

ஆத்மநாதனை தெரியாத தமிழர்களே இருக்கமாட்டார்கள். ஏன்… ? சிறந்த எழுத்தாளர். அரசுப்பணியில் ஒய்வு பெற்றவுடன் மக்களின் பிரச்னைகளை அதிகமாக எழுதினார். அவர் சிறுகதை, ஆய்வுக்கட்டுரை, நாவல் என்று விதவிதமாக எழுதிக் குவித்தார்.
10 வருடங்களுக்கு முன் அவர் நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்த குறும்பர்கள் (அதாவது மலைவாழ் மக்கள்) பற்றி ஒரு ஆய்வு புத்தகம் எழுதினார். அதற்காக ஒரு மாதம் குறும்பர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களுடன் பேசி, அவர்கள் வாழ்க்கையில் என்ன பிரச்னை என்று உருக்கமாக எழுதினார். புத்தகத்தின் தலைப்பு ‘மலைவாழ் மக்கள்.’
இந்தப் புத்தகத்திற்குத்தான் அவர் ‘சாகத்திய அகாடமி விருது’ பெற்றார்.
அவர் பணத்திற்காக, புகழுக்காக எழுதவில்லை. எழுதுவதுதான் அவருக்குப்பிரியம். ஆனால் விருது, பணம் மற்றும் புகழ் எல்லாம் அவரைத் தேடி வந்தது. அவற்றைப் பணிவுடன் ஏற்றுக்கொண்டார்.
உருக்கம் மட்டுமே அல்ல. நல்ல நையாண்டித்தனமும் அவர் எழுத்தில் இருக்கும். அவர் படைப்புகள் எல்லாம் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
அவரது முதல் சிறுகதை பிரசுரமானது. ஆனால், அதில் தனது நையாண்டியும் இருந்தது. இணைய இதழ்கள் வராத காலம். 80களின் இறுதியில்தான் எழுதினார்.
அவருடைய முதல் சிறுகதை தலைப்பு ‘முதல் கதை’. அப்போது பிரபலமாக இருந்த அனைத்து வாரப் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தார்.
யாரும் பதில் போடவில்லை. கதையையும் திருப்பி அனுப்பவில்லை.
ஆத்மநாதன் மனம் சோர்வு அடைந்தது. ஆனால் மன சோர்வுக்கு ஆளாகவில்லை. கதைகள் அனுப்பிய பின்னர் ஒரு மாதம் கழித்து அவருக்கு ஒரு பிரபலமான வெகுஜனப் பத்திரிகை கதையை திருப்பி அனுப்பி இருந்தது.
அதில்… அந்தக் கதையின் இறுதியில் ஆத்மநாதன் வார்த்தைகள் 1027 என்று உண்மையை எழுதி இருந்தார்.
நல்ல கதையாக இருப்பதால் 1027 வார்த்தைகளைப் பத்திரிகை அனுமதிக்கும் என்று நினைத்தார். பத்திரிகையில் சிறுகதை 1000 வார்த்தைகள் மிகாமல் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே விளம்பரம் செய்து இருந்தது.
தனது முதல் கதை ‘முதல் கதை’ இறுதியில்…1027 வார்த்தைகள் என்பது சிவப்பு மையில் அடி கோடு போட்டு இருந்தது. பின்னர் ஆங்கிலத்தில் ‘Rejected’ (நிராகரிக்கப்பட்டது) என்று எழுதி இருந்தார் எடிட்டர்.
ஆத்மநாதன் கவலைப்பட்டார். அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
கம்ப்யூட்டர் சென்டருக்குச் சென்றார். தனது முதல் கதையை எடிட்டிங் செய்ய முடிவு செய்தார். கதையை மாற்றவில்லை. ஆனால், வார்த்தைகளைச் செதுக்கினார். சில இடங்களில் வார்த்தைகள் நீக்கப்பட்டதால் புது வார்த்தைகள் எழுதினார். இறுதியில் 999 வார்த்தைகளில் கதையை முடித்தார்.
கதையை 2, 3 முறை படித்தார். எந்தப் பிழையும் இல்லை. முன்னர் எழுதியதைவிட கதை சிறப்பாக வந்து இருந்தது.
இன்னும் ஒரு வார்த்தை சேர்க்கலாம். ஒரு வார்த்தை சேர்த்தால் வார்த்தைகள் அளவு மிக கச்சிதமாக 1000 என்று இருக்கும்.
அந்த ஒரு வார்த்தை என்ன..? அவர் யோசிக்கவே இல்லை.
ஏனெனில் அவர் ஏற்கனவே ஒரு திட்டம் போட்டு இருந்தார்.
செலக்டெட் (Selected) வார்த்தைகள் 1000 என்று முடித்தார்.
கையோடு பிரிண்ட் அவுட் எடுத்து அந்தப் பிரபலமானப் பத்திரைக்கு அனுப்பி வைத்தார். வார்த்தைகள் 1000 என்பதை அடிக்கோடு போட்டு காட்டி இருந்தார்.
இவரது கதையைப் படித்து எடிட்டர் சிரிக்க சிரிக்க, தனது உதவியாளரைக் கூப்பிட்டு, “இந்தக் கதையை அடுத்த வாரமே பப்லிஷ் பண்ணுங்கள்...” என்று புன்னகைத்தார்.
இப்படித்தான் ஆத்மநாதனின் 'முதல் கதை' பிரசுரமானது.
இன்று எங்கோ வந்துவிட்டார்...