

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமைப்பு சாரா பெண் பணியாளர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். துணிக்கடை, பாத்திரக்கடை என்று பல்வேறு கடைகளில் வேலை செய்து வருகிறார்கள்.
'சூப்பர் ஸ்டோர்ஸ்' மிகப் பெரிய கடை. அங்கே இல்லாததே இல்லை. சுமார் 150 பேர் அந்தக் கடையில் பணி புரிந்தார்கள்.
கொடுமை என்னவென்றால் அவர்களுக்கு வேலை நேரம் 12 மணி நேரம். 8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் ஒய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்று 100 வருடங்களுக்கு முன்னரே தொழிலாளர்கள் போராடி தங்கள் உரிமைகளை பெற்றனர். எல்லாம் காற்றில் பறந்துவிட்டது. தற்போதைய நிலையில் தொழிலாளர்கள் வாரம் இரு தினம் விடுமுறை வேண்டும் என்று கேட்டார்கள்.
சூப்பர் ஸ்டோர்ஸில் பணிபுரியும் பத்மா ஒரு பட்டதாரி. துணிச்சல் மிக்கவர். இவர்களுக்கு என்று ஒரு தொழிற்சங்கம் இல்லை. தொழிற்சங்கம் அமைக்க முயன்றார்.
எல்லோரும் பயப்பட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் சூப்பர் ஸ்டோர்ஸ் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டார். 8 மணி நேர உழைப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்று வாதாடினார்.
நீதி மன்றம் சென்றதால் கடை உரிமையாளர் பத்மாவை வேலையிலிருந்து நீக்கி விட்டார். தனக்கு மீண்டும் அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று மற்றும் ஒரு வழக்கைப் போட்டார். சமூக ஊடகங்களில் இந்த செய்தி பிரபலம் அடைந்தது. மக்கள் பத்மாவிற்கு ஆதரவு அளித்தார்கள். எந்தக் கட்சியும் இந்த அமைப்பு சாரா தொழிலாளர்களை அமைப்பாக்க முன் வரவில்லை.
பத்மா வேலை இழந்ததால், கடை பணிப் பெண்களைத் தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பல்வேறு கடைகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள் பத்மாவின் யோசனையை வரவேற்றார்கள். இதற்குள் உயர் நீதிமன்றம் வேலை நேரம் 8 மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும். வேண்டும் என்றால் ஷிப்ட் முறையில் ஆட்களை வேலைக்கு வைக்கலாம் என மிக முக்கியமான தீர்ப்பு வழங்கியது.
பத்மா யோசித்தார். தான் ஏன் தொழிற்சங்கம் துவங்கக்கூடாது என்று யோசித்து முடிவு செய்தார். பத்மா முழுநேரம் தொழிற்சங்கம் ஆரம்பிக்க உழைக்க ஆரம்பித்து விட்டார். அவர் எந்தக் கடையையும் விட்டு விடவில்லை. ஆரம்பத்தில் பணிப்பெண்கள் பயந்தார்கள். அவர்களுக்குத் தைரியம் அளித்தார். நாமே நமக்காக ஆரம்பிக்கும் தொழிற்சங்கம் என்று எடுத்துக் கூறினார்.
பத்மா “செங்கொடி“ தொழிற்சங்கம் என்று பெயர் வைத்தார். நல்ல வரவேற்பு.
சுமார் 6 மாதங்கள் கழித்து ‘செங்கொடி தொழிற்சங்கம்’ முதல் மாநாடு நடந்தது. பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினார்கள். இரண்டு நாட்கள் நடந்தது.
மாநாட்டில் 2 தீர்மானங்கள் :
1. 8 மணி நேரம் உழைப்பு.
2. வாரம் 2 தினம் விடுமுறை.
இரண்டு கோரிக்கை நிறைவேறும் வரை நமக்கு முன்னேற்றம் இல்லை.
பத்மா பிரபலம் ஆனார். தொழிற்சங்கம் கட்டுவதில் தான் கவனம் செலுத்தினார். ஆம். நமக்கு பல பத்மாக்கள் வேண்டும்..!