"எழுமின்! விழிமின்! நில்லாது உழைமின்!" - தேசிய இளைஞர் தினமும் சுவாமி விவேகானந்தரின் கனவும்!

ஜனவரி 12 - தேசிய இளைஞர் தினம்!
Swami Vivekananda -National Youth Day
Swami Vivekananda -National Youth Day
Published on
Kalki Strip
Kalki Strip

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் தேதி இந்தியா முழுவதும் 'தேசிய இளைஞர் தினமாக' (ராஷ்ட்ரிய யுவ திவாஸ்) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியத் திருநாட்டின் ஆன்மிகப் பேரொளியாகவும், இளைஞர்களின் முடிசூடா மன்னனாகவும் விளங்கிய சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமே இந்த நன்னாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. "இளைஞர்களால் மட்டுமே இந்த நாட்டை மாற்ற முடியும்" என்று ஆணித்தரமாக நம்பிய அந்த மகானின் நினைவைப் போற்றும் வகையில்,1985-ம் ஆண்டு முதல் இந்திய அரசு இத்தினத்தைக் கொண்டாடி வருகிறது.

சிகாகோ முதல் ராமகிருஷ்ணா மிஷன் வரை:

1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகச் சமயங்களின் நாடாளுமன்றம் இந்தியாவின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை. அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு மத்தியில், "அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே!" என்று விவேகானந்தர் முழங்கிய அந்த முதல் நொடியே, மேற்கத்திய உலகம் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அதுவரை இந்தியாவை ஒரு பின்தங்கிய நாடாகக் கருதிய உலக நாடுகளுக்கு, இந்திய வேதாந்தத்தின் ஆழத்தையும், யோகக் கலையின் உன்னதத்தையும் அவர் அறிமுகம் செய்தார். வெறும் மதத்தைப் போதிக்காமல், ‘எல்லா மதங்களும் ஒரே கடலைச் சென்றடையும் நதிகள்’ என்ற பரந்த மனப்பான்மையை அவர் உலகிற்கு உணர்த்தினார். இந்த ஒரு உரை, இந்தியாவை உலக ஆன்மீக வரைபடத்தில் அசைக்க முடியாத உயரத்தில் அமர்த்தியது.

வெறுமனே மேடைகளில் பேசுவதோடு அவர் நின்றுவிடவில்லை. "மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை" என்ற கொள்கைப்படி 'ராமகிருஷ்ணா மிஷனை' நிறுவினார். கல்வி, மருத்துவம் மற்றும் பேரிடர் கால உதவிகள் எனச் சமூகப் புரட்சியை இந்த அமைப்பு இன்றும் முன்னெடுத்து வருகிறது.

இளைஞர்களே நாட்டின் முதுகெலும்பு:

ஒரு நாட்டின் உண்மையான சொத்து அதன் தங்கம் அல்ல; அந்த நாட்டின் இளைஞர்களே. இந்தியா இன்று உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாகத் திகழ்வது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். ‘நூறு துடிப்பான இளைஞர்களைக் கொடுங்கள், நான் இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன்’ என்று விவேகானந்தர் கேட்டது வெறும் உடல் வலிமை கொண்டவர்களை அல்ல; எதற்கும் அஞ்சாத மன உறுதியும், தெளிவான சிந்தனையும் கொண்டவர்களைத்தான். உன்னால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்ற தன்னம்பிக்கை ஒவ்வொரு இளைஞனின் இரத்தத்திலும் ஓட வேண்டும் என அவர் விரும்பினார். தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றும் பக்குவமே ஒருவனை உண்மையான இளைஞனாகக் காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
Monday Motivational Quotes வாரத்தை உற்சாககத்துடன் எதிர்கொள்வோம்!
Swami Vivekananda -National Youth Day

ஒழுக்கமும் உழைப்பும்:

இன்றைய இளைஞர்களின் ஆற்றல் சிதறிப் போகாமல் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். தீய பழக்கவழக்கங்கள் மற்றும் தேவையற்ற பொழுதுபோக்குகளில் காலத்தைச் செலவிடாமல், உடல் நலத்திலும் அறிவு வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் வெறும் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும். புத்தாக்கச் சிந்தனைகளும், விடாமுயற்சியும் இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பகுத்தறிவுச் சிறுவன் டு உலக மகா குரு! - விவேகானந்தரின் மிரட்டலான பயணம்!
Swami Vivekananda -National Youth Day

"எழுமின்! விழிமின்! குறிக்கோளை எட்டும் வரை நில்லாது உழைமின்!" என்ற விவேகானந்தரின் கர்ஜனை இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பதை விடுத்து, நாட்டிற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திப்பதே உண்மையான தேசப்பற்று. இந்தியாவின் எதிர்காலம் நம் கைகளில் இருக்கிறது என்ற பொறுப்புணர்வோடு முன்னேறுவோம்.

"பாரத தேசத்தை உலக அரங்கில் முதன்மை நாடாக உயர்த்துவோம்!" என்பதை குறிக்கோளாகக் கொண்டு இன்றைய இளைஞர்கள் செயல்படவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com