தமிழக சட்டமன்ற தேர்தல் - சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்!
Tamil Nadu Assembly Election
Tamil Nadu Assembly ElectionAI Image
Updated on

இந்தியாவில், குறிப்பாக 1951-52 மற்றும் 1957 தேர்தல்களில், தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடியினருக்கு (ST) கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க, ஒரு தொகுதியில் இருவர் (ஒரு பொது, ஒரு இட ஒதுக்கீடு) தேர்ந்தெடுக்கப்படும் 'இரண்டு உறுப்பினர் தொகுதி' முறை இருந்தது. 1952-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாட்டில் முதல் சட்டமன்றத் தேர்தலில் 375 தொகுதிகள் இருந்தன. அதில் 66 இரட்டை உறுப்பினர்கள் தொகுதிகள் இருந்தன. இடஒதுக்கீடு குளறுபடிகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, இந்த முறை 1961-ல் ரத்து செய்யப்பட்டு, தனித்தனி தொகுதி முறை கொண்டுவரப்பட்டது.

தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் (2026 ஏப்ரல் 23) சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் பெண்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். அந்த தொகுதி எதுவென்றால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி) தொகுதியாகும்.

இந்தத் தொகுதியில், தி.மு.க. சார்பில் இந்திராணியும், அ.தி.மு.க. சார்பில் பி.சத்யபாமாவும், த.வெ.க. சார்பில் கவுரி சித்ராவும், நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யாவும் களம் காண்கின்றனர்.

தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி தன் 60 வருட அரசியல் வாழ்வில் ஒருமுறை கூட சட்டமன்றத் தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தது இல்லை. 1957 முதல் 2016 வரை அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். தன் கடைசி தேர்தலான 2016ல் கூட அவர் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்.எல்.ஏ ஆனார்.

அ.தி.மு.க. முதல் முறையாக 1977ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதிலிருந்து 2021 வரை 7 முறை தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. வி.என்.ஜானகி (வைக்கம் நாராயணி ஜானகி, 1923–1996) தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர், முன்னாள் திரைப்பட நடிகை மற்றும் எம்.ஜி.ஆரின் மனைவி ஆவார். கணவர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் 1987 டிசம்பர் 4-ம்தேதி முதல் 1988 ஜனவரி 28-வரை, 23 நாட்கள் அ.தி.மு.க சார்பில் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்தார். முதல்வராகப் பதவியேற்ற முதல் நடிகை இவர் தான்.

சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.கவின் கோட்டையாக கருதப்படுகிறது. 1967ம் ஆண்டிலிருந்து இங்கு அ.தி.மு.க ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. இங்கே 10 முறை தி.மு.கவே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், தே.மு.தி.க தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழக உள்ளாட்சித் தேர்தல்: அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும்
Tamil Nadu Assembly Election

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சட்டமன்றத் தொகுதி, அ.தி.மு.கவின் வலுவான கோட்டையாகக் கருதப்படுகிறது. 1977 முதல் 2021 வரை இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து 10 முறை, அ.தி.மு.கவே வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க அங்கு இதுவரை வெல்ல முடியவில்லை.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தனி மெஜாரிட்டியில் வென்று ஆட்சியமைத்தது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒன்றைக் கூட அதனால் வெல்ல முடியவில்லை. 3 தொகுதிகளில் தி.மு.கவும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வென்றது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்ற முதல் பி.ஜே.பி (பாரதீய ஜனதா பார்ட்டி) எம்.எல்.ஏ சி.வேலாயுதம். இவர் 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ ஆனார்.

2021 சட்ட மன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் 84 பேர் போட்டியிட்டனர். அதில் 73 பேர் சுயோச்சைகள். அந்த தேர்தலில் அந்த தொகுதியில் தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெற்றவர் செந்தில் பாலாஜி. 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் 1053 விவசாயிகள் சுயோச்சையாக நின்று அப்போதைய அ.தி.மு.க அரசு மீது உள்ளூர் விவசாய பிரச்சினைகள் காரணமாக வெறுப்பை காட்டினார்கள்.

அதில் தி.மு.கவைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார்.

இதையும் படியுங்கள்:
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள்!
Tamil Nadu Assembly Election

2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் எண்ணப்பட்டது மே 13-ம்தேதி. இடையில் 30 நாட்கள். இதுவே இதுவரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் நடைபெற்ற நாளுக்கும், வாக்குகள் எண்ணப்பட்ட நாளுக்கும் இடையே இருந்த மிகப்பெரிய இடைவெளி இருந்த தேர்தலாகும்.

1991-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியைச் சந்தித்து, மிகக் குறைந்த இடங்களையே (இரண்டு இடங்கள்) கைப்பற்றியது. மு.கருணாநிதி (சேப்பாக்கம் தொகுதி), க.அன்பழகன் (ஆயிரம்விளக்கு தொகுதி) மட்டுமே தி.மு.க எம்.எல்.ஏ ஆனார்கள். காரணம் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டது தான்.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாற்று திறனாளிகள் வாக்களிக்க என 13,000 வீல் சேர்கள் பயன்படுத்தப்பட்டன. இது தான் இந்தியாவிலேயே நடந்த தேர்தல்களிலேயே அதிகமாக பயன்படுத்தப்பட்ட அதிக பட்ச வீல் சேர்கள்.

இதுவரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலேயே அதிகபட்சமாக 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 78.2% வாக்குகள் பதிவாகின. அதற்கு முன் 1967ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தான் அதிகபட்சமாக 76.57% வாக்குகள் பதிவானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com