பாம்பு கடித்தாலும் விஷம் ஏறாதா? 'Dry Bite' பின்னால் இருக்கும் அதிர்ச்சி பின்னணி!

Snake Venom
Snake VenomCredit: AI image
Updated on
Kalki strip
Kalki strip

'பாம்பின் கால் பாம்பறியும்' என்பார்கள். ஆனால், பாம்பின் விஷம் பற்றி பாம்புக்கு ஒன்றும் தெரியாதாம்! பாம்பு ஒருவரை கடிப்பது என்பது ஒரு தற்காப்பு மற்றும் பசியைத் தீர்க்கும் உள்ளுணர்வுதான் என்று பாம்பு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தன்னிடம் விஷப்பல்(snake-venom) இருக்கிறது என்ற அறிவு அவற்றிற்கு இல்லை.

இதில் மிகவும் நம்பமுடியாத ஒரு விஷயம் என்னவென்றால், பாம்பு எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கடிப்பதில்லையாம். எந்த விலங்குக்கு அல்லது மனிதனுக்கு எவ்வளவு விஷத்தைச் செலுத்தினால் போதுமானது என்று அதுவே நிர்ணயிக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

பாம்புகள் கடிக்கும் வேகத்தையும் அளவையும் சூழ்நிலை மற்றும் காரணத்தை பொறுத்து, அதாவது கடிப்பது உணவுக்கா அல்லது தன்னைக் காத்துக்கொள்வதற்கா என்பதைப் பொறுத்து அமைத்துக் கொள்கின்றன. விஷப் பாம்புகள் தங்களின் விஷத்தை வீணாக்க விரும்புவதில்லை.

  • இரைக்கு ஏற்ப விஷம்: ஒரு நாகப்பாம்பு எலியின் உடம்பில் செலுத்தும் விஷத்தின் அளவும், ஒரு கீரியின் உடலில் செலுத்தும் விஷத்தின் அளவும் வேறுவேறானது.

  • ராஜநாகத்தின் கணக்கு: உதாரணத்திற்கு ராஜநாகத்தை எடுத்துக்கொள்வோம். விஷப் பாம்புகளிலேயே ராஜநாகம்தான் விஷத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், புலி அல்லது யானை போன்ற பெரிய மிருகங்களால் தனக்கு ஆபத்து என்று வரும்போது, அது ஆக்ரோஷத்துடன் கடித்துத் தன் விஷப்பையில் இருக்கும் அத்தனை விஷத்தையும் செலுத்திவிடுமாம்!

ஒரு விசித்திரமான முரண்: ஒருபக்கம் பாம்புகளுக்குத் தங்களின் விஷத்தைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை என்கிறார்கள்; மறுபக்கம் அவை விஷத்தை அளவோடு உபயோகிக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

சில விஷப் பாம்புகள் விஷத்தைச் சேமிப்பதற்காக, கடிப்பது போல நடிக்கவும் செய்கின்றனவாம். இதை ஆங்கிலத்தில் 'Dry Bite' (விஷமில்லாக் கடி) என்று அழைக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஆன்மாவின் காலம்!
Snake Venom

நல்ல பாம்பை எடுத்துக்கொண்டால், அது எடுத்தவுடனேயே ஒருவரைக் கடிப்பதில்லை. முதலில் சீறி விரட்டப் பார்க்கும்; அது முடியாதபோதுதான் வேறு வழியில்லாமல் கடிக்கும். முதிர்ச்சியடைந்த (Mature) பாம்புகள்தான் இப்படி எதிரியை எடைபோட்டு, "கடிப்பதா, வேண்டாமா?" என்று யோசித்து முடிவெடுக்கின்றன. ஆனால், குட்டிப் பாம்புகள் இதற்கு விதிவிலக்கு; அவைகளுக்கு இப்படிப் பக்குவமாகச் செய்யத் தெரியாது (ஆபத்து என்று தோன்றினால் முழு விஷத்தையும் இறக்கிவிடும்).

இன்னொரு ருசிகரமான விஷயம்: பாம்பின் விஷம் அந்தப் பாம்பை ஒன்றும் செய்யாது. ஒரு பாம்பு தன் வாழ்க்கையில் எவ்வளவு வெறுப்படைந்தாலும், தன்னைத்தானே கடித்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முடியாது! அதனுடைய விஷத்தை முறியடிக்க அதன் உடம்பிலேயே எதிர்ப்பான்கள் (Antibodies) உருவாகிவிடும். ஆனால், ஒரு பாம்பை வேறொரு இனத்தைச் சேர்ந்த பாம்பு கடித்தால் அதற்கு மரணம் நிச்சயம்.

"பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்" என்பார்கள். அதுபோல சிங்கம், யானை போன்ற சூப்பர் விலங்குகளின் தொடையும் நடுங்கும் என்பதில் சந்தேகமில்லை!

logo
Kalki Online
kalkionline.com