

அலைபேசியின் ஒலி அடித்துக் கொண்டே இருந்தது…
பக்கத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த பசுபதி, “அண்ணே போனு அடிச்சுகிட்டே இருக்கு.. என்னன்னு பாருங்க..!”
இரும்புக் கதவிற்கு வெல்டிங் வைப்பதில் மும்முரமாக இருந்த கணேசன், பசுபதி கூறுவதைக் கேட்டுப் போனை எடுத்தார்.
எதிரே மனைவி, “ஏங்க.. வரும்போது இருபது அகல் விளக்கும், அரைலிட்டர் நல்லெண்ணெய்யும் வாங்கிட்டு வந்துருங்க..! இன்னைக்கு மட்டும் கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்கங்க.. ஒரு விஷயம் இருக்கு..!”
“சரி.. சரி.. வாங்கிட்டு வரேன்.”
கணேசன் போனை வைத்துவிட்டு, மீண்டும் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
மாலை 5 மணி என்ற மணிச் சத்தம் பக்கத்தில் இருந்த, பூமாரியம்மன் கோவிலில் ஒலிக்க ஆரம்பித்தது.
கணேசன் நேராக முதலாளியிடம் சென்று, “அண்ணே.. இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போய்க்கிட வா..?”
“சரி கணேசா..!”
“அண்ணே அப்புறம் வீட்டுக்கு கொஞ்சம் சாமா வாங்கணும்.. ஒரு 500 கிடைக்குமா..? இந்த வாரம் சம்பளத்துல பிடிச்சுக்கோங்கண்ணே..!”
“சரி இந்தா.”
சாப்பாட்டுக் கூடையை கையில் எடுத்துக்கொண்டு, சைக்கிளின் முன்புறம் மாட்டி வீட்டிற்குப் புறப்பட ஆயத்தமானார் கணேசன்.