதனாலயாவின் தயாரிப்புகளான 'ஜகத் பாவனி கங்கா', 'ஆயர் குல திலகம்', 'அம்பலத்தில் ஆடும் ஜோதி' மற்றும் 'லய நிரூபணம்' உள்ளிட்ட பல குழு நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார். அண்மையில் தேனாம்பேட்டையில் "The Stage" என்ற அரங்கத்தில் சஹானாவின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்லாண்டு என்ற வாழ்த்துப் பாடலுடன் துவங்கிய நிகழ்ச்சியில், கஜேந்திர மோட்சத்தை மிகச் சிறப்பாக நாட்டியத்தில் வெளிப்படுத்தினார். அடுத்து, பாபனாசம் சிவன் இயற்றிய வர்ணம் ஆயர்பாடியில் மாய கிருஷ்ணன் செய்த குறும்புகளையும் லீலைகளையும் அருமையான முக பாவங்களுடன் ஆடிய விதம், பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து, சுப்பராமய்யர் இயற்றிய கமாஸ் ராகத்தில் அமைந்த பதம், சஹானா ஒரு தேர்ந்த நடனக் கலைஞர் என்பதற்கு சான்றாய் அமைந்தது.
பல வெளிநாட்டினரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சஹானாவின் நடனத்தைப் பாராட்டினார்.