

-கா.சு.வேலாயுதன்
அந்த ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்டைப் பார்த்தே ஆகவேண்டும். ஆபரேஷன் தியேட்டர் முகப்பில் அடுப்புக்கல் கூட்டின மாதிரி அக்கா, அண்ணன், தம்பி...
பச்சைத் துணி போர்த்து அம்மாவை எப்போதோ ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்றுவிட்டிருந்தனர். டாக்டர்கள் உள்ளுக்குள் போகும்போதே பிடித்திருக்கலாம். அவசரமாய்ப் போன நாலைந்து பேரில் சடாரென்று யார் 'ஸ்பெஷலிஸ்ட்' - யார் அஸிஸ்டெண்ட் என கண்டுபிடிக்க முடியாதது துரதிருஷ்டம். அப்படியே டாக்டர்கள் போகும்போது மறிப்பது அபசகுனம் என அவர்கள் நினைத்தும் விடலாம்.
நானாவித மருந்துகளின் வாசம் நாசியில், ஆறுமாதமாய் கூடவே பழகி ஒன்றிவிட்டதனால் பெரிதாகப்படவில்லை. அரசு ஆஸ்பத்திரியின் அசூயை வாசம் இங்கில்லாததே பெரிய விஷயம்.
கிளினிக் டாக்டர், அவரைப் பார்த்துப் புண்ணியமில்லை என்பதற்கு ஒரு நீண்ட சொற்பொழிவு நிகழ்த்தி, நாற்பத்தெட்டாயிரத்துச் சொச்சம் பட்டியலிட்ட தம் பில்லில் தம்முடைய பீஸ் மூவாயிரம் மட்டும் கழித்துக்கொள்வதாக பரோபகாரம் காட்டியிருந்தார்.
கைதேர்ந்த ஆர்த்தோ. அவர் சக்ஸஸ் பண்ணாத கேஸே இல்லை... இந்த பீஸ்கூட அவர் ஒருவருக்கில்லை... அவர் அஸிஸ்டெண்ட் மூணு பேருக்கும் சேர்த்து... அவர் இவ்வளவு குறைச்சலா வர்றதே பெரிய விஷயம்!'
கிளினிக் டாக்டர் அவருக்குக் கொடுத்த சர்ட்டிபிகேட் இங்கே முக்கியமில்லை. அவர் குறைத்த மூவாயிரமும் முக்கியமில்லை. ஸ்பெஷலிஸ்ட்டின் பதினைந்தாயிரம் ரூபாய் பீஸ் ஒரு பாடு கடனை அடைக்கும். அங்கே இங்கே என்று அனைவரும் அலைந்து திரட்டின பணம். 'மருத்துவர்கள் வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதூதர்கள். அவர்களுக்குக் காசு பெரிதல்ல. தர்மம்... உயிர்காக்கும் தர்மம் கொண்டு ஒழுகுபவர்கள்...!' என்று எப்போதோ அம்மா சொன்ன வாக்குக்கு இவர் ஒருவராவது பொருந்தி வரமாட்டாரா என்கிற நப்பாசை.