

அமெரிக்காவின் பிரபல அரசியல் பொருளாதார நிபுணர் ஜே.எம். கிளார்க் அரசியல்வாதி பற்றி கூறியது.
"அரசியல்வாதி அடுத்த தேர்தலையே எண்ணுகிறான், அரசியல் நிபுணன் அடுத்த தலைமுறையை எண்ணுகிறான்."
"அரசியல்வாதி தன் கட்சியின் நன்மையை நாடுகிறான். அரசியல் நிபுணன் தன் நாட்டின் நன்மையை நாடுகிறான்."
"அரசியல் நிபுணன் நேரான பாதையில் கப்பலை ஓட்ட விரும்புகிறான், அரசியல்வாதி கப்பல் தானாகவே எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் என்று திருப்தியுடன் இருக்கிறான்."
தேர்தலில் நிற்கும் அரசியல்வாதி
தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிக்கும் தேர்தலில் வென்று விட்ட அரசியல்வாதிக்கும் என்ன வேறுபாடு? என்று கவிஞர் கண்ணதாசனிடம் கேட்ட போது அவர் கூறியது.
"நிற்பவன் தனக்குத்தானே எமன்! வெற்றி பெற்றவன் பிறருக்கு எமன்."
அரசியல் கட்சி தலைவன் எப்படி இருக்க வேண்டும்? என்று அறிஞர் அண்ணா விடம் கேட்ட போது அவர் கூறியது
"சட்டியில் காய்கறி வேகிறது. அடுப்பின் வெப்பத்தை சட்டி தாங்கிக்கொண்டு, வேண்டிய வெப்பத்தை மட்டும் கொடுத்து காய்கறி வேகுகிறது. தலைவன் சட்டியை போன்றவன் எதையும் தாங்க வேண்டும்."
பொது நலமும் சுயநலமும்
ஒரு சமயம் ஒருவர் தந்தை பெரியாரை சந்தித்து, 'ஐயா பொது நலம் என்றால் என்ன?' என்று கேட்டார்.
"மழை பெய்கிறதே! அது பொதுநலம்!" என்றார் பெரியார்.
"சுயநலம் என்றால் என்ன?" என்று மீண்டும் கேட்ட போது,
"மழை பெய்யும் போது நீ குடை பிடிக்கிறாயே. அது சுயநலம்!" என்றார் பெரியார்.
சின்ன ஜோக்கராக இருப்பதே போதும்
'மேரா நாம் ஜோக்கர்' என்ற இந்திப் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் இந்தி நடிகர் ராஜ்கபூர். அவர் புகழின் உச்சத்தில் இருந்த போது அவரை ஒரு அரசியல்வாதி சந்தித்தார்.
அப்போது, "நீங்கள் ஏன் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு போட்டியிடக் கூடாது?" என்று கேட்டார்.
அதற்கு ராஜ்கபூர் இப்படி சொன்னார் "பாராளுமன்றத்தில் முட்டாளாக இருப்பதை விட படத்தில் சின்ன ஜோக்கராக நடிப்பதையே நான் விரும்புகிறேன்."
இதுக்கு தான் அரசியலுக்கு வந்தார்களா!
"அரசியலில் தோற்றால் நான் சினிமாவுக்கு வசனம் எழுத செல்வேன், பேராசிரியர் பாடம் நடத்த செல்வார், அண்ணா பத்திரிகை நடத்துவார், ஆனால் ஒன்றுமே தெரியாத காமராஜர் எப்படி பிழைப்பார்" என பகிரங்கமாக கேட்டார் கருணாநிதி.
காமராஜர் சுருக்கமாக சொன்னார், "அப்படின்னா இவங்க வருமானத்துக்குத்தான் அரசியலுக்கு வந்தோம்னு ஒத்துகிட்டாங்க இல்லியா, அப்படியே விட்ருங்க.
நான் ஜெயிச்சாலும் தோத்தாலும் மக்கள விட்டு எங்க போவேன், நாடும் மக்களும்தானே என் வாழக்கை. வருமானத்த எதிர்பார்த்தா வந்தேண்" என்றார்.
"அரசியல்வாதிகளையும், குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் 'டயபர்' களையும் அவ்வப்போது மாற்றிவிட வேண்டும். ஏனெனில் இரண்டுமே தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி விட்டு மாற்றும் பொருட்கள் தான்."
- மார்க் ட்வைன்
"யார் குறைந்த வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே தேர்தலில் வாக்களியுங்கள். காரணம், அவரே உங்களை குறைவாக ஏமாற்றுவார்."
- பெர்னாட் பாரூக்