சிறுகதை - கரையும் உருவங்கள்!

கரையும் உருவங்கள்...
கரையும் உருவங்கள்...

-வண்ணநிலவன்

லையைக் குனிந்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தான். அந்தத் தெருவில் நடமாட்டம் குறைந்துவிட்டது. ஒரு வீட்டுக்குள்ளிருந்து, 'ராதையின் நெஞ்சமே... கேட்டது. வழக்கமாக எந்த இடத்தில் அந்தப் பாடலைக் கேட்டாலும் நின்று ரசித்துக் கேட்பவன் இன்று நிற்காமல் போகிறான்.

தெருவின் திருப்பத்தில் மட்டும் ஒரு டியூப் லைட் எரிந்துகொண்டிருந்தது. டீக்கடைக்காரன் சாமான்களையெல்லாம் ரொம்பச் சொந்தத்துடன் தெருவில் பரப்பி வைத்துக் கழுவிக்கொண்டிருந்தான்.

'என்ன அண்ணாச்சி... படத்துக்குப் போயிட்டு வர்றீங்களா?"

'இல்லேப்பா...' என்று தேங்கிக்கிடந்த கரித் தண்ணீரைத் தாண்டிக் குதித்தான். செருப்பு அறுந்துவிட்டது. இரண்டு நாட்களாகப் பயமுறுத்தி வந்த செருப்பு,  இன்று வீட்டுக்கருகில் ஆள் நடமாட்டமற்ற ராத்திரி வேளையில் அறுந்துபோனது ஓரளவு நிம்மதியாய் இருந்தது. ஆனாலும் நாளைக்குத் தைக்க வேண்டும். பதினைந்து பைசாவாவது ஆகும்....

குனிந்து அந்தச் செருப்பையும் மற்றொரு செருப்பையும் கழற்றிக் கையில் எடுத்துக்கொள்கையில் மனதுள் பொங்கிய வேதனையை, 'சே' எனக் கூறிக் குறைக்க முயன்றான். பலசரக்குக் கடையின் முன்னால் பலகை பெஞ்ச் காலியாய்க் கிடந்தது. அதிலே கூடப் படுத்துவிடலாம். எஸ்.எஸ். எல்.சி. படிக்காதிருந்தால் ஒருவேளை அதில் படுக்கத் தைரியம் வந்திருக்கக்கூடும்.

தொடர்ந்து நடந்தான்.

வீட்டுக்குள் விடிவிளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அடுப்படியில் விளக்கொளி தெரிகிறது. கதவைத் தட்டக் கூச்சப்பட்டு வெளியே நிற்கிறான். தெரு வாசல் ஜன்னல் இருட்டில் முகம் தெரிகிறது. யாரென்று தெரிகிறதுக்குள் வாசல் கதவு திறந்துகொண்டது. அக்காதான் கதவைத் திறந்தது. அந்த அரை இருட்டில் அவள்  தலையிலிருந்த பிச்சிப்பூவின் வாசனை ரம்மியமாக இருந்தது.

'ஏண்டா ஊமையா வாசல்லே நின்னுக்கிட்டிருக்கே? கதவைத் தட்டினா என்னடா? இவ்வளவு நேரமாச்சே, வெளியே வந்து பார்த்துட்டுப் படுப்போமேன்னு, வாசலுக்கு வந்தேன்...எவ்வளவு நேரமா இப்படி நிக்கிறே?.... ஏண்டா இப்படி ஆயிட்டே... கதவைத் தட்டினாத்தானே யாரும் திறப்பாங்க... நல்ல புள்ளைடா நீ?  சரி... சரி... வா.’

திண்ணைக்கு அடியில் குனிந்து, மெதுவாக சப்தம் கேட்காமல் செருப்பைக் கீழே வைத்தான். அக்கா கதவைத் தாழ்ப்பாள் போட்ட சப்தத்தில் விழித்துக் கொண்ட அப்பா தலையைத் தூக்கிப் பார்த்தார்.

'யாரு சங்கரனா? எங்கேடா இவ்வளவு நேரமா சுத்திப்பிட்டு வாரே? காலா காலத்துல வந்து கடனப் பத்திட்டு படுத்தா என்ன? பொட்டப்புள்ள எம்புட்டு நேரத்துக்குடா முழிச்சிக்கிட்டு இருப்பா...?'

சுவரோடு சுவராய் ஒதுங்கி நின்றவனைப் பார்த்து 'நீ வாடா' எனக்கூறி உள்ளே போனாள் அக்கா. அடுப்படியைக் கழுவி விட்டிருக்க வேண்டும். இளம் பச்சை வர்ணத்தில் பளபளவென்றிருந்த சில இடங்களில் ஈரம் காய்ந்துபோயிருந்தது. ஒரு சாக்குத் துண்டை விரித்துச் சங்கரனை உட்காரச் சொன்னாள்.

'எனக்குச் சாப்பாடு வேணாம்'  என்று நிலைப்படியருகே வந்து சொல்லி விட்டுத் திரும்பிப் போக முயன்றான். அவள் வேகமாக வந்து அவன் கையைப் பிடித்திழுத்து நிறுத்தினாள்.

அவனது முகத்தையே கொஞ்ச நேரத்துக்குப் பார்த்தாள். அவன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டான்.

எதுக்குடா வேண்டாம்ங்கிறே... வா வந்து சாப்டுட்டுப் படு... பெரிய இவன் மாதிரித்தான்...'

இழுக்காத குறையாக இழுத்துவந்து தோளைப் பிடித்து அமுக்கி, சாக்கின் மீது உட்காரப் பண்ணினாள். தயாராகப் பிசைந்து வைத்திருந்த சாப்பாட்டுத் தட்டை அவன் முன் வைத்துவிட்டு சிறிய மரப்பலகையைப் போட்டுக்கொண்டு எதிரே உட்கார்ந்துகொண்டாள்.

அவன் சாப்பிடவில்லை. தட்டையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

'என்னடா பார்த்துக்கிட்டேயிருக்கே... சாப்பிடு...ம்... மத்தியானம் சாப்பிட்டதுதானே... சாயந்தரங் காப்பிகூடக் குடிச்சிருக்க மாட்டியே... சாப்பிடு.'

அவளுடைய அழுத்தமான பிரியத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பொங்கிவந்த அழுகை, தொண்டைக் குழியில் மரக்கட்டை மாதிரி தடுக்கிக்கொண்டு நின்றது.

பலகையை இழுத்துப் பக்கத்தில் போட்டு உட்கார்ந்துக் கொண்டாள்.
'ம்... கையைக் காட்டு...' சோற்றை உருட்டிக் கையில் போட்டாள்.

இதையும் படியுங்கள்:
வெள்ளைத் தேநீரின் வியக்க வைக்கும் நன்மைகள் தெரியுமா?
கரையும் உருவங்கள்...

‘ஒனக்கு மட்டுமாடா வேலையில்லாமே ஊர்ல இருக்கே?  எவ்வளவு பிள்ளைகள் வேலையில்லாம உன்னை மாதிரி படிச்சுப் போட்டு வீட்ல இருக்கு. வீட்டுக்கு வீடு வாசப்படி. எனக்கும்தான் வயசும், பொழுதும் ஏறிக்கிட்டே போகுது. நான் யார்கிட்டேடா போய் அழட்டும்?... ம் கையை நல்லா விரி, சோறு கீழே சிந்திரப்போகுது... யார் வீட்டுக்கோ வர்ற மாதிரி தயங்கித் தயங்கி வாரே... யார் வீட்லேயோ சாப்பிடுத மாதிரி கூச்சப்படுதே ... வாயில் போடு...!'

இன்னும் கொஞ்சம் சோறு கேட்டு வாங்கிச் சாப்பிட்டான். அங்கணத்தில் கை கழுவத் தண்ணீர் ஊற்றினாள்.

'பார்த்துப் போ... இதுகள் கால்மாடும் தலைமாடுமா படுத்துக் கெடக்கும். இந்தா இதெல்லாம் எடுத்து வச்சிட்டு வாரேன். போயிப் படுத்துக்கோ...'

வேட்டியில் கையைத் துடைத்தபடி அறைக்குள் போனவன் விளக்கைப் போட்டான். பெரிய தம்பி புரண்டு படுத்தான். ஊஞ்சல் சப்தம் எழும்பித் தேய்ந்தது. அந்தச் சப்தத்தை அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கேட்டு வருகிறான். அது அவனுக்கு ரொம்பப் பிடித்தமான சப்தம். அந்த ஊஞ்சலில் தம்பி,  அக்கா,  அவன் எல்லோரும் லீவு நாட்களில் பஸ் விளையாட்டு விளையாடுவார்கள். அவன்தான் டிரைவர். கைநிறைய காலண்டர்தாளைக் கிழித்து வைத்திருக்கும் தம்பி கண்டக்டர். ஊஞ்சலை ஓடி ஓடி ஆட்டி விட்டுக் கடைசியில் ஏறிக் கொள்ளும்போது ஒருமுறை தவறி விழுந்து நெற்றியில் வெட்டிவிட்டது. நெற்றித் தழும்புக்கு அவனது கை தானாகவே போயிற்று.

தம்பியின் சிதறிக் கிடந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து அடுக்கி வைத்தான். நன்றாகப் படிக்கும் தம்பியைக் கஷ்டத்தோடு கஷ்டமாய் அப்பா படிக்க வைக்கிறார். ஆனால்,  அவனுக்கோ... படிப்புமில்லை, வேலையுமில்லை.

சட்டையைக் கழற்றிக் கொடியில் போட்டான். படுக்கையில் சுவரோரமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். தூங்கப் போவதில்லை. இருந்தாலும் படுத்தே ஆக வேண்டும். இது என்ன கஷ்டம்? வீட்டுக்குள்ளிருக்கவே சங்கடமாக இருந்தது.

அக்கா வந்தாள். அவனுடைய தலைமாட்டில்தான் அவளுக்குப் படுக்கை. 'இன்னும் என்ன யோசனை பண்ணிக்கிட்டிருக்கே! படுக்க வேண்டாமா?' என்றாள்.

பெருமூச்சு விட்டான்.

இவன் தலையணையிலும் அவள் தலையணையிலுமாகச் சேர்ந்து உட்கார்ந்துகொண்டாள். மங்கிய விடிவிளக்கு வெளிச்சத்தில் ரொம்ப அழகாக இருந்தாள். வீட்டில் எல்லாரையும்விட அவள் நல்ல சிவப்புதான். இருந்தும் கல்யாணம் ஆகவில்லை.

'அந்தக் கம்பெனிலே யாரோ உன் ப்ரண்ட் இருக்கான். வேலை விஷயமா வரச் சொன்னான்னு சொன்னியே. பார்த்தியா?'

கொஞ்ச நேரம் பேசாமல் இருந்துவிட்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தான்.

'பார்த்தேன். நாளன்னைக்கு வரச் சொல்லி விட்டிருக்கான். வழியில, லாலாசத்திர முக்கில் ஆறுமுகத்து மாமாவைப் பார்த்தேன். நாளைக்குத் தாளையூத்துக்கு வா. எங்க சூப்பர்வைசர்கிட்ட சொல்லலாம்னு சொன்னா...'

ரொம்ப பயந்து தாழ்ந்த குரலில் பேசினான்.

அவுஹ வீட்டுல எல்லாரும் சௌக்கியந்தானா? அவுஹ பையன் வேலையிலே சேர்ந்தாச்சாமே...ம் பின்னே நம்ம அப்பாவை மாதிரியா? இவுஹளுக்கு இருக்கிற செல்வாக்குக்கு யார்கிட்டேயாவது சொல்லி வச்சாக் கிடைக்கும்....'

அந்த மாமாவின் பையனைக்கூட அக்காவுக்குப் பேசி விட்டு, ஒன்றும் நடக்கவில்லை.

'நாளைக்கு நீ தாளயூத்துக்கு எப்பப் போகப் போற?'

'என்னத்தைப் போகச் சொல்லுதே. அங்கேன்னாப்பலே வேலையை வெச்சுக்கிட்டு காத்திட்ருக்காஹளாக்கும்.'

'போடா முட்டாள். அந்த மாமா ஒன்னைய மெனக்கெட்டுப் பாத்து கூப்பிட்டிருக்கா; போய்ட்டு வருவியா... ம் பஸ்ஸுக்குக் காசு வைச்சிருக்கியா? நீ காசு இல்லாட்டா சொல்லாம கொள்ளாம நடந்தே கூடப் போயிருவியே...'

'ம் இருக்கு...'

'பொய்... சொல்லாதே.' கொடியில் கிடந்த அவன் சட்டையை உட்கார்ந்தபடியே கையை நீட்டி இழுத்தாள். ஒரு ஐந்து பைசா கீழே விழுந்தது. சட்டையில் இருந்து ஒரே வியர்வை வாடை. பைக்குள் கையை விட்டுத் தேடினாள். இரண்டு கசங்கிப்போன பஸ் டிக்கெட்டை எடுத்து வெளியே போட்டாள்.

இதையும் படியுங்கள்:
குளிர் காலத்தில் அத்திப் பழங்களை சாப்பிடுவதன் அவசியம் தெரியுமா?
கரையும் உருவங்கள்...

'எங்கடா காசு வச்சிருக்க! எனக்கு ஒன்னையத் தெரியாதாடா' என்று எழுந்து போய் பீரோவைத் திறந்தாள். அவளுடைய துணிகள் இருந்த தட்டிலிருந்து ஒரு சாக்லெட் டப்பாவை எடுத்தாள். டப்பாவிலிருந்த சின்னக் குங்குமச் சொப்பை எடுத்துக்கொண்டு வெளிச்சத்திற்கு வந்தாள். மடக்கி வைத்திருந்த ஒரு ரூபாய் நோட்டைப் பிரித்து அவனிடம் நீட்டினாள்.

'எதுக்கு அக்கா...' என்று அவளை அண்ணாந்து பார்த்து மெல்லச் சொன்னான்.

'சரிதாண்டே... ரொம்பப் பிகு பண்ணிக்கிடாதேடா...' என்று சொல்லி விட்டுச் சிரித்தாள். மீண்டும் அருகில் வந்து அமர்ந்தவள், சட்டையை எடுத்து கைமடிப்பைப் பிரித்தாள். அவனிடமிருந்து ரூபாயை வாங்கி அந்த மடிப்புக்குள் சுற்றினாள்.

'இன்னைக்குத்தானே இந்தச் சட்டையைப் போட்டே... அதுக்குள்ளே ஒரே வேர்வையா ஆக்கிட்டு வந்திருக்கியே. சோப்புப் போட்டுக் குளிக்கிறதை ஐயா விட்டாச்சு போலிருக்கு.'

அவளை நேருக்கு நேர் பார்த்தான்.

'எல்லாம் நான் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன். இவ வீட்ல கெடக்கவதானே இவளுக்கு என்ன தெரியும்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா?... சோப்புப் போட்டுக் குளிக்கறதை விட்டுட்டே... எல்லாரும் பேஸ்ட் எடுத்து பல்லுத் தேய்க்கிறாங்க. நீ பதினைந்து பைசாவுக்குப் பல்பொடி வாங்கிட்டுத் தேய்க்கே ... அம்மாவுக்கு இதெல்லாம் கவனிச்சுப் பார்க்கத் தெரியாது... உனக்கு என்னடா வந்திச்சு?  வேலை இல்லாமே  இருக்கதுக்காக இவ்வளவு ரோஷத்தோட இருக்கணுமாடா?  
அக்காவைப் பாரு. வீட்டுல உட்கார்ந்து பத்து வருஷம் முடியப் போகுது. எந்த செளகரியத்தையாவது கொறைச்சிருக்கேனா! ஆனாலும் நீ ரோஷக்காரப் பயடா!' விசும்பலாகக் குறைந்தது குரல்.

சட்டென்று முகத்தை அவள் மடியில் குப்புற வைத்துக்கொண்டு படுத்தான். அவள் அவனுடைய விம்மித் தாழும் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

பின்குறிப்பு:-

கல்கி 06  ஜூன்  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com