தமிழக தலைநகர் சிங்காரச் சென்னை. இங்கு பல்வேறு உயர் வசதிகள் இருந்தாலும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லுதல் என்பது அவ்வளவு சுலபமில்லை.
கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை பிரயாணம் என்பது சொல்லில் அடங்காதது. அந்த அளவுக்கு அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் 24 மணி நேரமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்னர் அலுவல் பணி காரணமாக சென்னை செல்ல வேண்டி இருந்தது. பணி முடிந்து இரவு ஏழு முப்பது வரைக்கு கோயம்பேட்டில் இருந்து திருப்பத்தூர் வரை செல்லும் பஸ்ஸில் ஏறினேன். வேகமாக செல்லும் (express) பேருந்து வேறு. ஆனால், அதுவோ ஊர்ந்து செல்ல தொடங்கியது. சரி போக போக சரியாகிவிடும் என்று நினைப்பில் நான் காத்திருந்தபோது, தொடர்ந்து பஸ் ஊர்ந்து கொண்டே சென்றது. இப்படியாக இரண்டே கால் மணி நேரம் கழித்து பூந்தமல்லிக்கு சற்று முன்னதாக தான் பஸ் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னர் ஸ்ரீபெரும்புதூர் வரும் வேலூர்சற்று வேகமாக பஸ் சென்றது. அப்படியே சென்று, சென்று இறுதியில் இரவு 11.30 க்கு வேலூர் புது பஸ் ஸ்டாண்டை வந்தடைந்தது. கோயம்பேட்டில் இருந்து வேலூர் வரை 4 மணி நேரப் பயணம்!
இதில் பஸ் டிரைவர்களையோ, பஸ் தரத்தையோ குறைவாக மதிப்பிட முடியாது. இப்படி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை இடையிலான குறைந்த தூரத்தை இரண்டே கால் மணி நேரம் அளவுக்கு கடப்பதற்கு முக்கிய காரணம் கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை இடையிலான சாலை போக்குவரத்து நெரிசலே ஆகும். இது ஒரு நாள் இரு நாள் மட்டும் அல்ல. ஆண்டு முழுவதும் இப்படித்தான் நடந்து கொண்டு வருகிறது.
இதற்கு ஒரே தீர்வு பகுதியில் மேம்பாலங்கள் அமைப்பது மட்டும்தான். அந்தப் பணிகளும் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு, இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
மக்களின் அத்தியாவசிய பிரச்சனைக்கு அரசு தரும் முக்கியத்துவம் இதுதான். ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தினந்தோறும் கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையை பயன்படுத்தினார்கள் என்றால் அவர்களுக்கு மக்கள் படும் பாடு புரிய வரும். இல்லையென்றால் ஏதாவது ஒரு அதிகாரிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் தினந்தோறும் காலையில் இரண்டு முறை மாலையில் இரண்டு முறை இரவில் இரண்டு முறை கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை பயணித்து வரவேண்டும் என உத்தரவிட்டால் போதும் அதிகார மட்டத்தில் தவறுகளே நடக்காது.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒன்று... இந்த சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, மதிய நேரங்களில் போக்குவரத்து எளிதாக காணப்பட்டது. ஆனால், 'மதிய நேரத்தில் போக்குவரத்து எளிதாக உள்ளது; அதனால் மதியம் கிளம்பிச் செல்லலாம்' என்ற நினைப்பு பலரின் மனதில் வந்ததால், இப்போது மதியமும் இந்த சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதில் ஆம்புலன்ஸ்களும் தவிப்பது தனிக்கதை.
போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கம் மாற்றப்பட்டது ஒரு நல்ல விஷயம். அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தில் சிறிதளவாவது கொடுத்து, இப்பகுதியில் மேம்பாலங்கள் விரைந்து கட்ட வேண்டும்.