

-சாந்தா தத்
நீர்ப்பரப்பை யொட்டிய மூன்றரை அடி கிராதியைப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்தபோது முதலில் அதைப் பார்த்தது மகேஸ்வரிதான்.
"என்னங்க... அதோ அங்க பாருங்க..." பதற்றமாய் சுரேந்தரை உலுக்கினாள்.
கோடைக்கு இதமாய் ஜலக்ரீடை ஆடுவதுபோல் தண்ணீரில் ஓர் உடல்... தெப்பம்போல் மிதந்துகொண்டிருந்தது.
"ஐயோ... யாரோ பாவம்... எப்படி விழுந்திருப்பான்..?" பதற்றம் காரணமாய் கத்துவதுபோல் ஒலித்தது சுரேந்தரின் குரல்.
"எனக்கென்னவோ தவறி விழுந்துட்டதா தெரியல. சின்னக்குழந்தையா என்ன எம்பிப் பார்த்தபோது கால் இடறி விழறதுக்கு. ஆறடி மனுஷன் மூணடி கிராதியைத் தாண்டி விழ சான்ஸே இல்ல, அந்த ஆள் தற்கொலை நோக்கத்தோடுதான் இப்படி..." மேற்கொண்டு பேசமுடியாமல் சங்கடம் நெஞ்சை அரித்தது. சாலையோர விளக்குகள் வெளிச்சத்தில் மங்கலாய்த் தெரிந்த அந்த சடலத்தை உற்றுப் பார்த்தாள். உடலில் நடுக்கம் பரவ, கணவன் கையைப் பிடித்துக்கொண்டாள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை. சீரான இடைவெளியில் இருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் அமர்ந்திருந்த அதி சொற்பமானவர்களும் பேச்சில் லயித்திருந்தனர். போக்குவரத்து அதிகமில்லாததை சாதமாக்கிக்கொண்டு வாகனங்கள் வேகத்தை அதிகமாக்கிப் பறந்துகொண்டிருந்தன. சாலையின் மறுபக்கப் புல்வெளியில் அமர்ந்திருந்தவர்களுக்கு விஷயம் தெரியவே வாய்ப்பில்லாமலிருந்தது.
"இப்ப என்ன செய்யலாங்க?"
"என்ன செய்யலாமாவா?" வியப்பாய்ப் பார்த்தான் சுரேந்தர் "வா... போகலாம்..."