

வாழ்க்கையில் ஒரு சில பேர் இப்படித்தான் வாழ்கிறார்கள். எதையுமே யோசித்து தேவையான அளவு தான் செய்ய வேண்டும். அதேபோல தேவையான அளவில் தான் உண்ணவும் வேண்டும். செலவும் அதே போலத்தான் செய்ய வேண்டும்.
ஆனால் ஒரு சில பேர் அப்படி இருப்பதில்லை. அவர்களுக்கு இஷ்டம் இருந்தால் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால் கூட அடுத்தவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு இஷ்டம் இல்லை என்றால் நாம் வலிய வந்து பேசினால் கூட பேசாமல் முகத்தை திருப்பிக் கொள்வார்கள். அதைப் போலவே ஒரு சில பேர் பணத்தை தன் இஷ்டத்திற்கு செலவு செய்வார்கள்; அதே நபர்கள் சில நேரத்தில் தேவைப்பட்டால் கூட செலவு செய்யாமல் இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்வார்கள். உணவு உண்பதிலும் சில பேர் அப்படித்தான், இஷ்டமிருந்தால் பசிக்கவில்லை என்றாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஒரு சில நேரங்களில் காரணம் ஏதும் இல்லாமலேயே பசித்தாலும் சாப்பிடாமல் இருப்பார்கள்; இதைத்தான் வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்பார்கள்.
இவ்வாறு இருப்பது சரியா என்று கேட்டால் முற்றிலும் தவறு. நமக்கு மனநிலை சரியாக இருந்தாலும், சரியாக இல்லை என்றாலும் எப்போதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். அது உணவு உண்பதாக இருந்தாலும் சரி, பணத்தை செலவு செய்வதிலும சரி, உறவுகளிலும் சரி, நட்பிலும் சரி, எதுவாக இருந்தாலும் அளவோடு இருந்தால் தான் அது இனிக்கும். இல்லையென்றால் அளவுக்கு அதிகமானால் விஷமாகிவிடும். ஒன்றுமே இல்லை என்றாலும் சூனியம் ஆகிவிடும்.
உதாரணத்திற்கு ஒரு பலூனை ஊதுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஊதிக் கொண்டே இருந்தால் அது என்னவாகும்?? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அது அளவுக்கு மீறி பெரிதாகி ஊதுவதற்கு இடமே இல்லாமல் வெடித்து விடும். சரி, அதே பலூனை ஊதாமலேயே அப்படியே குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளால் அதை வைத்து கொண்டு விளையாட முடியுமா?? ஒன்றுமே இல்லாத பலூனை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள். பலூனை தேவையான அளவிற்கு ஊதி கட்டிக் கொடுத்தால் தானே குழந்தைகளுக்கு பார்ப்பதற்கும் அழகாக இருக்கும் மேலும் அதோடு விளையாடவும் செய்வார்கள்.
அதை போலத்தான் நம் வாழ்க்கையிலும் தேவையானதை சரியான நேரத்தில் சரியான அளவில் செய்யும் போது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும்.
உடலுக்கு தேவைப்படும் ஆரோக்கியமான உணவுகளை அளவோடு உண்ணுங்கள். ஒருநாள் அதிகமாக சாப்பிட்டோம் என்று கூறி அடுத்த நாள் பட்டினியாக இருக்காதீர்கள். அதிகமாகவும் சாப்பிட வேண்டாம் பட்டினியாகவும் இருக்க வேண்டாம்.
சீரான மற்றும் ஒழுங்கான முறையில் உங்கள் வாழ்க்கையை திட்டமிட்டு அதை சீரான அளவில் செயல்படுத்தி அமைதியான வாழ்க்கையை வாழுங்கள்.