

கமலத்துக்குப் பெருமை பிடிப்படவில்லை. அமெரிக்காவில் வேலை பார்க்கும் அவள் மகன் சுந்தர், கமலமும் அவள் கணவர் ஜெயராமனும் அமெரிக்கா வர விமான டிக்கெட் வாங்கிவிட்டான் என்பதைக் கேட்டதிலிருந்து அவளுக்கு மகிழ்ச்சியில் கால் தரையில் படவில்லை.
அன்று முதல் பரபரப்பாக வெளிநாட்டுப் பயணத்துக்குத் தங்களுக்குத் தேவையான சிலவற்றையும் மகன் மருமகளுக்குக் கொடுக்க எனவும் கமலம் பொருட்களை வாங்கிக்குவித்தாள். ஒருவழியாக எல்லாம் பேக் செய்து பயணம் செல்ல குறித்த நாளும் வந்தது.
முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் சொந்தபந்தங்கள் விமான நிலையம் வந்து வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர். சென்னையில் புறப்பட்டு இருபத்தி எட்டு மணி நேரம் பயணித்து அமெரிக்காவின் நாஷ்வில் நகருக்கு வந்து சேரும்போது இருவரும் மிகவும் சோர்ந்துதான் போனார்கள். மகனையும் மருமகளையும் விமான நிலையத்தில் பார்த்ததும்தான் உற்சாகமடைந்தனர். இருவருக்கும் அந்தப் புதிய காலசூழ்நிலை ஊரின் வனப்பு, எங்கு நோக்கினும் சுத்தம், மாறுதலான மனிதர்கள் என அனைத்தும் மிகுந்த வியப்பை அளித்தன.
கமலத்துக்கு இன்னும் நம்ப முடியவில்லை தான் அமெரிக்காவில் இருக்கிறோம் என்பதை. மகன் வீட்டுச் சமையல் அறையும் குளியலறையும் வீடு முழுவதும் கார்ப்பெட் பதித்திருப்பதையும் பார்த்து கமலம் பிரமித்துப் போனாள்.
வீட்டிலிருந்த மின்னணுச் சாதனங்களை உபயோகிக்க மருமகளிடம் கற்றுக்கொள்வதும் அவளுக்குப் புதுப்புது சமையல் குறிப்புகளைத் தருவதுமாக கமலத்திற்கு நாட்கள் பறந்துபோனது. மருமகள் பிரியாவும் அவளுடன் இணக்கமாக இருந்தது கமலத்துக்கு மகிழ்வைத் தந்தது.
ஆனால், வந்த இரு வாரங்களிலேயே ஜெயராமனுக்கு அமெரிக்க வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருந்தது. அவர் வங்கியில் வேலை பார்த்த நாட்களில் இடமாறுதல் வரும் என்பதற்காக பிரமோஷனே வேண்டாம் என்று இருந்தவர். அவருக்கு அம்மா, அப்பா எவ்வளவு முக்கியமோ அந்த அளவு கோவை கோனியம்மனும் ஈச்சனாரி விநாயகரும் முக்கியம். இங்கு எந்த இடம் போவதற்கும் மகனை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. மாலையில் சுந்தருடன் சிறிது பேசலாம் என்றால் அவன் ஆபீஸிலிருந்து வந்தபிறகும் மெயில் அனுப்புவது ஆப்ஷோர் கால் என பிஸியாகி விடுகிறான்.
வார விடுமுறை நாட்களில்தான் நால்வரும் சேர்ந்து அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுவர முடிந்தது.
ஜனக்கூட்டம் அதிகம் இல்லாத அந்த அழகான சுற்றுலா தலங்கள் அவர் மனதைக் கவர்ந்தது என்னவோ உண்மைதான். இப்படியே ஒரு மாதம் மந்தமாக கழிந்தது.
ஒரு நிலையில் ஜெயராமனுக்கு மிகுந்த வெறுப்பாகிவிட்டது. ‘என்ன ஊருடா... இது மனுஷத் தலையையே பார்க்கமுடியாம எல்லாம் கார்லயே போயிட்டு’ என நினைத்தவர் கண்களை மூடிக்கொண்டு 'உம்' என சோபாவில் அமர்ந்திருந்தார்.
மதிய உணவு முடித்து அவர் அருகில் வந்து அமர்ந்த கமலம் "ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ரொம்ப போர் அடிக்குதோ?" எனக் கேட்டாள்.
"எனக்கு எதுவும் பிடிக்கலை. நம்ம ஊருக்கு எப்படா கிளம்புவோம்னு இருக்கு" என்றார் ஜெயராமன் சலிப்புடன்.
கமலம் அதிர்ச்சியுடன் "என்ன இப்படிச் சொல்றீங்க? நாம இங்க வந்து ஒரு மாசம்தான் ஆச்சு. நம்ம மகன், மருமகளோட எவ்வளவு சந்தோசமா இருக்கோம். ஊரும் எவ்வளவு அழகாயிருக்கு பச்சை பசேல்னு" என்றாள். அமெரிக்காவில் சுந்தர் வசிக்கும் நாஷ்வில் இயற்கை சூழல் மிகுந்த அழகான சிறிய நகரம்.
"ஊரு நல்லாத்தான் இருக்கு, ஆனா யார் கூடவாவது பேசமுடியுதா? இல்ல யாராவது வீட்டை விட்டு வெளியே வராங்களா பாரு... இங்கே எல்லாம் அடைச்ச கதவுதான்" என்றார் ஜெயராமன் கோபத்துடன்.
"நம்ம பையனோட இப்பதான் ஏழு எட்டு வருஷத்துக்கு அப்புறம் நாம சேர்ந்து ஆறு மாசம் இருக்கப்போறோம். படிப்பு, வேலைன்னு அவன் நம்ம ஊரை விட்டுப்போய் ரொம்ப நாள் ஆச்சு" என்றாள் கமலம் ஆதங்கத்துடன்.
"ஆமா யாரு இல்லைன்னாங்க? இந்த ஊர்ல ஆறு மாசம் நான் இருந்தா எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும்" என்றவர் கோபமாக தங்கள் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டார். கமலம் செய்வதறியாமல் சோபாவிலேயே அமர்ந்திருந்தாள்.
மாலை சுந்தர் ஆபீஸில் இருந்து வந்தவுடன் பிரியா அவனிடம் பெரியவர்களின் உரையாடலைப் பற்றி கூறி தினமும் அவன் தந்தையிடம் சற்று நேரம் செலவழிக்க அறிவுறுத்தினாள்.
அவனும் "ஆமாம் பிரியா... அவரு டூவீலர்ல கோவை முழுக்க சுத்தி வந்தவரு. அவரைக் கட்டிப்போட்ட மாதிரி இப்படி இருக்க சொன்னா கஷ்டம்தான்" என்று கூறியபடி பெற்றோரின் அறைக்குள் சென்றான்.
அவனைப் பார்த்ததும் ஜெயராமன் "வாப்பா சுந்தர்..." என உரத்தக் குரலில் வரவேற்று உற்சாகமாக இருப்பது போல் காட்டிக் கொண்டார்.
தந்தையின் அருகில் அமர்ந்த சுந்தர், "அப்பா... நாளைக்கு நாம எல்லாரும் எங்க மேனேஜர் வீட்டுக்கு டின்னருக்குப் போகலாம்பா... அவரு போன வாரமே வரச் சொன்னாரு" என்றவன் அவர் கைகளை வாஞ்சையுடன் பற்றிக்கொண்டான். சற்று நேரம் மூவரும் அவர்கள் ஊர்க் கதைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த பிரியாவும் அதில் கலந்துகொண்டாள்.
மறுநாள் மாலை அனைவரும் ஹெர்மிட்டேஜ் என்ற இடத்தில் உள்ள சுந்தரின் மேனேஜர் வீட்டுக்குக் கிளம்பினர். கார் கிளம்பியதும் ஹெர்மிட்டேஜ் இங்கிருந்து எவ்வளவு தூரம் என்ற ஜெயராமனிடம், "ஒரு 40 கிலோ மீட்டர் இருக்கும். ஆனால், 20 நிமிஷத்துல போயிடலாம்பா. அவங்க வீடு பார்த்தா... அசந்து போற மாதிரி இருக்கும்" என்றான் சுந்தர்.
சுந்தரின் கார் அழகான எழில் மிகுத் தோற்றத்துடன்கூடிய ஒரு பங்களா முன் வந்து நின்றது. சுந்தரின் மேனேஜர் மனோஜ் வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்றார். அவரின் பிள்ளைகள் இருவரும் "வாங்க வணக்கம்" என தமிழில் வரவேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.
மனோஜ் தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்துவைத்தார். ஜெயராமனுக்கு மனோஜின் தந்தை கிருஷ்ணனைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. அவர் மரியாதைக்குரிய தோற்றத்துடன் இருந்தார்.
சிறிது நேரம் அறிமுக பேச்சுக்களுக்குப் பின் அவர் ஜெயராமனிடம் "என்ன சார் இந்த ஊர் எப்படி இருக்கு. உங்களுக்கு பிடிச்சிருக்கா?" என்றதும், "என்ன சார் ஊரு இது. எல்லாரும் தனித்தனி தீவு மாதிரி இருக்காங்க.
நம்ம ஊர்க்காரங்களும் இங்கே பிழைக்க வந்துட்டு இதே மாதிரி ஆயிட்டாங்க. நம்ம ஊரு மாதிரி கோயில், குளம், திருவிழா ஏதாவது இருக்கா? எனக்கு எதுவும் பிடிக்கல. நான் சீக்கிரம் நம்ம ஊருக்குக் கிளம்பிடலாம்னு இருக்கேன்" என பொரிந்து தள்ளிவிட்டார் ஜெயராமன்.
"உங்க கருத்துக்கு மாற்றுக் கருத்து ஒன்று சொல்லலாமா?" என்று கேட்ட கிருஷ்ணனிடம் "தாராளமாச் சொல்லுங்க சார்?" என்றார் ஜெயராமன். கிருஷ்ணன் ஒரு பெருமூச்சுக்குப் பின் கூறினார், "எங்களின் ஒரே மகன் மனோஜ் இந்த நாட்டிற்கு வேலைக்கு வந்த பின்தான் அடிமட்டத்திலிருந்த எங்கள் குடும்பப் பொருளாதாரம் நன்கு மேம்பட்டு எங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.
நானும் உங்களைப்போலதான் ஜெயராமன் இங்கு வரும்போது எல்லாம் எனக்கு இந்த நாட்டின் தட்பவெப்ப நிலை, மொழி, நேர வித்தியாசம், இந்த மக்களின் வாழ்க்கை முறை என எல்லாமே வெறுப்பாகத்தான் இருந்தது" என்றார் கிருஷ்ணன்.
"அப்படி என்றால் நீங்கள் நம் நாட்டிலேயே வசிக்கலாமே?" என்றார் ஜெயராமன்.
"ம்... வசிக்கலாம். ஆனால், நான்கு வருடங்களுக்கு முன் என் மனைவி இறந்ததும் நான் தனியாக நம் நாட்டிலும் என் மகன் குடும்பம் இந்த நாட்டிலும் என இருந்தது எங்கள் இருவருக்கும் மன வருத்தத்தைத்தான் அளித்தது" என்ற கிருஷ்ணனிடம் "ஏன் உங்கள் மகன் நம் நாட்டிற்கு வந்து இருக்கலாமே" என வினவினார் ஜெயராமன்.
"சில சூழ்நிலைகளால் மனோஜாலும் இந்தியா வர இயலவில்லை" என்று கூறிய கிருஷ்ணன் "அதன் பின் நாங்கள் அனைவரும் சேர்ந்து இருப்பதுதான் எங்களுக்கு மன வலிமையைத் தரும் என புரிந்துகொண்டேன். இந்த வாழ்க்கை ஒரு வரம் ஜெயராமன், எத்தனையோ பிறவிகளுக்குப் பிறகுதான் நமக்கு மனிதப் பிறவி கிடைப்பதாக சொல்கின்றனர். அதைப் பயனுள்ளதாக உன்னதமாக்கிக் கொள்வது நம் கைகளில்தான் இருக்கிறது.
ஆலமரத்தின் வேர் ஒரு இடத்தில் இருந்தாலும் அதன் விழுதுகள் பரந்து விரிந்து அந்த மரத்தைத் தாங்குவதுபோல உலகமயமாதலில் நம் பிள்ளைகள் பல நாடுகளில் காலூன்றுவது காலத்தின் கட்டாயம்.
நம் தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எத்தனையோ மனிதர்களுடன் பல விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளும்போது நம் பிள்ளைகளுக்காக நாம் இதைச் செய்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது.
பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் பெற்றவர்களின் கடமை என நான் நினைத்தேன். அதனால் நான் இங்கேயே வந்து வசிக்கிறேன். பேரக்குழந்தைகளின் அன்பில் திளைக்கிறேன்.
அவர்களிடம் நம் நாட்டின் பெருமையை நம் மொழியின் சிறப்பை, நம் கலாச்சாரத்தை, தலைசிறந்த மனிதர்களின் மாண்புகளைக் கூறி அவர்களைப் பண்பாளர்கள் ஆக்குவது என் கடமை என உணர்கிறேன்.
யார் கண்டது வருங்காலத்தில் என் பேரனுக்கு நம் நாட்டில் நல்ல வேலை கிடைத்து மனோஜ் இந்தியா வந்து வசிக்கும்படியும் காலம் மாறலாம்" என சிரித்தபடி முடித்தார் கிருஷ்ணன்.
அதன்பின் அனைவரும் கலகலப்பாக பேசியபடி ஒரு நல்ல விருந்தை சுவைத்துமுடித்து வீடு திரும்பினர்.
வீடு திரும்பியவுடன் கமலம் "என்ன ஊருக்கு எப்பக் கிளம்பலாம்?" என்றாள் ஜெயராமனிடம்.
"நம் பயணத் திட்டத்தின்படியே இன்னும் ஐந்து மாதங்கள் கழித்து ஊருக்குச் செல்லலாம்" என்றார் ஜெயராமன் சிரித்தபடி.