

காலை 7 மணி இருக்கும். ‘சாணை பிடிக்கலையோ சாணை...’ என்று கூவியபடி கத்தி, அருவா, கத்தரிக்கோல், அருவாமணைகளுக்கு சாணை பிடிக்கும் வீரப்பன் முதுகில் சாணை மிஷினை தொங்கவிட்டபடி மெதுவாக நடந்துகொண்டிருந்தான்.
மூணடி உயரத்தில் நாலு இரும்புக் குழாய்களாலான ஒரு ஸ்டாண்டின் நடுவில் ஒரு சைக்கிள் ரிம்தான் வீல். காலடியில் மேலும் கீழும் தையல் மிஷினை மிதிக்கும் பெடல் போல மரப்பலகையாலான ஒரு கட்டை. நாலு இரும்புக் குழாய்களையும் ஒன்று சேர்த்து அதோடு மேல் பகுதியில் இணைத்து பத்தவைக்கப்பட்ட சாணைக்கல்.
ரிம்மும் சாணைக்கல்லையும் இணைக்கும் தோல் அல்லது ரப்பராலான வார். பலகையை மிதிக்கும்போது ரிம்மோடு சேர்ந்து சுழலும் சாணைக்கல்லில் இரும்பாலான உபகரணங்களை வாகாக பிடித்து உராயவிட்டால் தீப்பொறி பறக்கும். பத்து நிமிடங்களில் மழுங்கிப்போன கத்தி, அருவாமணைகள் புதுப் பொலிவுடன் கூராகும். இதுதான் வீரப்பனின் பின்புற முதுகில் தொங்கி முன்புற வயிற்றை ரொப்பும் வாழ்வாதாரம்.
அந்தக் காலை நேரத்திலேயே அவனது உடம்பு வேர்த்திருந்தது. முகத்தில் சோர்வு தெரிந்தது. வேலை முடித்து வீட்டுக்குத் திரும்புபவனின் களைப்பு அப்பதான் வேலையை ஆரம்பிக்கும் வீரப்பனின் தளர்ந்த நடையில் தெரிந்தது.