

சுப்ரமணியை திருநாகக்குடியில் 2002 ஆண்டு வரை யாருக்கும் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அந்த கிராமத்து சிறிய போஸ்ட் ஆபீஸ் போஸ்ட்மாஸ்டரைக் கேட்டால் கரெக்ட்டாகச் சொல்லிவிடுவார். அது ஒற்றை ஆள் போஸ்ட் ஆபீஸ். அவர் தான் எல்லாமே.... ஸ்டாம்ப் விற்பதில் இருந்து சேமிப்புக் கணக்கு, ரெஜிஸ்டர் தபால் சாதா தபால் பையில் போட்டு முடிந்து கொண்டு சேர்க்கும் வரை..
என்ன ஒரு விசேஷம் என்றால் சுப்ரமணி மட்டும் இல்லை என்றால் அந்த போஸ்ட் ஆஃபீஸ் அங்கு தேவை இல்லை என இழுத்து மூடி இருப்பார்கள்.. அதற்கு உயிர் தருவதே சுப்ரமணி தான்.
அதனால் போஸ்ட் மாஸ்ட்டரும் அவனுக்கு நல்ல மரியாதை தருவார்.. தினசரி விசிட்டர் அவன் தானே! சுப்ரமணி கொல்லையில் விளையும் கொய்யாப்பழம், மாம்பழம், காய்கறிகள், கீரை அவருக்குத் தருவான். வெயில் நேரத்தில் மோர் கொண்டு போய் தருவான் அவருக்கு…
“ யாரு போஸ்ட்கார்டு சுப்ரமணியா? காலையில் தினம் வந்து 50 போஸ்ட் கார்டுகள் வாங்குவார்.. மதியம் அங்கே வந்து அந்தக் கார்டுகளைப் பெட்டியில் போடுவார் அவர்தானே?” என அக்கம் பக்கம் உள்ளவர்களும் அவனை அறிவார்கள்.