

- சீதா ரவி
"நெத்தியில் பட்டை பட்டையா விபூதி. இரண்டு கையிலயும் இரண்டு தேங்காய் மூடி வைச்சுண்டிருந்தார்... கொல்லைப்பக்கம் கதவண்ட நிழலாடறதேன்னு திரும்பிப் பார்த்தேன்டா ராமு... அப்படியே சிலிர்த்துப்போச்சு! அரிசி புடைச்சுண்டிருந்தவ, முறத்தைக் கீழே போட்டுட்டுப் படபடன்னு கன்னத்துல போட்டுண்டேன். கண் சிமிட்டற நேரத்துல ஒரு சிரிப்புச் சிரிச்சுட்டு மறைஞ்சுட்டார்..."
சாக்ஷாத் சுப்ரமண்ய சுவாமிதான். தனக்கு தரிசனம் கொடுக்க அந்த மத்தியான வெயிலைப் பொருட்படுத்தாமல் பழநியிலிருந்து இறங்கி நடந்து வந்ததாகப் பாட்டி நம்பினாள். எட்டு வயது வரையில் நானும் நம்பினேன்.
அதன் பிறகுதான் நம்பிக்கைகள் தகர்ந்து விழுந்து அசௌகரியமான பகுத்தறிவுக் கேள்விகள் என்னைக் கஷ்டப்படுத்த ஆரம்பித்தன.
''போ பாட்டி! மனுஷாள் கண்ணுக்கெல்லாம் சாமி தெரியாது!'' என்று ஒன்பது வயதிலும், ''உனக்கு வேற வேலை இல்ல... ஏதாவது கனவு கண்டுட்டு நிஜம்னு நினைச்சுப் பேத்துவே..." என்று பதினைந்து வயதிலும், "ஆமாம்! கையில இருந்த தேங்காய் மூடியை வாங்கித் தொகையல் அரைக்கலியா...?" என்று பத்தொன்பது வயதிலும் "சரி, சரி! சீக்கிரமா சோத்தைப் போடறியா?" என்று இருபத்திரண்டு வயதிலுமாக என் பதில்கள் பரிணாம வளர்ச்சியுற்றன.
பாட்டி காலமானபிறகு எல்லாமே நிழலாகக் கரைந்துபோயிற்று. அதாவது, போய்விட்டதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன் - தியாகராஜனின் பாட்டைக் கேட்கும்வரை.
முதல்முறையாகக் கேட்டபோதே தோன்றிவிட்டது, ஜன்மம் எடுத்ததே இதற்காகத்தான் என்று!... 'உயிரைக் கொடுத்துப் பாடினான்' என்று சொன்னால் போதாது.